Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, April 30, 2020

WEB SERIES – 006.

கடலில் கரையைதாண்டி இடுப்பு, மார்பு, கழுத்தளவு நீருக்குள் சென்று அலைகளை ரசிப்பதும், அதில் அமிழ்வதும் எப்படியான ஒரு த்ரில்லிங் அனுபவமோ. அப்படியான ஒரு அனுபவம் நாம் பார்க்கும் க்ரைம், ஆக்ஷன் படங்கள் மற்றும் தொடர்கள். இப்படியான எதற்குள்ளும் நுழையாமல், கரையில் அலை தொடும் எல்லையில் அமர்ந்து, எப்போதேனும் நம் பாதம் மட்டும் நனைத்து செல்லும் அலையையும், எட்டும் தூரத்தில் பரந்துவிரிந்த கடலையும்  ரசிப்பது எப்படியான ஒரு ஏகாந்த நிறைவை தருமோ அப்படியான ஒரு அனுபவம் இந்த தொடர். காதலும் கடந்து போகும், சார்லி போன்று எப்பொழுதேனும் நடக்கும் மேஜிக்.

குறிப்பு : இது காதோல் கதையல்ல.

தன்னுடன் இஞ்சினியரிங் பயின்ற ஒரே நண்பனும் லட்சங்களில் சம்பாதிக்க. இந்திய வரைபடத்தில் எங்கோ ஒரு புள்ளியாக கூட இல்லாத ஒரு கீழ்மட்ட கிராமத்தில் கிடைத்த பஞ்சாயத்து செக்ரேட்ரரி பணிக்கு செல்வதில் இருந்து கதை துவங்குகிறது.  சட்டென நம்மால் யூகித்திட முடியும் அவர் அங்கே பல இன்னல்களுக்கு ஆளாகி, இறுதியாக அந்த குக்கிராமத்தை இந்தியாவின் சிறந்த மாதிரி கிராமமாக உருவாக்குகிறார். இதற்கான விருதையும் முதலமைச்சர் அல்லது பிரதமரிடம் ஒரு விழாவில் பெறுகிறார். கூடுதலாக அந்த கிராமத்தில் ஒரு காதலையும்.


இப்படியான எந்த வழக்கமான சங்கதிகளும் மருந்துக்கும் கூட இந்த கதையில் இல்லாமல் பார்த்து செய்ததே இதன் சிறப்பு. இந்த கதைக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த களம். அதை இந்த கதையின் மொத்த காட்சிகளிலும் எத்தனை தூரம் ஒன்றி பிணைத்து உள்ளார்கள் என்பதே இதன் வெற்றி. அடுத்து இதில் பங்குபெற்ற பாத்திரங்கள். பிரசிடன்ட், அவரின் கணவர், மற்றும் நாயகனின் உதவியாளர் என இந்த பிரதான பாத்திரங்கள் மட்டுமின்றி. இந்த மொத்த தொடரில் ஓரிரு காட்சிகள் மட்டுமே வரும் அத்துணை துணை பாத்திரங்களும் (பெரும்பாலும் புதுமுகங்கள் என்றே யூகம்) தனக்கான பணியை மட்டுமே செய்தது.


நாயகன் தான் பெரிய எந்த விருப்பமும் இல்லாமலே இந்த பணிக்கு வருகிறார். மேலும் தனது மேற்படிப்பிற்கு உண்டான ஆயத்தங்களில் மட்டுமே அதிக நேராம் செலவிடுகிறார். தொடரின் எந்த இடத்திலும் ஒரு அரசு அதிகாரி தான் உண்டு தனது வேலை உண்டு என்ற நிலையிலேயே இருக்கிறார். ஒரு காட்சியில் தனது ஏழ்மை நிலையை எடுத்து கூறி, தனது குழந்தைகளின் பசிக்கு ஆவணசெய்யும்படி அந்த பெரியவர் இறைஞ்சும் காட்சியில்கூட. கையில் அவரது மணிபர்ஸ் இருக்கும். சட்டென அந்த இடத்தைவிட்டு விலகிவிடுவார்.
பின் தனது பணியில் ஏதேனும் ஊழல் தவறை கண்டுபிடித்து எதிர்த்து அந்த கிராமத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல், தானே ஏதேனும் தவறிழைத்து அதிலிருந்து மீண்டுவரவேண்டும். இது ஏதுமில்லையெனில் அந்த ஊரின் பெரிய மனிதர் பெண்ணையாவது காதலிக்க வேண்டும். ஆனால் இவை ஏதுமில்லாமல் கதையில் என்ன சுவாரசியம் என்கிறீர்களா? இந்த கதை காலத்துக்கும் ஒரே வேகத்தில் சுழலும் ஒரு மின்விசிறியை போல, ஒரே அளவில் அதே  பணியை செய்யும் நொடி முள்ளை போல முழுக்கவும் ஒரே சமஅளவில் எந்த பரபரப்பும் இல்லாமல் நகரும் கதை.  

      

ஆனால்ச ட்டென நம்மை உள்ளிழுத்து கொள்ளும் கதை.  இறுதிவரை எங்குமே அது நம்மை சலிப்படையவோ அடுத்த எபிசோடை தாமதமாக பின்னொரு நேரம் பார்த்து கொள்ள சம்மதிக்காது. இதுவரை நாம் பார்த்த அனைத்து இந்திய சீரீஸ்களில் இதுவே சிறந்தது என உறுதியாக கூறிடயியலாது. அது அவரவர் ரசனை சார்ந்தது. ஆனால் இது தரும் அனுபவம், இதுவரை நீங்கள் பார்த்த எந்த இந்திய தொடர்களிலும் உணர்ந்திடாதது.     AMAZON PRIME ல் கிடைக்கிறது. 

Tuesday, April 28, 2020


WEB SERIES – 005 - II

ஒரு chemistry professor ஒரு உதவாக்கரை டிரக் சப்ளையரை வெச்சி, இவரே டிரக் தயாரிச்சி பணத்தாசைல அவர் பாட்னர் அந்த சப்ளையர் மூலமா பணம் பண்ண ஆரமிக்கறாரு. மார்கெட்ல இதோட குவாலிட்டிக்கு செம்ம டிமாண்ட். சரி அப்ப நல்ல பார்டிக்கு மொத்தமா கைமாத்தி விட்டா, இன்னும் நல்ல லாபம் பாக்க பாக்கலாம். இந்த நினைப்பில் அவங்க எடுத்து வைக்கும் முதல் அடியே அவங்களுக்கு பெரிய வினையாக மாறி இரண்டு கொலைகளில் முடியுது. அதையும் தன்னோட கெமிக்கல் மூளையை பயன்படுத்தி சரிபன்றார்.


இப்ப கையில் காசு பாத்துட்டு சும்மா இருக்க முடியாம. வேறொரு பெரிய ட்ரக் சப்ளையரை அவர் பாட்னர் சந்திக்க. திரும்ப அவன் மூலமே வேறொரு பிரச்சனை முளைக்குது. அதையும் இவரே சமாளிச்சி, அவன் மூலமா நல்ல லாபம் பாக்கறாங்க. அங்கயும் ஒரு பெரிய பிரச்சனை இவரோட அந்த பாட்னர் மூலமே. வியாபாரம் கொஞ்சம் பெரிய நபரிடம் பண்றதால, பிரச்சனையும் இந்த முறை பெருசு. கண்டிப்பா உயிர்போகும் நிலை. ரொம்ப சரியா அந்த இடத்தோட முதல் சீசன் முடியுது.


முதல் சீசனிலே இவங்க ரெண்டு முக்கிய பாத்திரம் இல்லாம, இவர் மனைவியுடைய சகோதரி கணவர் இருப்பார். அவர் ஆன்டி ட்ரக் டிபார்ட்மென்ட்ல முக்கிய அதிகாரியாக இருப்பார். இவர் professor அதுக்கேத்த upper middle class life.  அவர் மனைவி உட்பட யாருக்குமே தெரியாது. அதிலும் அந்த அதிகாரி இவங்க குடும்பத்துல ஒருவர் போல ரொம்ப நெருக்கம். முன்பே குறிப்பிட்ட அந்த பெரிய ட்ரக் டீலருடைய பிரச்சனை அங்கே வருவோம்.
அந்த ட்ரக் முக்கிய புள்ளியை இவங்க டிபார்ட்மென்ட்ல கண்காணிச்சிட்டே இருப்பாங்க. 
ரொம்ப சரியான நேரத்துல அவன் நாயகனையும் அவரோட பாட்னரையும் ஒரு சந்தேகத்துல கடத்திடுவான். கண்டிப்பா உயிர் போகக்கூடிய சூழல். ஒருபக்கம் அவர் சகலை வில்லனை தேடி வர. மாட்டினால் கர்ப்பிணி மனைவி, மகன், பணிபுரியும் பள்ளி தனது மொத்த கௌரவமும் சிதையும் சூழல். பெரிய பரபர ஆக்க்ஷன்கதை போலவே தோன்றும். ஆனால் கதை முதல் சீசன் முதலே ஒரு நிதானத்துடனே பயணிக்கும். இத்தனை பரபரப்பிலும் இவரின் குடும்ப பின்னணியே பிரதானம் வகிக்கும். துவக்கம் முதல் இந்த நிதானமே நம்மை கட்டிபோடும். தள்ளிபோட்டு பின் பார்த்துக்கொள்ள கூடிய சந்தர்பங்களை அவை நமக்கு வழங்காது.



அந்த கடத்தல் எனும் பரபரப்பு சூழலில் முடிவுற்ற முதல் சீசனின் இந்த பாகமும் மிகபெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுடன். அடுத்த எபிசோடின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தே உள்ளது. இந்த சீசன் முழுக்க கதை நாம் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நம்மை பெரிதும் திருப்திபடுத்தியே உள்ளது. சொற்ப பாத்திரங்களை கொண்டே  இத்தனை சீசன் சலிப்பில்லாமல் நகர்த்தும் சரியான திரைக்கதை.

Saturday, April 25, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 162.

சொல்லவரும் கதைக்குள் துவக்கத்திலே நுழைந்து அங்கிருந்து அந்த கதையை பரபரபாக்குவது ஒருவகை. தான் சொல்லவரும் கதைக்கான காராணத்தை முதலில் அழுத்தமாக பதித்து, அதன்பின் நிகழும் சம்பவங்களை நெகிழ்ச்சியாக சொல்வதும் ஒருவகை. முதல்வகையில் நிச்சயம் பரபரப்பு இருந்தாலும் அந்த அழுத்தமோ அல்லது நெகிழ்ச்சியோ ஏதோ ஒன்றில் முழுமை இருக்காது. ஆனால் அந்த பரபர திரைக்கதையால், இந்த கதைக்கு இவை தேவையில்லை என நமக்கும் தோன்ற செய்யும்.


ஆனால் இந்த இரண்டாம் வகை கதையில் அந்த முழுமையை நாம் முழுக்க உணரசெய்வதும். குறிப்பிட்ட அந்த பாத்திரங்களுடன் நம்மை ஒன்றசெய்து, அவர்களின் நெகிழ்ச்சியான தருணங்களில் நமக்கு முழுமையை உணரசெய்வதும். இந்தபடம் இரண்டாம் வகையை சார்ந்தது.

     
நாயகனின் சிறு வயதிலிருந்தே கதை துவங்குகிறது. அவன் துவக்கம் முதலே எந்த முடிவையும் தானே எடுப்பதில்லை. அதில் அவனுக்கு அன்றில் இருந்தே பெரும் குழப்பங்கள் உண்டு. திருமணமும் முடிந்து ஒரு மகளுக்கு பின் மனைவியும் தவறிட்றாங்க. இந்த நிலையில் மகள், தந்தையிடம் தன் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு லண்டன் பிரபல பல்கலைகழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தான் நிச்சயம் நல்ல மதிப்பெண்களுடன் லண்டன் செல்லபோவதாக கூறுகிறாள்.
சராசரி மாணவியான அவள். அதற்காக கடினமாக படிக்க துவங்கி அதற்கான தகுதியும் பெறுகிறாள். அதில் நாயகன் செய்யும் சிறுகுழப்பத்தில் அந்த வாய்ப்பு அவர் மகளுக்கு கிடைக்காமல் போகிறது. 2.30 மணிநேர கதையில் இந்த காட்சிகள் 40-50 நிமிடங்கள் வரும்.  இதற்கு பின்னே கதையின் மிகமுக்கிய தருணங்கள். அதாவது துவக்கத்தில் கூறியது போல், கதைக்கான கருவை அழுத்தமான காட்சிகளின் மூலம் பதித்து அங்கிருந்து பின் நிகழும் சம்பவங்கள் என செல்லும் முறை.
ஆனால் இந்த கதையில் ஆரம்ப 40-50 நிமிடங்கள் எந்த அழுத்தமான நிகழ்வுகளும் இல்லாமல் கலகலப்பாக மட்டுமே நகரும். ஆனால் அதன்பின் கதையில் நிகழும் பெரும்பாலான அழுத்தமான காட்சிகளுக்கும் முன்னுரை இந்த ஆரம்ப கலகல பகுதியில் இருந்தே எடுக்கபட்டிருக்கும். குறிப்பாக தனது தவறால் மகளின் கனவான லண்டன் சென்று படிப்பது இயலாததாகிறது. தனது முழுசெலவில் படிக்கவைப்பதாக மகளிடம் சொல்லவேண்டும் இது சுட்ச்வேஷன். கதையின் துவக்கத்தில் ஒரே ஷாட் மட்டுமே அவரின் மனைவி வருவார்.


அதில் ஒருசில வரி வசனங்கள் மட்டுமே இருவருக்கும் இருக்கும். அதை இந்த இடத்தில் சொல்லி தன்மகளை தேற்றும்போதுதான் துவக்கத்தில் அந்த ஷாட் அவசியம் நமக்கு புரியவரும். ரொம்பவே எமோஷனலான சீன் அது. படம் முழுக்க இப்படியான நிறைய அழுத்தமான காட்சிகள். ரசிக்கவைக்கும்படியான நகைச்சுவை கதை முழுக்கவே. அதிலும் லண்டன் இமிக்ரேஷன் பகுதியும், அதை தொடர்ந்த இடைவேளை காட்சியும். அதிலும் அங்குபோய் மகள் வெற்றியுடன் திரும்புவதாக வழக்கமாக படத்தை முடிக்காமல். இரண்டாம் பாதி முழுக்க அங்கு (LONDON) உள்ள சிரமங்களையும் கலகலப்பாக அங்கிருந்தே சொன்னது நச்.


நமது பெரும்பான்மையான கதை தேர்வுகள் க்ரைம், ஆக்க்ஷன் சுற்றியே இருப்பதால், இந்த படம் எளிதில் நம்மை இலகுவாக்கும். HOTSTARல் கிடைக்கிறது. தவறாமல் பார்க்க முயற்சிக்கவும்.

Wednesday, April 22, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 161.

பெரும் தொழிலதிபர் அம்மாநிலத்தின் அடையாளம். ஒரு நெடுஞ்சாலை உணவகத்திற்கு வருகிறார். அங்கிருக்கும் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் துவங்குவதற்கான அதிரடி இசை வாடிக்கையாளர் அனைவரின்  கவனத்தையும் ஈர்க்கிறது. அதில் பிரபல வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தின் CCTV காட்சிகள் ஒளிபரப்பபடுகிறது. அதில் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கும் அம்மாநிலத்தின் அடையாளமான அந்த  தொழிலதிபர்தான் இருக்கிறார். மேலும் அவரை தடுக்கும் அவ்வங்கியின் பாதுகாவலரையும் தனது துப்பாக்கியில் சுடுகிறார்.


மேலும் அவரின் வக்கீல் காவல்துறையிடம் அவரால் இதை போன்றே நான்கு வங்கிகளை ஒரே சமயத்தில் வாங்கமுடியும். அவர் எதற்காக இந்த சிறுதொகைக்காக கொள்ளையில் ஈடுபடவேண்டும் என வாதாடுகிறார். சமீபத்தில்தான் இவர் 2500 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் நிரபராதியென நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது. எனில் இத்தனை பெரிய மனிதர் இந்தகொள்ளையில் ஈடுபட காரணம் என்ன? முக்கிய குறிப்பு இது இரட்டைவேட கதையும் அல்ல.


ஒரு ஒப்பனை கலைஞன். அவரின் தந்தை சினிமாவில் புகழ்பெற்ற ஒப்பனையாளர். அதலால் சிறுவயது முதலே தன் தந்தையிடம் அதன் முழுமையும் கற்கிறார். உடன் ஒப்பனை குறித்த புத்தகங்கள் முதல், அதன் இறுதி அப்டேட் வரை இணையத்திலும் படித்து தேர்கிறார். தனது தந்தை இறந்ததும். அவரின் நண்பரின் மூலம் சில சினிமாக்களில் பணிபுரிகிறார். ஆனால் தனது பனியின் நேர்மை காரணமாக. காட்சிக்காக எந்த Compromise செய்து கொள்ளாததால் அவரால் தொடர்ந்து எங்கும் பணிபுரிய முடியவில்லை. வேறு எந்த தொழிலும் தெரியாத இந்த சூழலலிலும் தன்தொழிலில் தான்கொண்ட உறுதியுடனே இருக்கிறார். அவருள் அந்த முழுமையான கலைஞன் உயிர்ப்புடனே இருக்கிறார்.


ஒரு வக்கீல். அந்த ஒப்பனை கலைஞனை போன்றே சிறுவயது முதல் சட்டத்தின் மீது ஈர்ப்பு உள்ளவன். சட்டம் முதல் வருடம் பயின்று வருகிறான். எதிர்பாரா சூழலில் தன் தந்தையை கொலை செய்கிறான். அதையும் ரசித்தே செய்கிறான். சிறுவர் சீர்திருத்த பள்ளியில், முழுநேரத்தையும் சட்டத்தை படிப்பதிலே செலவிடுகிறான். வெளியே வந்ததும் நீதிமன்றங்களுக்கு சென்று அங்கு ஒரு வழக்கை எவ்வாறு கையாள்கிறார்கள் என தீவிரமாக கற்கிறான்.
முதல் வருடத்திற்கு பின் தன் சட்டபடிப்பை தொடரமுடியாதவன். அங்கிருக்கும் வக்கீல்களிடம் தன்னை தற்போது பயிற்சியில் இருக்கும் வக்கீலாகவே அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்களின் வழக்குகளில் உள்ள நுண்ணிய தவறுகளை சுட்டிக்காட்டி அதை எவ்வாறு கையாள வேண்டுமென கூறிவருகிறான். நீதிமன்றத்திற்கு வெளியே தனி அலுவலகமும் வைத்து இந்த யோசனையை செயல்படுத்தியே நல்ல பொருள் ஈட்டி வருகிறான். ஆனால் அவனுள் இருந்த கொலைகாரன் அதே ரசனையுடன் விழித்தே இருக்கிறான்.


இந்த இருவேறு பாத்திரங்களும் கதையில் இணையும் ரொம்ப முக்கிய காட்சி ஒன்று உள்ளது. அதுவரைக்குமான கதைக்கும். அதன்பின் இந்தக்கதை செல்லும் விதமும் நம்மை பெரிய ஆச்சர்யத்திற்கு உட்படுத்தும். சமீபமா இந்தளவு அடர்த்தியான வசனங்களை முழுகதையிலும் நாம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த படம் ப்ரைம்ல் தமிழ் சப்டைட்டிலுடனே கிடைக்கிறது.



இந்த இரு பாத்திரங்களும் சம்மந்தமில்லாத முதல்பத்தியில் குறிப்பிட்ட அந்த தொழிலதிபரின் அசம்பாவிததிற்கும் காரணமாகின்றனர். அவர்மட்டுமல்ல இன்னும் சிலரின் வாழ்கையிலும். இந்திய சினிமாவின் உண்மையான சைக்லாஜிக்கல் திர்ல்லர். ஒரு உண்மையான புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்.             

Tuesday, April 21, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 160.

Pixar, Walt Disney, Dream Works போன்ற பிரபல நிறுவனங்களின் பரவலாக அனைவராலும் அறியப்பட்ட அனிமேஷன் படங்களாக இல்லாமல். அதேபோல் தொழில்நுட்பத்தில் சிறந்த அனிமேஷன் படங்களை தேடியதில் சட்டென வசீகரித்த அட்டகாச ப்ரெஞ்ச் திரைப்படம் இது.  


முதல் ஷாட் ஒரு மலைவாசதலத்தில் கதிரவனின் வெப்பம் முழுதும் ஆட்கொள்ளாத ரம்மியமான சூழலில் ஒரு தம்பதியர் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் காட்சி. அப்பெண்ணிற்கு சட்டென பிரசவவலி ஏற்பட. அவர்களின் உணவு பொருட்கள், பழங்கள், தின்பண்டங்கள் வரை அனைத்தையும் அங்கேயே விட்டு அவர்கள் வாகனம் கிளம்புகிறது.


ஒன்றரை மணிநேர திரைப்படத்தில் இந்த காட்சியானது ஒரு மூன்று நிமிடங்கள் (டைட்டில் கார்டும் சேர்த்து) இருக்கும். அந்த நிமிடம் வரை எந்தவித சிறு ஒலியும், அதாவது பறவைகளின் கிரீச்சிடல் கூட இல்லாமல் இருந்த பேரமைதி சூழலை கிழித்துகொண்டு நிறைய வாகனங்கள் செல்வதை போன்ற பெரும்சப்தம். ஆனால் நிமிடங்களில் நாம் உணரமுடியும் அவை அங்கிருக்கும் சிறுபூச்சி, வண்டுகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற சிறு பறவை இனங்களின் ஒலியென. கதை இங்கிருந்து நம்மை அவர்களின் உலகிற்குள் கூட்டிசென்றிடும். அவ்வழியே உணவு சேகரிக்க வரும் எறும்புகுழு, புதிதாக ஏதோ நறுமணம் கவர. அந்த தம்பதியர் விட்டுசென்ற தின்பண்டங்கள் இருக்கும் இடம்தேடி வருகிறது. ஜாக்பாட் அடித்ததை போல அவர்களுக்கு கிடைப்பது ஒரு டின் நிறைய சக்கரை கட்டிகள். அதுவரை அப்படியான ஒரு சுவையை உணர்ந்தே இல்லாத அந்த எறும்புகள். அதுவரை சேகரித்த பொருட்களை அங்கேயே விட்டு, சக்கரை கட்டிகளை அந்த பாக்ஸ்ஸுடனே (டின்) எடுத்து செல்ல துவங்குகிறது அந்த அப்பாவி கருப்பு எறும்புகள்.
வழியில் அவை சந்திக்கும் தடங்கல்களை கடந்து அவை எவ்வாறு தனது இருப்பிடம் சென்று சேர்கிறது என்பது மட்டுமல்ல இந்த கதை. அவை கொண்டு சேர்த்த அந்த அந்த கட்டிகளால் அந்த முழுஎறும்பு கூட்டமும் சந்திக்கபோகும் பெரும் ஆபத்துகளை கடந்து எவ்வாறு மீண்டன என்பதே.


இதில் அந்த கட்டிகளை தன் இருப்பிடத்திற்கு அவை கொண்டும் செல்லும் காட்சிகளை APOCALYPTO வில் நாயகன் நரபலியில் மீண்டு, அந்த குழுவின் துரத்தல்களுக்கு இடையே தன் இருப்பிடம் நோக்கி விரையும் காட்சியுடன் ஒப்பிடலாம். இது உங்களை நகைப்பிற்கு உள்ளாக்கலாம். அப்படியான ஒரு காட்சியை அனிமேஷன் கதையில் அதும் வெறும் எறும்புகளுக்கு இணையாக ஒப்பிடுவதால். காட்சியாக பார்க்கையில் அதன் பிரமாண்டத்தை நம்மால் உணரமுடியும்.


ஒரு குட்டி பொன்வண்டு ஒன்று முக்கிய பாத்திரத்தில் வரும். அதன் குட்டி கதை அத்தனை உயிர்ப்புடன் இருக்கும். மேலும் அதன் சாகசங்கள் படம் முழுதும் பரபரப்புடன் இருக்க மிகமுக்கிய காரணம். எறும்புகளின் வசிப்பிடம் அந்த புற்றும் அதனுள் பணிபுரியும் எறும்புகளும். நமக்கு பெரிய அரண்மனையில் போருக்கு தயாராகும் வீரர்களை நினைவூட்டும். இதன் எதிரிகள் யார்? இந்த எறும்புகளுக்கும் அந்த பொன்வண்டுக்குமான சம்பந்தம் என படம் முழுக்க நிறைய பரபர & நெகிழ்ச்சியான நிகழ்வுகள்.


ரொம்ப முக்கியமான விஷயம் பிரெஞ்ச் படத்திற்கு சப்டைட்டில் தேடி அலைய வேண்டியது இருக்காது. இது சைலென்ட் மூவி. ஆனா பெரிய சினிமா ஞானம் இல்லாத சராசரி ரசிகனும். இந்த படத்தோட பேக் கிரௌண்ட் ஸ்கோர் புகழ்ந்து சொல்லாம இருக்கவே முடியாது. இந்த நேரத்தில் குட்டீஸ்ங்களோட பாக்க ரொம்ப சரியான படம்.                  

Saturday, April 18, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 159.


Crime Thriller கதைகளில் என்ன இருக்கவேண்டும்?.. தொடர் கொலைகள் நடக்க வேண்டும். பொதுவாக அவை ஏதேனும் ஒரு தொடர்போடு இருக்கவேண்டும். கூடுமானவரை கொலைகள் அல்லது அது சம்பந்தமான கடத்தல் இரவில்மட்டுமே நடக்கவேண்டும். இறப்பவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளானதாக உடற்கூறு ஆய்வு நடத்தும் மருத்துவர். அந்த கொலைவழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் குறைந்தது ஒரு நிமிடமேனும் விவரிக்க வேண்டும்.


அந்த அதிகாரிக்கு நெருக்கமான நபர்கள் மீது கொலைமுயற்சி நிகழ்த்தபட வேண்டும். இந்த டெம்ப்ளட்க்கு உள்ள வராத சமீபத்திய நல்ல கிரைம் படங்கள் ஏதும் இருக்க வாய்பிருக்காது. இந்த படமும்கூட இந்த Formulaக்கு உள்ளவே வந்திருக்கு. ஆனா இந்த வருசத்தோட தி பெஸ்ட் படங்கள்ல முதல் ஐந்து இடங்களுக்குள் நிச்சயம் இது இருக்கும்.

 
புதுவகையான ஒரு முயற்சி எந்தளவு ஒரு கடினமோ. அதை காட்டிலும் பெரும் தலைவலி இப்படியான வழக்கமான Formula உள்ளவே கதை, அதையும் நாம் ரசிக்கும்படியாகவே அமைப்பது. அதே தொடர்கொலைகள். இறந்தவர்களுக்குள் உள்ள ஒற்றுமை. இரவு நேரத்தில் மட்டுமே நடப்பது. கொடூரமான முறையில் கொல்லபடுவது. இப்படி எல்லாமும் அதே வழக்கமான விதிகளுக்குள்ளவே பயணபட்டாலும். தனித்து தெரிவது அதன் உருவாக்கத்தில்.
முதல்ல ஒரு போலீஸ் அதிகாரி கடத்தி கொல்லப்படும்வரை இந்த கதையும் ரொம்ப இயல்பாகவே போகும். அந்த கொலைக்கு பின் முடுக்கிவிடப்படும் அத்துறையின் அதிகாரிகளில் இருந்தே அடுத்தடுத்த அதிகாரிகளை கடத்தி, அதேமுறையில் கொல்லபடுவதில் நமக்கு தொடங்கும் பதட்டம், படத்தோட கடைசி ஷாட்வரை கொண்டுபோன மிரட்டல் உருவாக்கல். அதிலும் சின்ன சின்ன யூகங்களை வைத்து ஒருகட்டத்தில் இன்னும் ஒரு அதிகாரி கடத்த கண்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக ஒரு காட்சி. நம்ம எல்லோரும் மிரண்டு போறமாறியான ஒரு இடம்.


ஏன்னா அதுவரை விசாரணை ஒரு யூகமாதான் போகும். குறிப்பிட்டு எந்த பயனுள்ள சின்ன க்ளுகூட அவங்களுக்கு இருக்காது. என்ன பண்றதுன்னு அங்க மொத்த அதிகாரிங்களும் நிற்கும் அதே சூழ்நிலைதான் பார்வையாளர்கள் நமக்கும் இருக்கும். காட்சியோடு ஒன்றி இதுபோல படபடப்பை உணர்ந்தது சமீபமாக இல்லை. ஒவ்வொரு அதிகாரியும் கடத்தப்படும் முன் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கபடும். இரண்டாவது அதிகாரி கடத்தல் முதல் இந்த இடங்கள் அனைத்தும் நமக்கு பெரும் கிலியை ஏற்படுத்தும். இதேவகையில் கிட்டத்தட்ட முழுகதையிலும் நம்மை பதட்டபடவைக்க நெறைய விஷயங்கள் பாத்து பாத்து பண்ணிருக்காங்க.


இறுதிவரைக்கும் நன்றாகவே கொண்டுசென்று கடைசிகட்டத்தில் நெறைய சொதப்பிய படங்கள் உண்டு. அனால் இறுதியில் கொலைக்கான காரணகர்த்தாவும் அதற்கான காரணங்கள்வரை விரியும் இறுதிபகுதி வரை சரியான நேர்த்தி. நடந்த சம்பவங்களும் ஏற்றுகொள்ள கூடிய திரைக்கதை. இந்த கதையை துவக்கி வைக்கும் பாத்திரம். அவரின் யூகத்தை கொண்டே விசாரணை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும். அந்த character இந்த கதைக்குள்ள கொண்டுவந்தது செம்ம ஐடியா. கூடுமானவரை இரவில் பார்க்கவும். SUN NXT ல் உள்ளது.

Wednesday, April 15, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 158.

நம்ம இதயம் முரளி முதல்முறை ஹீராவ பாக்கும்போதே காதலை சொல்லி அவங்களும் அதை ஏற்று இருந்தா என்ன நடந்திருக்கும். அடுத்த 5 வருசத்துல அவங்க மெடிக்கல் முடிச்சி இருப்பாங்க. இல்ல அவங்க அக்காவை போலவே இவங்களும் தற்கொலை பண்ணிருப்பாங்காளா? அதேபோல இந்த படத்தின் முக்கிய பாத்திரமான நாயகிக்கும் ஒரு காதலன் இருக்கான். தான் இப்படி ஆகணும்ங்கற ஆசையோட வளரும் ஒரு சராசரி பெண். தன் காதலால, இல்லல்ல.. காதலனால, அதுமில்ல.. என்றோ தன்னை காதலித்தவனால். தன்னின் அனைத்தும் இழந்து நிற்கும் கதை.


இவங்களை புரியாத புதிர் ரகுவரன், கல்கி பிரகாஷ்ராஜ் கூடலாம் ஒப்பிடவே முடியாது. ஒருமாறி தாழ்வு மனப்பான்மைல ரொம்ப உயர்வுல இருக்கறவங்க. அவங்களால தனக்கு சொந்தம்னு நினைக்கும் காதலன்/ காதலி அவங்களுக்கு கீழ இருக்கும் வரைக்கும்தான் இந்த ரகுவரன், பிரகாஷ்ராஜ்ங்கிற அளவிலே இருப்பாங்க. அவர்களை தாண்டி, அவர்களின் துணையின்றி அடுத்த நிலைக்கோ போககூட வேணாம். அதுக்கான ஒரு முயற்சியில் இருந்தாலே அந்த வில்லன்களின் நிலையை சாதாரணமாக கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் சராசரியில் பெரும்பான்மை ஆண்மகன்கள்.


தன்னுடைய 14 வயதில் மொத்த பள்ளியும் இவளை ஏளனமாக பார்க்ககூடிய சூழல். அந்த சந்தர்பத்தில் அவன் ஒருவன்தான் தனக்கு ஆறுதலாக இருந்ததாக, அவனை பற்றிய பேச்சு வருகையில் தன்தந்தையிடம் சொல்கிறாள். அதாவது அவன் எப்பொழுதும் இவனின் ஆறுதலில் மட்டுமே அவள் நிம்மதிகொள்பவளாகவே இருக்கவேண்டும்.


அதாலே இவள் கல்லூரி ஆண்டுவிழாவில் நடனம் ஆடும்போதோ, அவளின் லட்சியமான PILOT TRAINING க்காக டெல்லி செல்லும் போதோ. அதை அவனால் இந்த வகையிலும் ஏற்றுகொள்ளவோ, ஏதேனும் சால்ஜாப்பு காரணங்களை சொல்லி தன்மனதை சாந்தபடுத்தி கொள்ளவோ முடிவதில்லை. அதாலே அவளை ஆசிட் வீசி உருகுலைத்த பின்னும். அதிலிருந்து அவள் மீண்டு தன்னை அடுத்த கட்டத்தில் நிலைநிறுத்தி கொண்ட சூழலில். மீண்டும் அதை கெடுத்து குட்டிசுவராக்குவான். தொடக்கம் முதல் சாதாரணமாக இந்த படத்தை பார்த்துவந்தாலே, இவனின் ஒவ்வொரு செய்கையும் துவக்கம் முதல் நாம் சராசியாக கடந்து செல்லும் நிலையிலே இருக்கும்.
காரணம் இன்றும் நம்மிடையே இப்படியான நபர்கள் சகஜமாகவே இருந்துகொண்டே இருப்பதுதான். இவன் கொஞ்சம் கட்டுப்பாடு இழந்து ஆசிட் வீச்சுவரை சென்றதால் குற்றவாளி என எளிதாக அடையாளபடுத்திட்டோம். அந்த சூழ்நிலையில் கொஞ்சம் கட்டுபாட்டோட இருந்ததால நம்மில் யாரும் எளிதாக அடையாளபடுத்தபடாம பொதுஜனங்களோட இருந்து அவனை குற்றம் சொல்லிட்டு இருக்கோம் அவ்வளவே. இந்த கதையோட போக்கை ஒவ்வொரு முறை மாற்றி செல்வது இவனோட பாத்திரம் மட்டுமே. அதாலே அந்த ஒரு பாத்திரதன்மை குறித்தே சொல்ல வேண்டியதாயிற்று.


இந்த கதை வலுவா துவக்கம்முதல் சொல்லவந்த இரண்டு விஷயங்கள். அந்த பொண்ணு pilot ஆக ஆசைபட்றதும். அது அவளோட காதலனால எப்படி சீரழிஞ்சி போகுது அப்படிங்கறது மட்டும்தான். இந்த ரெண்டு விசயத்தையும் அதுக்கான காரணங்களோட ரொம்ப தெளிவா கதையோட போக்குலயே சொன்னதுதான். இந்தபடம் முழுசா மொத்த பேருக்கும் பிடிச்சிபோக ரொம்ப பெரிய காரணம். அடுத்து இந்த கதைக்கு இவங்க தேர்ந்தெடுத்த பாத்திரங்கள். அவங்க ஒரே காட்சில வரவங்ககூட கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறத மட்டும்தான் பண்ணிருக்காங்க.



குறிப்பா மொத்த கதைக்கும் அச்சாணி நாயகி பாத்திரமேற்ற பார்வதி. குட்டி குட்டி சீன்ல வசனமே இல்லாம அவங்க மனநிலையை வெறும் கண்ணசைவில், முகபாவத்தில், உடல்மொழியில் போற போக்குல சொல்லிட்டே போறது. அடுத்து அந்தமேக்கப் அது அவங்களுக்கு பொருத்தமா இருக்குனு சொல்றதுக்கு கல்யாணம், நிச்சயதார்த்தம் இல்லை. அது கொஞ்சம் அவங்க முகத்துக்கு துருத்திகிட்டு இருக்கணும். பார்க்கும் அனைவரும் கொஞ்சமா முகம்சுழிக்கதான் செய்யணும். ஆனா அகோரமா இங்கயும் தெரிஞ்சிடவே கூடாது. அதை படத்தோட கடைசி ஷாட்வரை ரொம்ப கவனமா பாத்து பாத்து பண்ணிருக்காங்க.  பார்வதிக்கு இது இன்னுமொரு படம்னு சொன்னா மட்டுமே போதும். புதுசா அவங்களை பாராட்ட என்ன இருக்கு.

Monday, April 13, 2020




Chemistry கணிதத்தை காட்டிலும் மிகஅதிக குழப்பமும், தலைசுற்றலும் விளைவிக்க கூடியது. அதன் சூத்திரங்கள் அதாவது (formulas) கணிதத்தை விட பெரும் சிக்கல் வாய்ந்தது. இந்த formulas இல்லாமலும் கணிதபாடங்களில் ஓரளவு நடந்து செல்லவியலும். ஆனால் வேதியலில்  அதற்கு ஒரு அடி கூட வாய்ப்பில்லை. இங்கு இவைகுறித்து பேச காரணம். இந்த சீரீஸின் நாயகன் ஒரு chemistry professor.   அதாவது இந்தந்த மூலக்கூறுகளை இந்த அளவில், இந்த வெப்பநிலையில் இதனோடு சேர்த்தால் கோகெயின் முதல் ஒரு கட்டிடத்தை தகர்க்கும் வெடிவரை எளிதாக தயார்செய்யுமளவு வேதியலில் Phd., முடித்த தில்லாலங்கடி.


ஆனால் கதையில் இந்த வேதியியல் பெரும் பங்குவகித்து நம்மை சோதனைக்கு உள்ளாக்கிடுமோ என்ற பயத்திலே இரண்டு வருடங்களாக தவிர்த்தே வந்த சூழலில். துணிந்து காண இந்த  lockdown மட்டுமே காரணம். கதை முழுக்கவே இந்த வேதியலை அடிப்படையாக கொண்டதே. ஆனாலும் அவை என்னை போன்ற சாதாரண பார்வையாளனை எந்த வகையிலும் சலிப்படைய செய்யாததே இந்த முதல் சீசனை ஆர்வமாக முடித்து அடுத்த சீசனும் உடனே துவங்க முழுகாரணம்.  

   
முன்பே குறிப்பிட்டதை போல நாயகன் chemistry professor. பகுதி நேரத்தில் ஒரு கார்வாஷிங் நிறுவனத்திலும் பணிபுரிகிறார். அங்கு சூழலை பொறுத்து கார் கழுவும் நிலை வந்தாலும் தயங்காமல் பணிபுரிந்து வருகிறார். upper middle class வாழ்க்கை. ஒரு ஊனமுற்ற மகன். வாழ்க்கை இவ்வாறு சுமூகமாகவே சென்றுகொண்டிருக்க. எதற்காக நல்ல பணியில் உள்ளவர் கார்வாஷ் செய்யும் பணியை செய்யவேண்டும். அவ்வாறே தேவையென்றாலும் இவர் வேறேதும் பணிசெய்யலாமே என்ற கேள்வியும் வருகிறதல்லவா. 


அவருக்கு நுரையீரல் புற்று இருப்பதால் இருக்கும் குறுகிய காலத்திற்குள் தன் குடும்பத்திற்கு ஓரளவேனும் பணம் சேர்த்திட முயல்கிறார். ஒரு எதிர்பாரா சூழலில் drugs சப்ளையர். அதாவது wholesaler, distributor இப்படியான பெரும்தலைகள் இல்லாமல் அதை பொதுமக்களிடம் சில்லறையில் விற்பனை செய்யும் ஒருவனை சந்திக்கிறார். அதுவரை ஒரு melodrama போலவே நகரும் கதை. அதற்க்கு பின் நல்ல வேகத்தில் நகரும் என யூகித்தால் அப்பொழுதும் இந்த கதை துவங்கிய அதே நிதானத்திலே பயணிக்கிறது.


இக்கதை ஒரு நல்ல thirller க்கு உண்டான அனைத்து அம்சங்களும் கூடுதலாகவே இருந்தாலும் நிதானமாக பயணிக்க மிக முக்கிய காரணம் இக்கதையின் நாயகனே. ஆம் அவரின் குணாதிசயம் எந்த சூழலிலும் அவர் கடைபிடிக்கும் நிதானம். சில இடங்களில் அவர் உணர்ச்சி வசப்பட்டாலும் சட்டென தன் அசாத்திய மூளையின் கட்டளைக்கு கீழ் சென்று விடுகிறார்.  அதனாலே கிட்டத்தட்ட கதையின் துவக்கத்திலே, அதாவது அவர் முதல்முறை தவறு செய்யும் போதே அதில் கூடுதலாக வேறொரு புதிய சிக்கலும் முளைக்கிறது. ஒரு சிறிய தவறு இரண்டு கொலைகளுக்கும் காரணமாகிறது. இந்த` seat edge thirllerக்கு  உண்டான பத்து பொருத்தங்களும் அமைந்த எபிசொட் அது. ஆனால் அங்கும் திரைக்கதை நாயகனை போலவே நிதானமாக வடிவமைக்க பட்டதே இக்கதையின் மிகபெரும் பலம்.
அவரின் நிதானம், எப்பொழுதும் அவரின் தளர்ந்த நடை. 50 வயதுக்கு உண்டான வயோதிக தோற்றம். என முதல் எபிசோடில் துவங்கும் ஒவ்வொரு சிறு தடங்களையும் நிதானமாகவே கையாண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் ஆர்வமாக பார்க்கும்படியே கதையை நகர்த்தி செல்கிறார். அதிலும் அவருக்கு பார்ட்னராக அவர் தேர்ந்தெடுக்கும் அந்த உதவாக்கரை drug சப்ளையர் கதையின் நிறைய குழப்பங்களுக்கு காரணமாகிறார்.  ஆனால் அவரின் குடும்பபின்னணி மற்றும் நாயகனின் கேன்சர் பற்றி அவரின் குடும்பம் தெரிந்துகொள்ளும் நான்காவது எபிசோட். கதையை ஒரு துளியும் நகர்த்தி செல்லாத பாகம் அது. ஆனால் இந்த சீசனில் பெரும்பான்மையோரது விருப்ப எபிசோட் அதுவாகவே இருக்கும். அந்த எபிசோட் முழுக்கவே குடும்ப உறவுகளின் மீதான பிணைப்பை ரொம்ப அழகா காட்சிபடுத்தி இருப்பாங்க.


5 சீசன்வரை உள்ள தொடர். இந்த நிதான திரைக்கதையிலும் அடுத்த சீசனை உடனே பார்க்கதூண்டும் ஆவலுடனே  முடிக்கபட்டுள்ளது.  இந்த தொடர் அடுத்தடுத்த சீசனில் இன்னும் விறுவிறுப்பாக்க இன்னும் கூடுதல் கிளைகதைகளுக்கு வேண்டிய நிறைய க்ளு இந்த சீசனில் ஆங்காங்கே தென்படுவதால் அடுத்த சீசன் நிச்சயம் விறுவிறுப்பாகவே செல்லும் என நம்புவோமாக.               

Sunday, April 12, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 157.

கேரளாவில் இருந்து 100+ காவலர்கள் சத்தீஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில வடமாநிலங்களின் தேர்தல் பணிக்காக அனுப்பபடுகின்றனர். அதற்கான ஆணை பிறபிக்கபட்டு காவலர்கள் தயாராகும் நிமிடங்களில் இருந்து கதை துவங்குகிறது. ஒருபுறம் காவலர்கள் கிட்டத்தட்ட ஒருவார பிரயாணத்திற்கான ஏற்பாடுகளில் இருக்க. மறுபுறம் அவர்கள் எடுத்து செல்ல வேண்டிய உபகரணங்கள் தயார் செய்யும்பணி முழு வீச்சில் நடந்துவருகிறது. உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் பெற்று கிளம்பும்நாள்.


காவலர் வாகனத்தில் ரயில்நிலையம் அனுப்பபட்டு அங்கிருந்து ரயில் மூலம் நான்கு நாள் பிரயாணத்தில் சட்டீஸ்கர் வந்தடைகின்றனர். மேலும் அடுத்தடுத்த மாநில பணிக்கு செல்வோருக்கு விடை கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்புகிறனர். தங்களுக்கு நேரபோகும் ஆபத்தை அறியாமல். இங்கு வந்த அனைவரும் நான்கு மணிநேர காத்திருப்புக்கு பின். அவரவர் தேர்தல்பணி நடக்கும் இடங்களுக்கு அனுப்பபடுகின்றனர். அந்த நான்கு மணிநேரம் தாங்கள் எங்கு பணிக்கு செல்ல போகிறோம் என காத்திருக்கையில் நாயகன் வருகிறார். அதும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல். அங்கு தேர்தல் நெருங்குவதால் எங்கும் உச்சகட்ட பிரச்சார பரபரப்பில் இருக்க. அந்த கூட்டத்தில் ஒருவனது பணத்தை பிக்பாக்கெட் அடித்தவன் யதார்த்தமாக தொலைவில் ஒரு சின்ன மரபெஞ்சில் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருக்கும் நாயகனை காண்கிறான்.


மம்மூட்டி மற்றும் மோகன்லால் படங்களில் அவர்களின் அறிமுக காட்சிகளை கொண்டே கூறிவிடலாம் அந்த படங்களின் தரத்தை. எந்த ஆர்பாட்டங்களும் இன்றி இவர்கள் அறிமுகமாகும் இப்படியான படங்கள் நம்மை நிச்சயம் பெரிதும் ஏமாற்றமடைய செய்யாது. இவ்வாறு இவர் மற்றும் இவரின் சீனியர் காவலர் இவர்களின் தலைமையிலின் கீழ் எட்டு நபர்கள் இருவேறு இடங்களுக்கு அனுப்படுகின்றனர். அடுத்து நாம் பார்க்கவிருப்பது நாயகனும் அவர்களின் கீழ் உள்ள காவலர்களும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகம் நடைபெறும் இந்த மலை கிராமங்களில் எவ்வாறு இவர்கள் .தேர்தல்பணியை முடித்து திரும்புகின்றனர் என்பதையே.
அந்த மலைகிராமங்களுக்கு செல்லும் வழியில் வாகனத்தை முன்னால் மெதுவாக செல்லுமாறு அனுப்பிவிட்டு காவலர்களுடன் மம்மூட்டி பின்னால் நடந்துவரும் போது. ஒரு காவலர் இளைஞர் தயங்கியபடி காரணம் கேட்பார். அதற்க்கு நாயகன் இங்கு எங்கே வேண்டுமானாலும் கன்னிவெடி இருக்க வாய்ப்பு உள்ளது என. எந்தவித பெரிய முன்னனுபவங்களும் இல்லாத இந்த காவலர்கள் நமக்கு இவர் பொறுப்பாளராக வாய்த்ததை பெருமையாக நினைத்து கொள்வர். அடுத்துவரும் ஒரு அசாதாரண சூழலில் என்ன செய்வதென இவர்கள் தடுமாறும் சூழலில் இவர் மெளனமாகவே இருக்க.  
  

இதை பொறுத்துகொள்ள இயலாமல் அனைத்து காவலரும் ஒன்று சேர்ந்து இவரை கேள்விகேட்கும் சூழல். இவரின் பதில் இதுவரை எந்த நாயகரும் இந்திய சினிமாவில் குறிப்பாக போலீஸ் பாத்திரமேற்ற எந்த நாயகனும் கண்டிப்பாக சொல்லியிருக்க வாய்ப்பே இல்லாதவை.. என் இத்தனை வருட அனுபவத்தில் ஒரு கொலைகாரனையோ? ஏன்.. ஒரு திருடனை கூட பிடித்தது கிடையாது. எனக்கும் உங்களை போலவே இந்த சூழல் புதிதுதான் என கூறுவார். அதுவரை இவரை நம்பிக்கையாக நினைத்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவர்கள். ஏற்கனவே தங்களுக்கான தோட்டாக்கள், BULLET PROOF JACKETS எதும் இல்லாத சூழலில். வரும் தேர்தல் நாளின் பயங்கரத்தை எதிர்பார்க்க துவங்குவர்.



நல்ல எதிர்பார்ப்பை கொடுக்ககூடிய கதைகளம். படம் துவங்கிய சில நிமிடங்களிலே உண்டான எதிர்பார்ப்பையும் நம்மை பெரிதாக எங்கும் அதிருப்தி அடையசெய்யாமல் பூர்த்தி செய்துள்ளனர். 

Thursday, April 9, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 156.

மீண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பேசும்கதை. ஒரு ஆறுதல் பாதிக்கபட்ட பெண்ணே அதற்காக தீர்வை நோக்கி செல்வது. இந்தியன் படத்தில் உயிருக்கு போராடும் தன் மகளை காபாற்ற லஞ்சம் தரமறுக்கும் அப்பெண்ணின் தந்தையின் மீது நமக்கு பெரும் கோபம் இருக்கும். அதுதான் அந்த கதாபாத்திரத்திற்கான தன்மை. அதுதான் அப்படத்திற்கான வெற்றியும்கூட. அப்படியான ஒரு கோபமோ அல்லது சலிப்போ  பாதிக்கப்பட்ட இந்த பெண்ணின் மீது நம்மில் சிலருக்கும் வர வாய்ப்புள்ளது. இந்தியன் சேனாதிபதி மீது நமக்கு கோவம் வர சமுதாயத்தை காரணம் சொல்லி நாம் தப்பிகொள்ள வழியுண்டு. ஒருவேளை இப்படத்தில் மாதுரி பாத்திரத்தின் மேல் கோபமோ சலிப்போ உங்களுக்கு ஏற்படுமாயின் தவறு சமுதாயத்தின் மீதல்ல நிச்சயம் உங்களின் மீதே.   


அம்மா மகள் என்ற இருவர் மட்டுமே உள்ள குடும்பம். அருகிலுள்ள சிறுநகரத்தின் ஜவுளிகடைக்கு பணிக்கு தினமும் பேருந்தில் சென்று வருகிறாள். ஏற்கனவே வங்கியில் அவர்கள் பூர்வீக நிலத்தின் மீது வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கும் சூழல். ஒரு நாளும் விடுப்பு எடுக்கமுடியாத பணி. இடையில் பெண்களுக்கான துணிமணிகளை தைத்து கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார்.


இது அந்த கதையின் முக்கிய பாத்திரத்தின் தன்மை மற்றும் அவரின் சூழல் குறித்த தெளிவான முன்கதை ரொம்ப சுருக்கமாக கதையின் துவக்கத்தில் வரும். அதே போன்றே இக்கதையின் வில்லன் பாத்திரத்தின் தன்மையும் ரொம்ப சரியான இடத்தில் சொல்லப்படும். அதை முதல்முறை பார்க்கும் நாமும் நாயகியை போலவே அதிர்ச்சிக்கு செல்வது உறுதி. உடன் பணிபுரியும் தோழி தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டே தொலைவில் நாயகி தன்னை நோக்கிவருவதை பார்த்து இணைப்பை துண்டிக்க முயல்வார். இதுவே அவரின் குணநலம்.
இப்படியான சூழலில் பேருந்தில் ஒருவன் அவரிடம் தவறாக நடந்து கொள்கிறான். சட்டென சுதாரிப்பதற்குள் மாயமாகும் அவனை தேடிசென்று பழிதீர்க்கும் கதை. கதை முழுக்கவே பயணப்படும் நாயகி மற்றும் அவரது தோழி. இருவருமே அடிப்படையில் இருவேறு குணாதிசியம் கொண்டவர்கள். அவரது தோழி, உடன் பணிபுரியும் பெண்கள் முதல் அவளது அம்மா மற்றும் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிளை வரை அனைவரும் கூறும் ஒரே பதில். இதெல்லாம் ஒரு விசயமே அல்ல என்பதாகவே இருக்கும்.
இவர்களின் யாரின் சமாதானத்திற்கும் இவரிடமிருந்து எந்த பதிலும் வராது. இதை பெரிதுபடுத்த வேண்டாம் தொனியில் பதிலளிக்கும் தனது 
அம்மாவிடம் மட்டும் இப்படி சொல்லுவார். என் உடலின் மீது யாரின் கைபடவேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என. ரொம்ப தீர்க்கமான ஒரு காட்சி. இதற்காக ஏன் இவ இவளோ அல்லல்பட்றானு நினைக்கும் ஒரு சிலரையும் இவளின் பக்கம் சட்டென இழுத்துகொள்ளும் காட்சியது.


நகரில் உள்ள ஜவுளிகடையில் பணிபுரிவதால் தினம் ஒரு சீருடை. அதில் மஞ்சு வாரியர் அவ்ளோ அழகு. குறிப்பா லாங் ஷாட்ஸ்ல. வெறும் ஒன்றரை மணிநேரம்தான் முழுபடமும் என்பது படத்தோட பெரிய ப்ளஸ். அதனாலே படத்தோட காட்சிகள் அனைத்தும் கதையை நோக்கி மட்டுமே போகுது. கொஞ்சம் விறுவிறுப்பான கதை விரும்பிகள் மட்டுமில்லாமல் பெரும்பாலோரை கவரும் படம்.  குறிப்பாக பெண்கள் தங்களை இந்த கதையுடன் இணைத்து கொள்ள நிறைய காரணங்கள் உள்ள படைப்பிது. 

Monday, April 6, 2020




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 155.

இந்த 10 வருடங்களில் ஹிட் அடித்த கிரைம், திர்ல்லர், இன்வெஸ்டிகேஷன் சப்ஜெக்ட்கள் பெரும்பாலுமே பெண்களை சுற்றியே நகர்கிறதே. பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவது, பெண்களை துன்புறுத்தி கொலை செய்வது, பெண்களை பலவகைகளில் சீரழித்து கொலை செய்வது. இப்படியான வகையறா கதைகளே அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்து வருகிறது. முன்பெல்லாம் சின்ன பட்ஜெட் கதை என்றாலே சில்லு கருப்பட்டி போன்ற பீல் குட் கதைகளைதான் தேர்ந்தெடுத்து கொண்டிருந்தனர். இப்பொழுது புதிய நடிகர்களை கொண்டு பண்ணும் சின்ன படங்களும் கூட இந்த வகைகளிலே வருகிறது. போன தலைமுறையில் பலரும் முகம்சுளித்து வந்த இந்த கதைகள். இந்த தலைமுறையில் அனைவராலும் பெரும் வரவேற்ப்பை பெற என்ன காரணம்?


நல்ல குட் லுக்கிங் க்ரைம் இன்ஸ்பெக்டர். அதாலயே சீருடை, ஹேர்கட்டிங் ஏதுமில்லாமல் நல்ல தாடியுடன் வளம் வருகிறார். தினம் கொடூர மரணங்கள். ரத்தம், கொலையாளிகளிடம் விசாரணை என பெரும் மனஅழுத்தத்திற்க்கு ஆளாகி, கவுன்சிலிங் மூலம் ஆறுமாத விடுப்பில் சொந்த ஊருக்கு ஓய்வுக்கு செல்கிறார். இதற்கிடையில் அவரது காதலி கடத்தபடுகிறார். அதலால் மீண்டும் பணிக்கு திரும்புகிறார். அப்படி அவர் மீண்டும் பணிக்கு திரும்புவதுதான் இந்த படத்தின் திருப்புமுனை காட்சியே.


அப்படியெனில் அவர் விடுப்பில் செல்வதற்கு முன் இவரின் திறனை வெளிபடுத்தும்படியான ஒன்றிரண்டு காட்சிகள் வேண்டுமல்லவா? அல்லது இவருக்கும் காதலிக்கும் இடையேயான காதலை முன்னிலைபடுத்தும் காட்சிகள் வேண்டும் அல்லவா? அப்படி இருவேறு கொலைகளை பற்றிய விசராணை காட்சிகள் கதையில் உள்ளது. அவை மிக சாதாரணமாக தோன்றினாலும் நம்ம இந்த சின்ன விஷியத்தை யோசிக்காமல் விட்டு விட்டோமென்று நினைக்கும்படி ஒரு காட்சியும். இதெல்லாம் ரொம்ப பெரிய ஜீனியஸ்களுக்கு மட்டுமே தோன்றும்னு சொல்லும் படியா ஒரு காட்சி. அந்த ரெண்டு காட்சிகளுமே அட்டகாசம்.
இப்படியான காட்சிகள் முன்பே இருந்தால்தான் அவர் மீண்டும் பணிக்கு திரும்பும் அந்த காட்சியில் நாம் நிமிர்ந்து அமர முடியும். இரண்டு மணிநேர படத்தில் சரியாக முப்பது நிமிடத்தில் இந்த காட்சி வரும். அதாவது அடுத்த ஒன்றரை மணிநேர படம் பெரும் பரபரப்பில் இருக்க போகிறது என நம்மை உணரசெய்யும் படி. முதல் அரைமணிநேரத்தில் எந்த பிசிறும் இல்லாமல் அத்தனை விஷயங்களும் இந்த கதையில் இருந்ததோ.. அதே அளவான விறுவிறுப்பை கிட்டத்தட்ட கடைசிவரை இந்த கதையில் கொண்டு சென்று முடிந்தது. இப்படத்திற்கான மிகபெரும் பிளஸ். இதுபோன்ற கதைகளில் சின்ன சின்ன பாத்திரங்கள் அவர்களின் பங்களிப்பு.. அந்தந்த காட்சிகளில் அவர்களுக்கான முக்கியதுவம். அவையும் இந்த கதையை மேலும் விறுவிறுப்பாக்க ஒத்துழைத்து உள்ளது.


இந்த வகையறா கதைகளில் அப்படி ஒரே கடத்தலில் யாரென்று தெரியாத அந்த மர்ம ஆசாமியின் மேல் நமக்கு பெரிய ஈடுபாடு வராதல்லவா. அதற்காக ஒரு கிளைகதையாக மற்றொரு பெண் கடத்தப்படும் காட்சி வரும். அதன் மூலமே ஹீரோவின் காதலியும் கடத்தடுவதாக. திரைகதையில் இந்தளவு அனைத்தும் யோசித்து செய்தவர்கள். கிளைமாக்ஸ் இறுதி நிமிடத்திற்கு முன்புவரை அனைத்து சமாச்சாரங்களுமே திருப்திபடுத்தும் வகையறாவே. தலைப்பில் THE FIRST CASE என வரும் போதே நம்மால் யூகிக்க முடியும். இதன் தொடர்ச்சி அடுத்தடுத்த பாகங்கள் வரும் என்பதை. அடுத்த பாகத்தையும் நிச்சயம் பார்க்கலாம் என்ற வகையிலே இந்த படமும் உள்ளது. 

Friday, April 3, 2020




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 154.

MAYA BAZAAR 2016 (2020) – KANNADA – சூழ்நிலை

சினிமாவில் தயாரிப்பாளர் தவிர்த்து குறிப்பாக நடிகர்கள் தயாரிக்கும் படங்களின் மேல் ஈர்ப்பு ஏற்பட மிக முக்கிய காரணம் அந்த ஸ்க்ரிப்ட்டின் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை மட்டுமே. அவ்வாறு கன்னடத்தில் முன்னணி நாயகர்களில் ஒருவரான புனித்ராஜ்குமார் இப்படத்தின் தயாரிப்பாளர். மிக எளிமையான சின்ன பட்ஜெட் கதை. அதில் உள்ள சூவாரசியத்தின் அளவே பார்வையாளனுக்கு தேவையானது.


ஒரு மகன் தனது தந்தையை பெருமிதத்துடன் உணரவேண்டும் இதுதான் சூழல். இதை, இந்த சூழலை பல படங்களில் பார்த்திருப்போம். இந்த படத்திலும் அப்படியான ஒரு காட்சி. அதும் படத்தின் ஆரம்ப காட்சியே. கணவன், மனைவி அவர்களின் மகன் மூவரும் ஆட்டோவில் பள்ளிக்கு செல்கிறார்கள். இவர்களின் சம்பாஷனைகளின் வழியே இவர் காவல் துறையில் பணியில் இருப்பதும். தனது சொந்த வேலைக்கு செல்வதால் அரசு வாகனத்தை தவிர்த்து வந்ததும் நமக்கு புரியவருகிறது. ஒருவாறு மனைவி மற்றும் மகன் சமாதானம் ஆகும் வேலையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் தனது கைபேசி ஒலிக்க அவர் தன் மனைவியிடம், தான் வெளியில் வந்துவிட்டதால் CAB புக் செய்து எங்கு வேண்டுமோ போகசொல்கிறார்.


ஒருவாறு சமாதானமான மனைவி மற்றும் மகன் மீண்டும் தங்களது பழைய நிலைக்கே செல்ல மகனது பள்ளியும் வந்து விடுகிறது. வெறும் ஆட்டோவில் வந்த கோபத்தில் மகன் முதலில் இறங்கி உள்ளே செல்ல. வழியில் காரில் வந்திறங்கும் தனது தோழனிடம் பேச்சு கொடுக்கிறான். அவனது தந்தையின் பெருமைகளை பேசிக்கொண்டே அந்த சிறுவன் வருகையில். இருவரது தந்தைகளும் வந்துசெர்கின்றனர். அந்த காரில் வந்தவர் சட்டென காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கும் அந்த சல்யூட்டை கொடுத்து. நெளிய ஆரமிக்க. அதுவரை தன் தந்தை மீதிருந்த கோவம் சட்டென விலகி. தனது தாயின் கையை விடுத்து தன் இரு கைகளாளும் தந்தையின் கையை பற்றிகொல்கிறான்.


பெரிய காரண காரணமின்றி அந்த சிறுவன் எப்படி நொடியில் தன் தந்தையின் பக்கம் சாய்ந்தானோ. அப்படி ஒரு சினிமா பார்வையாளனை ஒரு படம் தன்பக்கம் ஈர்த்து கொள்ள வேண்டும். அந்த சிறுவனை போலவே ரசிகனுக்கும் குறைந்த பட்ச நியாய தர்மத்துடன் காட்சிகள் இருந்தாலே போதுமானது. ஒரு நிமிடம் மட்டுமே வரும் இந்த காட்சி இல்லாமல் போனால் கூட அந்த படத்திற்கு பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் இந்த கதையின் நாயகனை பற்றி நாம் புரிந்துகொள்ளவேண்டியது. அவசியம். இவரின் இந்த குணநலனை கொண்டே இக்கதையின் அனைத்து திருப்பங்களும் நிகழும்.
அவர் அச்யுத்குமார். ரஜினிமுருகனில் கீர்த்திசுரேசின் தந்தையாக வருவாரே அவர். முழு படத்திலும் அவர் இல்லாத காட்சிகள் அதிகபட்சம் 20-30 நிமிடங்கள் இருக்கலாம். அந்தளவு இவரை சுற்றியே பின்னப்பட்ட கதை. சின்ன சின்ன குட்டி பாத்திரங்கள் மூலமாக அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருக்க. இரண்டாம் பாதியில் பிரகாஷ்ராஜ் பாத்திரம் கதைக்குள் வருகிறது. அதுவரை நாம் பார்த்த அனைத்து பாத்திரங்களும் பெரிதும் பரிச்சயம் இல்லாதவர்கள். அதுவரை ஒரு கலரில் சென்றுகொண்டிருந்த கதையை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்வார்.


அதென்ன மாயா பஜார் 2016? அதான் கதையில் ஏற்படும் முதல் திருப்பமே. காதல் ஜோடி. ஒரு அரைகுறை திருடன். நேர்மையான இந்த அதிகாரி. ACP பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ். இந்த சில முக்கிய பாத்திரங்களை மட்டுமே கொண்டு இரண்டு மணிநேரம் ஒரு விறுவிறுப்பான படம். கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.

Search This Blog