Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, December 25, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 098.
நமது புறச்சூழல் காரணமாக அல்லது வேறொரு நபரால் ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து குறிப்பிட்ட ஹீரோ தானும் மீண்டு, தன்னைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றுவதுதான் சினிமாக்களின் கருப்பொருள் என்பதான புரிதல் நமக்கு எப்பொழுதோ வந்துவிட்டது. இதனாலேயே நாம் பார்க்கும் படங்கள் முதல் யோசிக்கும் கதைகள் வரை இவ்வாறே உள்ளது.
நமது அகச்சூழல் குறித்த கதைகளையும், சினிமாக்களும் பெரும்பாலும் நாம் நிராகரிக்க கூறும் காரணம். அவை மிக மெதுவாக நகர்வது போன்ற நமது எண்ணம். பெரும்பாலும் தங்கள் சினிமாக்களில் அகச்சூழல் குறித்த கதைகளை மட்டுமே கருப்பொருளாக கொண்டு இயங்கும் சினிமா துறையிலிருந்து ஒரு படம் இப்பொழுது...

குடும்ப நண்பர்கள் (மூன்று ஜோடிகள்) தங்களது நண்பர் ஜெர்மனிலிருந்து தனக்கு பெண் பார்க்க வருபவரை, இவர்கள் பார்த்த பெண்ணோடு சேர்த்து வார விடுமுறையை கொண்டாட, ஒரு கடற்கரையை ஒட்டியுள்ள வில்லாவில் தங்குகிறார்கள். உடனே அங்கு ஒருவர் கொலை செய்யப்படுவார், அல்லது அந்த வில்லாவில் அமானுசிய சம்பவங்கள் நடைபெறும் போன்ற கற்பனை வருதுனா நேரா முதல் பத்திக்கு திரும்ப போய்டுங்க.
கடற்கரையில் விளையாடும் குழந்தை ஒன்றை காப்பாற்ற கடலில் குதிக்கும் அந்த எல்லி என்ற பெண் பாத்திரம் இறந்துவிடுகிறாள். இதன்பின் வரும் நடைமுறை சிக்கல்களை மட்டுமே முழுக்க முழுக்க அலசும் கதை.
முழுக்க அந்த கடற்கரையும், அதை ஒட்டியுள்ள அந்த பழைய வீட்டிலும் முழு இரண்டு மணிநேர கதையும் நிகழ்கிறது. வெறும் இவர்களது வாதங்களோடே கடந்தாலும், உள்ள சொற்ப பாத்திரங்களை கொண்டு எங்கும் நம்மை சோம்பல் முறிக்கவிடாமல் செய்த உருவாக்கல்.
கதையின் துவக்கம் முதல் இறுதிவரை நம்முடனே பயணிப்பது அந்த கடல் அலையின் ஒலி மட்டுமே. துவக்கத்தில் அவர்களது களிப்புகளுடன் அந்த அலைகள் சந்தோசமாகவும். கடலில் தொலைந்த எல்லியையும், அந்த குழந்தையையும் தேடும் கணங்களில் மிக பயங்கரமாகவும். எல்லியின் காதலனின் வருகைக்கு பின் அதே அலையின் ஒலி மிகத்துயரமாக நமக்கு கேட்கும்படியான (மோனோலிசா ஓவிய கோட்பாட்டின் படியான) உருவாக்கல்.
ஆண் பாத்திரங்களின் துயரம், ஏமாற்றம், அழுகைகளை எத்தனையோ படங்களில் நாம் பார்த்திருந்தாலும். இறந்த காதலியை தேடி வரும் ஒரு ஆண் பாத்திரம். துளி கண்ணீரும் இல்லாமல் வெறும் சோகத்தை மட்டுமே சுமந்து வரும் அந்த முகம் நமக்குள் ஏற்ப்படுத்தும் துயரத்தை மறக்க பல நாட்கள் ஆகலாம். மேலும் #Sepideh எனும் பாத்திரத்தில் வரும் பேரழகியும்..
இதன் இயக்குனர் #Asghar_Farhadi இவரே தற்போது ஆஸ்கார் பரிந்துரையில் இறுதி சுற்றுவரை எட்டி உள்ள #The_Salesman படத்தின் இயக்குனர். மேலும் 2011-ல் “Best Foreign Language Film of the Year” #A_Separation படத்திற்கு ஆஸ்கர் வென்றவரும் இவரே.

Thursday, December 21, 2017


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 121


முதல் மூன்று நிமிடம் இயற்கை எழில் கொஞ்சும் வனங்களும், பனி பொழியும் நீரோடை வழியாகவும். எந்த பின்னணி இசையோ, பறவைகளின் ஒலியோ, ஓடும் நீரின் சத்தமோ இல்லாமல் நம்மை அழைத்து செல்லும் இயக்குனர் நமக்கு உணரவைத்தது ஒன்றைத்தான். அதாவது நாம் மிக ரசிக்கும் அனைத்தும் நம் அருகில் இருப்பினும், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற வெறுமையை.  இப்படியான ஒரு கதைக்கும் அது தாங்கிவரும் இந்த கனத்த வெறுமையையும் துவக்கம் முதலே பார்வையாளனுக்கு பழக்க வறண்ட நிலத்தையோ, அழும் குழந்தயையோ படமாக்காமல், கதை நிகழும் களத்தை ஒட்டிய இயற்கை காட்சிகளை கொண்டே இந்த வெறுமையை நமக்குள் புகுத்திய இயக்குனரை இந்த மூன்று நிமிட காட்சிகளுக்குள்ளே புகழ்ந்திட எண்ணுவோர் எண்ணிவிடவும். ஏனெனில் இந்த நிமிடங்களுக்கு பின்னே இந்த கதையின் கனத்த வெறுமையை நமக்கும் கொடுத்து நம்மையும் இக்கதையின் பாத்திரங்களை போல் அனைத்தும் இருந்தும் ஏதுமில்லா வெறுமை நிலைக்கு ஆட்படுத்த இருக்கிறார்.


அந்த மூன்று நிமிடங்களுக்கு பின்னாக கதையின் துவக்கம். பள்ளியில் இருந்து வெளியேறும் சிறுவர் கூட்டம். இதில் எந்த சிறுவனின் பின்னால் கேமரா செல்லுமோ அவனே நமது அடுத்த இரண்டு மணி நேரத்திற்கான எஜமானன். அப்பொழுது தெரியாது அடுத்த நம் அடுத்த சில நாட்களையும் இச்சிறுவனும் அவனது வெறுமையும் ஆட்கொள்ள போகிறதென்று. ஒரு கணவன் & மனைவி சட்டப்படி விவாகரத்துக்கு காத்திருக்க அவர்களது பன்னிரண்டு வயது மகனின் நிலையை, உணர்வை, அவனது எதிர்காலம் பற்றிய பயத்தை பார்வையாளர் அனைவருக்கும் கடத்திய வகையில் கவனிக்க வேண்டிய சினிமா.


ஒருவரிடமிருந்து நாம் ஒதுங்க நினைக்கும் சூழலில், பிடிமானம் இல்லாத நமக்கு ஒரு ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் நமது வெறுப்பின் அளவு அவர்களின் பால் சற்று அதிகமாகவே இருக்கும். நாம் ஒதுங்க நினைத்தது நம் கணவனிடமோ, மனைவிடமிருந்தோ எனில்? நமக்கென மற்றொரு இணையும் இருக்கும்பட்சத்தில். பரஸ்பரம் புரிதலுடன் விவாகரத்திற்கு காத்திருக்கும் இவர்களின் மிகப்பெரும் தலைவலி அவர்களது குழந்தை. அத்தலைவலிக்கான காரணத்தை ஆராயாமல், இவர்கள் இருவருக்கிடையேயான வாக்குவாதம் முற்றிய தினம் அச்சிறுவன் விட்டைவிட்டு வெளியேறுகிறான்.


உடனே அலைந்து திரிந்து அச்சிறுவனை கண்டடைந்து தங்களின் கீழ்மைநிலைக்கு வருந்தி கண்ணிருடன் மூவரும் இணையும் வழக்கமான கதையாக இல்லாமல், துவக்கம் முதலே அச்சிறுவனிடம் வெறுப்பை உமிழும் தாயாகவும். தன் மகன் மாயமானத்தின் பின் அவனை கண்டடைவதில் காட்டும் முனைப்பிலும். தற்போதும் அவன் மீதிருந்த அதே நிலையிலேயே அவனை தேட துவங்கும் இடங்களிலேயே இக்கதையும் அப்பெண் பாத்திரமும் தனிபெரும் கவனம் பெறுகிறது. கதையின் துவக்கத்தில் மாயமாகும் சிறுவன் பின் எந்த இடத்திலும் காட்சிகளில் தேவைபடாத கதை. ஆனால் கதை முழுக்க இல்லாத அந்த சிறுவனை பற்றியே.


மிக சரியாக இக்கதை துவங்கும் இடம் அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியிலிருந்தே. அதற்கான காரணமாக இக்கதை சொல்வது அவன் பெற்றோர்கள் இடையேயான வாக்குவாதம் எனில். முழு கதைக்கும் அச்சாணியான அக்காட்சி பார்வையாளனுக்கும் அந்த தம்பதியரின்மேல் எவ்வாறான எண்ணத்தை விதைக்க வேண்டும். இக்காட்சி மட்டுமே அச்சிறுவனே அதற்க்கு பின் முழு கதையிலும் இல்லாவிடினும் அவனின் மேல் இறுதிவரை பச்சாதாபத்தை விதைக்க செய்யும் ஒரே காட்சி. இவ்வாறான காட்சிக்கு ஆழ்ந்த வசனங்களும் தேர்ந்த நடிகர்கள் மட்டுமே போதாது. வாதம் நடைபெறும் சூழல், நாம் பார்க்கும் கோணம் முதற்கொண்டு அவசியமாகிறது. அப்படியான ஒரு காட்சியும் அரங்கேறுகிறது.. அவர்களின் முழு வாதமும் நிறைவுறும் சூழல்வரை தென்படாத அச்சிறுவன் கழிவறையின் இருளில் நின்று ஒலி எழுப்பாமல் கதறுவது போன்ற ஒரு ஷாட் இரு வினாடிகள் மட்டுமே. ஆனால் அந்த இரு வினாடி பார்வையாளனுக்கு கொடுக்க போகும் வலி அவ்வளவு சுலபமாக வார்த்தைபடுத்த இயலாது.



இறுதியான  ஷாட் அத்துடன் படம் நிறைவடையும் அதன் பின்னே பார்வையாளன் அனைவருக்கும் படம் நெடுகிலும் எழுந்த அனைத்து கேள்விகளுக்குமான விடை அந்த ஒரே ஷாட்டில் உள்ளது. அதும்போக அவர்களுக்கிடையேயான அந்த வாதத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள். வெறும் வார்த்தைகளுக்கான வீரியத்தை அந்த தம்பதியரின் வாதத்தில் கவனிக்கலாம். இறுதியில் TREAD MILL ல் ஓடும் தாய்பாத்திரம் வரும் ஷாட் சொல்லும் செய்தி. இவ்வளவு தேடலுக்கு பின்னும் தான் தனது நிலையிலிருந்து மாறாமல் அதே இடத்தில் நிற்ப்பது என முழுநீள படத்தின் இறுதி காட்சிவரை இயக்குனரின் தனி சாம்ராஜ்யமே.    


படத்தின் டிரைலர் லிங்க்:
https://www.youtube.com/watch?v=mLegoO4NdD8

Saturday, December 9, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 120.

COMPETING BEST FOREIGN LANGUAGE FILM - HUNGARY - OSCARS #1

ON BODY AND SOUL (2017) – HUNGARY  - நம் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

ஒரு படம் எத்தனை தூரம் பார்வையாளர் மனங்களை கவரும் என்பதற்கு மிகமுக்கிய பங்கு அக்கதை தேர்ந்தெடுக்கும் களத்திற்கும் உண்டு. வெறும் களங்களால் மட்டுமே காலத்திற்கும் நின்ற சாதாரண கதைகளும் உண்டு. இரு பாத்திரங்களுகிடையேயான நேசத்தை கதைப்படுத்த எத்தனையோ களங்களை கற்பனைகளில் பொருத்தி பார்க்கலாம். ஆனால் கதைபடுத்துதல் எளிதல்ல. காரணம் அது மொத்த படத்தின் எந்த ஒரே ஒரு ஷாட்டிலும் தனித்து தெரியாமல் கதையுடன் பொருந்தி போகவே வேண்டும். மேலும் அக்களம் அந்த கதையையும் அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அப்படியான உருவாக்கமே அக்களத்திற்கு அந்த படைப்பாளி கொடுக்ககூடிய அதிகபட்ச மரியாதை. தனிமையை  துணையாக கொண்ட இரு பாத்திரங்களுக்கிடையேயான வெறும் நேசம் கொண்ட சராசரி கதையை காலத்திற்கும் நிற்கும்படியான களத்தை பொருத்தி, கதைப்படுத்தி, அதையே காட்சியும்படுத்தி பார்வையாளர்களை பரவசம் தாண்டிய வேறொரு தளத்திற்கு அழைத்து சென்றது.!!


ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவுகளில் உயர் பதவிவகிக்கும் தனக்கென யாருமற்ற ஆண் மற்றும் பெண் என்ற இந்த இரு பாத்திரங்களே இக்கதையின் பிரதானம். இந்த எளிய கதையை மட்டுமே குறைந்தது நூறு சினிமாக்களில் பல்வேறு தளங்களில், மொழிகளில் கண்டு ரசித்திருப்போம். நாம் இதற்க்கு முன் கண்டிராத எந்த வகையான களம் தெளிந்த நீரோடை போன்ற இந்த எளிய கதையில் கலக்கப்பட்டுள்ளது என்பதிலே இக்கதை கூடுதல் சிறப்பு பெறுகிறது.  


ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு துறைகளில் பணியில் இருப்பினும் மற்ற அனைவரிடமிருந்தும் தனித்து தெரியும் நாயகியின் பால் நாயகனுக்கு துவக்கம் முதலே சிறு ஈர்ப்பு இருக்கும். பின் ஒரு கட்டத்தில் தங்கள் இருவரின் கனவுகளும் (தூக்கத்தில் வருவது லட்சியமல்ல) ஒன்றே என தெரியவரும் கட்டத்தில் இவர்களுக்கிடையே துவங்கும் பழக்கம் தங்களது முதல் நாள் கனவுகளை பகிர்ந்து கொள்ளும் கட்டத்தில் சற்று நெருக்கம் ஏற்பட்டு அவர்களுள் அப்படின்னு எந்த வழக்கமான யூகங்களுக்கும் நம்மை கொண்டு செல்லாமல் அவர்கள் உறவு அங்கேயே சிறு முன்னேற்றம் அல்லது பின்னடைவுடளுடன் இருக்கும். அப்படினா படம் பூரா இவங்க மட்டுமே பேசி நம்மளை கொல்லபோறங்களா என்றால் கிட்டத்தட்ட சரிதான். ஆனால் இந்த அனுபவம் நிச்சயம் நம்மில் பெரும்பாலோர் எந்த திரைப்படங்களிலும் இதற்க்கு முன் அனுபவித்திடாதது.


தங்கள் கனவுகளை சோதித்து பார்க்க இருவரும் ஒரே அறையில் தங்க முடிவெடுப்பது. அவை கைகூடாமல் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயல்வது. இவ்வாறாக நம்மையும் அவர்களுடனே பயணப்பட வைத்து இறுதியில் இவர்கள் இருவரும் இணையும் இரவிற்கு அடுத்த பகலில் தங்களது கனவும் அந்த இரவுடனே முடிந்ததாக அவர்கள் அறிந்துகொள்ளும் நிமிடத்தில் நிறைவுறும் இந்த படம் சொல்லும் செய்தி என்ன.?


ஒரே கனவு இருவருக்கும் என்பதில் துவங்கும் நட்பின் அடுத்த கட்டமாக நாம் இருவரும் ஒரே அறையில் தூங்கி பார்க்கலாம் என்ற இடம் இக்கதையின் மிகமுக்கிய காட்சியாகும். அதுவரை தினமும் கனவு+உறக்கங்களுடன் இரவுகளை கழித்தவர்களுக்கு அன்று சாலையில் செல்லும் வாகனங்களின் இரைச்சல்.அடுத்த வீட்டு தொலைக்காட்சி ஓசை என அதுவரை இரவில் அவர்கள் உணர்ந்திடாத ஒலிகள். அவர்களை தூங்கவிடாமல் ஒரு அளவுக்கு மேல் பொறுக்காத நாயகி வீட்டிற்க்கே திரும்ப முடிவெடுப்பாள்.


ஒரே கனவு இருவருக்கு சாத்தியம் இல்லை. அதை இயக்குனரும் ஒரு காட்சியில் தெளிவுபடுத்தியிருப்பார். பின் இதில் கனவுகளாக சித்தரிக்கபடுபவை? அவர்களின் உணர்ச்சிகளையே கனவுகளாக சித்தரிக்க படுவதாலே இருவரும் ஒரே அறையில் ஒன்றான பின்னும் அங்கு நமது கனவுகளுக்கு இடமில்லாமல் போவது. இவ்வாறான ஒரே உணர்ச்சிகளில் உந்தப்படுவோரின் நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக உள்ளதே இவர்கள் இருவரும் தற்கொலை முடிவு ஒரே நேரத்தில் எடுப்பதும் என முழு படத்தின் எந்த ஒரே ஒரு ஷாட்டும் இக்கதைக்கு துளியும் சம்மந்தமில்லாத வகையில் அமையபெற்றதே இவ்வாறான உளவியல் சார்ந்த திரைப்படங்களை நம்மில் பெரும்பாலோர் துணிந்து முழுதும் ரசிக்கமுடியும்.


கூடல் ஒன்றே மையகருவாக கொண்ட கதையின் ஒரே ஒரு காட்சியில் கூட நேரடியாக அது சம்பந்தமான எந்த ஒரு காட்சியும் இல்லாமல். கதையும் அந்த மையகருவை தாண்டி செல்லாமல் ஒரு படம். நீலபடமொன்றை நாயகி தொலைகாட்சியில் பார்க்கும் காட்சியில் அவள் எந்த விதமான உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உணவருந்தி கொண்டே ஏதோ செய்திகள் பார்ப்பது போன்ற நிலையில் அமர்ந்திருப்பதும். பின்னொரு காட்சியில் ஒரு காதல் பாடலை கேட்க்க நேர்கையில் நிலை கொள்ளாமல் தவிப்பதும். காதல் இல்லாத வெறும் கூடல் எந்த வகையிலும் நமக்கு நிறைவை தராது என்ற வகையில் அமையபெற்ற காட்சி. இவ்வாறான முழு படமும் நம்மை இதேபோன்று ஏதோ ஒன்றுடன் பொருத்தி பார்க்க செய்யும் வகையிலே அமைக்கப்பட்டிருக்கும்.
ஒருவர் மீது கொள்ளும் காதலே நாம் இறக்கும் தருணம் வரை நம்முடன் வரும் கூடல் ஒரு வயதிற்கு பின்னாக அத்யாவசியமாகாது என்பதாலே தான் தற்கொலை முடிவேடுத்தவள். அந்த காதல் பாடலை கேட்டுகொண்டே இறக்கலாம் என அப்பாடலை ஒலிக்கவிடுகிறாள். தனது மணிக்கட்டை அறுத்துகொண்டு பாத்டப்பில் படுத்திருப்பவள் முகத்தில் ஏற்ப்படும் மனநிறைவும். திடீரென ஏற்படும் கோளாறில் அப்பாடல் பாதியில் நின்றுவிட அவள் முகத்தில் ஏற்படும் சஞ்சலங்களையும் முழுக்க எழுத்து வடிவமாக்க சாத்தியமில்லை.


இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் எடிட்டிங் மட்டுமே இக்கதையின் உயிர்நாடி. ஏனெனில் இப்படம் முழுக்க நிறைவுறும் வரையில் ஒரு காட்சியில் கூட நாம் இந்த இசை மற்றும் எடிட்டிங்கை பற்றி நிச்சயம் தனித்து உணரமாட்டோம். அவை காட்சிகளுடனே அவ்வளவு நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கும்.


காதல் செய்வோம்.

Monday, November 20, 2017

 
பார்த்ததில் மிகவும் ரசித்தது : 082.

அலமாரியில் உள்ள புத்தாடையை அணியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள சிறார்களை போல், பெரும்பான்மை இரவுகள் தன்னால் கொடூரமாக கொலை செய்யப்படும் நபர்களை அறிய வெகு ஆவலுடன் காத்திருக்கும் இக்கதையின் பிரதான பாத்திரம்.


தானோ அல்லது தனது குடும்பத்தார், நண்பர்கள், காதலி இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டர்களோ அவர்களை ஆக்ரோசமாக பழிவாங்கும் அல்லது இறுதியில் அவர்களை மன்னித்து செல்லும் பாத்திரங்களை மட்டுமே பார்த்து மகிழ்ந்த நம்மை செவிட்டில் அறையும் சினிமா.


இலக்கே இல்லாமல் தன் மனதுக்குப்பட்ட, தனக்கு மிகப்பிடித்த நபர்களாக தேர்ந்தெடுத்து. சாதாரணமாக இல்லாமல் கொடூரமாக பெரும்பாலும் இரும்பு ராட்டில் அடித்தே கொல்வதை மிக இயல்பாக, ரசித்து மகிழும் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும். என எந்த வரைமுறையும் அற்று மிகச்சாதரணமாக நவசுதின். இந்த முறை அவர் தொட்டது உச்சம்.


அவரின் நடை, பாவனை, நக்கல் பேச்சின் லாவகம், போலீசாரிடம் சிகரட் கேட்க்கும் பாங்கு. முதல் கொலையில் தென்படும் பதற்றம், தனது இயல்பிலிருந்து சட்டென மாரும் நொடியில் கொலை புரிய துவங்குவது. கொல்ல யாருமற்று நடுஇரவில் சாலையில் செல்கையில் கடக்கும் தெருநாய் தன்னை கேலி செய்வதாக எண்ணி அதை விரட்டும் இடத்தில் தென்படும் கோபம்.  விரக்தியுடன் செல்லும் வழியில் கைக்குழந்தையுடன் வெட்ட வெளியில் சமைத்து கொண்டிருக்கும் பெண்ணை காணும் நொடியில் அவன் கண்களில் தென்படும் பரவசம். பெரும் ஆனந்தத்துடன் அவளை கொல்ல அவசரத்தில் ஒரு செங்கலை எடுத்து ஓடிவரும் வேலை, அங்கு பத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவருந்தி கொண்டிருப்பதை கண்ட வினாடி அவன் முகத்தில் சடாரென பரவும் வெறுமையும், ஏமாற்றத்தையும்.... என இவ்வளவு உணர்ச்சிகளையும் வார்க்கப்பட்டது போல நவசுதின்.


தனிமனிதனை மட்டுமே சுற்றி சுழல கூடிய கதையில் அகன்ற ஈர விழியும், உலர்ந்த உதட்டின் சொந்தக்காரி அசிஸ்டன்ட் கமிஷனர் காதலியும், தனது அண்ணனை சந்தித்த பதட்டத்தை உடலின் அனைத்து பாகங்களிலும் வெளிப்படுத்தி நம்மையும் தொற்றிக்கொள்ள வைத்த நவசுதினின் தங்கை பாத்திரமும், பெரும் சத்தத்தால் திடும்மென கதவை திறந்து பார்க்கையில், தனது கணவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க அருகில் பெரும் இரும்பு ஆயுதத்துடன் நிறுக்கும் கொலையாளியை காண்கையில் ஏற்ப்படும் மரண பீதியை நமக்கும் கடத்திய வேலைக்காரி பாத்திரம். இந்த கொடூர, இலக்கு ஏதுமற்ற, வரைமுறைக்கு சற்றும் ஒவ்வாத இந்த சினிமாவின் திருப்பங்களும், சுவாரசியமும் பெண்களை கொண்டே ....

https://www.youtube.com/watch?v=xq1cEmhVa68



 
பார்த்ததில் மிகவும் ரசித்தது : 076.

சவுண்ட் மிக்சிங்... நம்ம பக்கத்து மாநிலத்துல இருந்து ஆஸ்கார் வரை சென்று இந்த பிரிவில் விருது வாங்கியவர் கூட உண்டு. ஆனால், என(நம)க்கு இந்த துறை பற்றி பெரிய பரிட்சயமேதுமில்லை. சவுண்ட் மிக்சிங் ஒரு படத்தின் வெற்றிக்கு எவ்வளவு தூரம் துணை புரியும் அல்லது ஒரு படம் முழுமையடைய இந்த துறையின் பங்களிப்பு என்ன?


இந்திய அளவில்! ஏன் உலகளவில்!! வெற்றிபெற்ற பெரும் பட்ஜெட் படங்களில் கூட உணரமுடியாத இந்த துறையின் மதிப்பை. வெறும் நான்கு பாத்திரங்கள் அதிலும்.. இரு பாத்திரங்கள் மட்டுமே பெரும்பான்மை வகிக்கும் ஒரு ஒன்றரை மணிநேர கதையில் உணரமுடிந்தது. திரையில் மைக்ரோ செகண்ட் வந்து போகும் காட்சிகளில் கூட, இவர்களது உழைப்பும் நுண்ணிய செயல்பாடுகளும் பெரிதும் ஈர்த்தது.


திடும்... என பெரும் சப்தத்துடன் டைட்டில் கார்ட். ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த வனத்தின் உள்ள சிறிய வீட்டில் துவங்குகிறது. முதல் நான்கு நிமிட படம்... அடுத்த ஒன்றரை மணிநேர கதைக்கான அடித்தளம். காது கேளாத ஒரு பெண் எழுத்தாளர் தனது எழுத்து பணிக்காக தனிமை வேண்டி தங்கியுள்ள வீட்டில் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் தனிமையில் சிக்கி கொள்கிறார்.
இதே பாணியில் ரத்தமும் சதையுமாக நிறைய கதைகளை பார்த்திருந்தாலும் எழுத்தாளர் & கொலைகாரன். என இரண்டே பாத்திரங்கள் மட்டுமே கொண்டு சிறிதும் பார்வையாளருக்கு சலிப்பும் ஏற்படுத்தாமல் பெரும் எதிர்பார்பையும் ஏற்படுத்தும் அதிவேக திரைக்கதை.


கதைக்களமாக ஓரே வீடு, பாத்திரங்களாக இருவர், காலம் ஓரே இரவு. என அனைத்தும் மிக எளிமையாக எடுத்துக்கொண்டு. மிக பிரமாண்டமான திரைக்கதையும், சுவாரசிய சம்பவங்களை கொண்டு காண்போரை சிறிதும் நகரா வண்ணம் அமைந்த செம்ம திர்ல்லர் வகையறா சினிமா.



https://www.youtube.com/watch?v=Q_P8WCbhC6s

பார்த்ததில் மிகவும் ரசித்தது : 083.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை அச்சு அசல் பிரதிபலிப்பவர்கள், அதர பழைய கதையை புது பாணியில் கொடுத்து அசத்துபவர்கள் இந்த முறை அதிரி புதிரியாக அசத்தியது கேங்ஸ்டர் களத்தில்.


கேங்ஸ்டர் கதை தான். ஆனால் கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாமல். வெறி தீர துரத்தும் பழிவாங்கல் இல்லாமல்.சீறி பாயும் வாகனங்களின் பேரிரைச்சல் இல்லாமல். மிரட்டும் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் இவர்கள் தந்தது வழக்கத்தைவிட மிரட்டல் சினிமா.


மும்பை ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணன். ஒருநாள் தனது பால்ய நண்பன் கங்கா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறும் நொடியில் பெரும் சப்தத்துடன் அவரது அலைபேசி மறுமுனையில் விழுந்து நொறுங்குகிறது. நண்பனை தேடி தனது சொந்த ஊரான கம்மட்டிபாடதிற்கு கிளம்புகிறான் கிருஷ்ணன் தனது பால்ய நினைவுகளுடன்.


அங்கு ஆசான்தான் பெரிய மனிதர். அவர் நினைப்பதை செய்து முடிக்கும் எதுவாயினும் செய்து முடிப்பவன் பாலன். அவனுக்கு கீழ் அவனது தம்பி கங்கா, அவனது நண்பர்கள் கிருஷ்ணன் மற்றும் அவர்களது என சில பதின்பருவத்து பசங்க. பாலனோட சேந்து ஒரு பெருமைக்கு, கெத்து காட்ட கங்கா & கிருஷ்ணா நண்பர்கள் குழு செய்யும் சிறு சிறு தவறுகள் மேல் இவர்களுக்கு ஏற்படும் அதீத ஈடுபாட்டால் அடுத்த முப்பது வருடங்களில் இவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே.!!



குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டியது திரைக்கதை மட்டுமே. நிறைய பாத்திரங்கள் உள்ள கதையை மூன்று கிளை திரைக்கதைகளாக நகர்த்தி சென்ற விதம் மகா துல்லியம். சுமாரான கதையை அசாத்திய பாத்திரங்களை கொண்டு அவர்களையும் மொக்கையாக்குவதும். அசாதரணமான கதையை சுமாரான பாத்திரங்களை கொண்டு அக்கதையையும் சுமாராக மாற்றுவது எல்லாம் நிறைய நாம் இங்கு பார்த்தது.


அனைவரின் பங்களிப்பும் நிறைவாக இருப்பினும் இக்கதையின் உயிர்நாடியான இந்த இரு பாத்திரங்களின் பங்களிப்பு.!!


ஒவ்வொரு பாத்திரதிற்க்கும் மூன்று மூன்று நடிகர்கள். குழந்தைபருவம், பதின்பருவம், 40+ வயதிற்கான பருவம் என இவர்களின் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு.!! இதுப்போல பத்து பொருத்தமும் கூடி வரும் ஜாதகத்தை மிக சமீபத்தில் பார்த்ததாக நிச்சயம் நினைவில் இல்லை.
1.இவர்கள் வாழ்க்கையில் ஜாலிக்கு தொடங்கி பணத்திற்காக இந்த அடிதடியை தொடரும் தருணம்.!!
2.படத்தின் துவக்கத்தில் இவர்கள் பயன்படுத்திய பாதையும் நிலஆக்ரமிப்புக்கு பின் மிககுறுகிய பாதையின் வழியே இவர்கள் பிணத்தை தூக்கி செல்லும் காட்சி .!!
வசனங்கள் ஏதுமற்று திரைக்கதையின் உழைப்பிற்கு இந்த இரு காட்சிகளே சான்று.


https://www.youtube.com/watch?v=B-m13AJMxW4

Saturday, November 18, 2017




எந்த விறுவிறுப்பான திரைக்கதையும் அதன் முடிவை நெருங்கும் வேளையில் கதையில் ஏற்படும் வேகம், அதற்க்கு முந்தைய காட்சிகளை விட சற்று கூடுதலாக இருக்கும். அவ்வாறான படங்களே அரிதான சூழலில் ஒரு கதை அதன் இடைவேளையிலேயே கிட்டத்தட்ட அதன் முடிவை நெருங்கிவிட. அதற்க்கு பின்னான இரண்டாம் பாதி கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் முழுக்க அந்த கூடுதல் வேகத்துடன் அதே வேகத்துடன் நகர்த்திசென்று முடிப்பது என்பது சாத்தியமா? அல்லது அவ்வாறான ஒரு தமிழ் படம் இறுதியாக எப்பொழுது பார்த்தோம் என நினைவில் உள்ளதா? எனக்கு நினைவிற்கு ஏதும் வரவில்லை. அவ்வாறான ஒரு அதிவேக திரைக்கதை அமையப்பெற்ற படம் தீரன்.

போலீஸ் படங்களை செய்து தங்களின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த நாயகர்கள் வரிசையில், இந்த முறை நாயகனுடன் சேர்த்து மிகப்பெரும் உயர்விற்கு செல்லவிருப்பது இயக்குனர் வினோத்தும். இதுவரையான போலீஸ் கதைகளில் அவர்களின் துறைசார்ந்த டீடைலிங்கே இப்படம் அளவு சொல்லப்பட்டதில்லை என்பதே இப்படத்தை பார்க்கும் பெரும்பாலோருக்கு தோன்றும். அந்த கொள்ளையர்களை பற்றிய டீடைலிங்கை திரைக்கதையில் நிறுவிய வகையில் வினோத் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சார்ந்த அனைவரின் கவனத்திற்கும் உரியவராகிறார்.
இக்கதையில் பிரதான பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்ட ஹைவேக்களில் தனியாக உள்ள வீடுகளில் உள்ளவர்களை கொடூரமாக கொன்று. பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர்களையும். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய அவர்களின் துல்லிய வரலாற்றையும், மற்றும் துவக்க காட்சியிலே அவர்களின் மீதான பயத்தையும் வெறுப்பையும் பார்வையாளர்களுக்கு கடத்திய இடங்களிலே வினோத் கிட்டத்தட்ட பாதிக்குமேல் ஜெயித்துவிட்டார். அதன்பின்னான காவல்துறை ஒரு குற்றத்தை விசாரிக்கும் அவர்களின் போக்கை விரிவாகவும் குறிப்பாக இவ்வளவு துல்லியமாகவும் காட்டிய வகையில் தனது மீதி வெற்றியையும் தக்கவைத்து கொண்டார். அதும் 1995களில் எந்த தொழில் நுட்பமும் அரசாங்கதுறைகளை எட்டாத காலங்களில் வெறும் கைரேகைகளை கொண்டு இந்தியா முழுக்க பயணித்த நம் காவல்துறையினரையும், அதன் சாதக பாதகங்களை துளிபிசகாமல் மிக நேர்த்தியாக படைக்கப்பட்ட திரைக்கதையும் காலத்திற்கும் நிற்கும். இனி போலீஸ் சப்ஜெக்ட் தொட முயற்சிக்கும் எந்த இயக்குனருக்கும் மிகப்பெரிய சவாலாக இப்படம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியின் கதைக்களம் நிகழும் காட்சிகள் இடைவேளைக்கு முன்பான இருபது நிமிட சேஸிங்ஸ் அபாரம்.

சதுரங்க வேட்டை வினோத்தின் மிகப்பெரும் பலம் அவரது வசனங்கள். கார்த்தியை இந்த கொள்ளையர்களை தேடும் பணியிலிருந்து உயரதிகாரி நீக்கியபின் அவரிடம் இவர்கூறும் வசனம் காவல்துறையின் மீது அனைத்து பார்வையாளனுக்கும் மிகபெரும் மதிப்பை ஏற்ப்படுத்தும். அக்கொள்ளையர்களின் மீதான பயத்தை ஆரம்பகாட்சியிலே ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர் சத்யசூர்யன் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோரின் உழைப்பு படம்நெடுகிலும் தனித்து தெரியும். குறிப்பாக வில்லனின் ஆரம்பகாட்சி பின்னணி இசை பட்டாசு. இது போன்ற கதைகளில் காதல் காட்சிகளை நீக்கியிருந்தால் படத்தின் நீளம் குறைந்து இன்னும் விறுவிறுப்பான படம் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதுபோன்ற பரவலாக அறியப்பட்ட நாயகர்களை முன்னிருத்தையில் இதுபோன்ற அட்ஜஸ்மென்ட் தவிர்க்கஇயலாதது. இல்லேன்னா ஒரு ரெண்டு சீன் சத்யனுக்கு கொடுக்கும் நிலையெல்லாம் வந்திருக்குமா?


எந்த வழக்கையும் காவல்துறை மிககண்ணியமாகவும், நேர்மையாகவும் கண்டிப்பாக அணுகும் என்று சொல்லப்படும் கதையில் அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளின் குடும்பமே நேரடியாக பாதிக்கபடுவது போல் அமைக்கப்பட்ட மிகச்சில சமாச்சாரங்களை நீக்கிபார்த்தால் நீண்ட இடைவெளிக்கு பின்னான கெத்து போலீஸ் கதை. படம் பார்த்த அனைவருக்கும் காவல்துறையின் மேல் மிகப்பெரும் மதிப்பை ஏற்படுத்திய இயக்குனருக்கு ராயல் சல்யுட்.  

Thursday, October 12, 2017





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 119.

JULIAS EYES (2010) – உணர்தலின் மகத்துவம்

ஒரு சூத்திரமோ அல்லது ஒரு நிகழ்வோ அதை காண்பதற்கும், உணர்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அப்படியான ஒரு சம்பவம் இக்கதையிலும் நடக்கிறது. அனைவரும் அதை கண்டு செல்கையில், அவள் மட்டும் புலம்பி தவிக்கிறாள். மன்றாடுகிறாள். இறுதியில் அவளையும் மதி அதேபோன்ற ஒரு சம்பவத்தை இவளை கொண்டே நிகழ்த்த விளைகிறது.


இரட்டை சகோதிரிகளில் ஒருவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அவளின் இறப்பிற்கு காரணம் ஏதும் இல்லை. அவளது பார்வை குறைபாடே அவளை இந்த நிலைக்கு கொண்டுவந்ததாக மற்றொரு சகோதிரியின் கணவனே விளக்கம்கொடுக்க, போலீஸ் வழக்கை நிறைவுற்றதாக முடிக்க விளைகிறது. ஆனால் மற்றொரு சகோதரி நிச்சயம் இது தற்கொலை அல்ல கொலை என மன்றாடுகிறார். ஆனால் இதை கொலை என கூற திடமான எந்த கூற்றும் அல்லது சுட்டிகாட்ட எந்த நபரும் அவள் வசம் இல்லை. ஆனால் அவளால் விளக்கி சொல்ல முடியாத யாரையும் குறிப்பிட்டு சொல்லவும் இயலாத சில விசயங்களை உணர்கிறாள். உடனே கதையின் தலைப்பை வைத்து இவள் கண்களுக்கு அவள் சகோதரிக்கு இறுதி நாட்களில் நிகழ்ந்த விஷயங்கள் தெரிவதாக கணக்கிட வேண்டாம். படத்தின் துவக்க காட்சியிலே நமக்கும் அவள் (தற்)கொலைக்கு காரணம் மற்றொரு நபர் என்றும் மேலும் இது பேய் கதை அல்ல என்றும் விளக்கமாக காட்டப்பட்டு விடுகிறது.


இப்படியான ஒரு கதை. இதுபோன்ற திடமான அறிமுக காட்சி ஒன்றே போதும் இப்படத்தை தாங்கள் இறுதிவரை தொடர்ந்து ரசிக்க. வழக்கமான ஒரு திர்ல்லர் அல்ல ஒரு ஒரு முடிச்சாக அவிழ்த்து இறுதில் கொலைகாரனை நெருங்க. அவளால் தன் சகோதிரியின் இறப்பிற்கு காரணமானவனை பலமான எந்த நிகழ்வுகளை சுட்டிகாட்டியும் கூறஇயலாத வகையில் காட்சிகள் வேண்டும். அக்காட்சிகள் மிக லேசாக பட்டும் படாமல் இருந்தாலும் பார்வையாளனுக்கு சலிப்பை ஏற்ப்படுத்தும். பலமாக இருந்தால் பின் இவளால் ஏன் இந்த நிகழ்வை விளக்க இயலவில்லை அல்லது அந்த நபரை ஏன் சுட்டிகாட்டவில்லை என்ற கேள்வி நம்மையும் நிச்சயம் கேட்க்க வைக்கும்.


பின் எப்படி காட்சிகள் வைத்துதான் இக்கதையை நகர்த்துவது?. அதற்கான விடையை துவக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சி ஏன் ஒவ்வொரு ஷாட்டிலும் வைத்து. மொத்த பார்வையாளனும் இருக்கையின் நுனியில் அமர்ந்தே முழுக்கதையையும் இறுதி நிமிடம் வரை நகர்த்தி ரசிக்கும் வண்ணம் கொண்டு செல்கின்றனர். உதாரணமாக இறந்த சகோதரி செல்லும் உணவகத்திற்கு செல்லும் கிட்டதட்ட ஒரே உருவம் உள்ள இவளுக்கு பேரர் மூலம் அவள் கடைசி முறை வந்தபொழுது கண்களில் கட்டுடன் வந்ததாகவும். அறுவைசிகிச்சை நடந்துள்ளதாகவும் அறிகிறாள். அறுவை சிகிச்சை மேற்கொண்டவள் பார்வை வரும் வேலையில் எதற்காக தற்கொலைக்கு முயலவேண்டும். அது கொலையே என வாதிக்க துவங்கயிலே அவள் கணவன் அவள் அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததாகவும், அதனாலே அவள் தற்கொலை செய்ததாக தெரிவிக்க. தங்களுக்கு இந்த விஷயங்கள் எவ்வாறு தெரியும் என கேட்க அவள் நினைக்கும் வேளையிலே. நேற்று அவள் மருத்துவரிடம் தான் பேசியதாகவும் தெரிவிக்கிறார்.


அன்றே ஒரு வயதானவர் இவளை சந்திக்க வருகிறார். தான் அந்த உணவகத்தில் பணிபுரிவதாகவும். உங்கள் சகோதரி தனியாக அங்கு வந்து தங்கவில்லை, உடன் ஒருவன் இருந்தான் எனவும் தாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்துகிறார். குழப்பமான அவள் பார்வைக்கு பதில் அளிப்பவர். அவன் பார்வையில் மிகுந்த குரோதம் இருந்தது. அவன் இயல்பிலே இல்லை. தங்கள் சகோதரிக்கு எந்த அசம்பாவிதம் நடந்திருந்தாலும், நிச்சயம் அவனது பங்கு சிறிதேனும் இல்லாமல் இருக்காது என்கிறார். முதல்முறை தனக்கு சற்று பலமான சாட்சியே கிடைத்த சந்தோசத்தில் தன் கணவனை CCTV புட்டேஜ் பார்க்கலாம் எனக்காக இறுதி முயற்சி. இதில் பலன் இல்லையேல் நான் மீண்டும் இந்த விசயத்தில் அக்கறை காட்டமாட்டேன் என்ற உறுதிஅளிக்க. புட்டேஜ் பார்க்க செல்லும் கணவன் மாயமாகிறான். அவனை தேடி செல்லும் பெண் மற்றும் செக்யூரிட்டி கண்முன்னே புட்டேஜ் HARDDISK மாயமாகிறது. கதை உச்சம் பெரும் வேலையில் ஹோட்டலுக்கு போலீஸ் விரைகிறது.


தன் சகோதரியுடன் ஒருவன் வந்ததற்கான கண்ணால் கண்ட சாட்சியே உள்ளதென அந்த வயதானவரை காட்ட அழைத்து செல்கிறாள். அங்கே??
இது போல எந்த படத்தின் காட்சியையும் விவரித்ததில்லை காரணம் இனி இப்படத்தை பார்ப்பவர்களின் சுவாரசியம் குறையக்கூடாது என்பதால். இக்காட்சியை விவரிக்க உண்மை காரணம். பலமான நிகழ்வுகள் இல்லாததால் எவ்வாறு தன் சகோதிரியின் கொலையை அவளால் நிரூபிக்க இயலவில்லையோ. அதேபோன்றே  நானும் உணர்ந்தே இறுதிவரை வந்ததால் அதை எந்த வழியிலும் விவரிக்க இயலவில்லை. மேற்கூறிய காட்சி சும்மா ஒரு 1௦ நிமிடம் நடுவுல வரும். இது எந்த வகையிலும் உங்களுக்கு இப்படத்தின் மீது ஆர்வகுறைவை ஏற்படுத்தாது.
விளக்கப்பட்டது ஒரு ரெண்டு சதவிகிதம் என வேண்டுமானால் வைத்துகொள்ளலாம். 

இக்கதையை மேலும் சுவாரசியமாக்க ஒரு சிறிய தகவல் தற்கொலை செய்து கொண்ட பெண் முழு பார்வை பறிபோனவள். இவளது கொலைக்கான காரணம் தேடி செல்லும் அவளது சகோதரி பார்வை குறைபாட்டில் உள்ளாள். சிறிது சிறிதாக குறைந்து கூடிய விரைவில் முழுதாக பறிபோக உள்ளாள். அடுக்கடுக்காக எளிதில் யூகிக்கவியலாத பல அடுக்குகளின் கோர்வை இப்படம்.


               
                 கண்தானம் செய்வோம் – நன்றி.

Saturday, September 30, 2017





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 118.

தங்கள் மண்ணில் தங்களது பருவநிலைக்கு விளையும் பண்டங்களை உண்டு வந்த மனிதன். வழிபோக்கர்கள் மூலம் அவர்களது பண்டங்களை பெற்று தங்களது பண்டங்களை மாற்றிகொண்டனர். பின்னர் கி.மூ 300 களின் துவக்கத்தில் தங்கள் வசதிக்காக வேண்டியதை வாங்கிக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டதே நாணயங்கள். உலகின் அனைத்து விதிகளும் வழிமுறைகளும் சில காலங்களில் காலாவதியாகி மாற்றம் பெற்றுவரும் சூழலில் கி.மூ 300களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மட்டும் பலவித பரிணாம மாற்றங்களுக்கு உட்பட்டாலும் இன்றும் உலகம் முழுக்க அத்தியாவசிய தேவையாகவே இருந்து வருவதற்கு மிகமுக்கிய காரணம் வணிகர்கள் மட்டுமே.


வாடிக்கையாளர்களாகிய நமது தேவையை பூர்த்தி செய்ய தோன்றிய இவர்களே இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஆடை வாகனம் முதல் அத்தியாவசிய தேவைகளான உணவுவரை முடிவு செய்பவர்கள். சக்கரம் கூட பயன்பாட்டிற்கு வராத காலத்தில் கூட பல ஆயிரம் மைல்கள் தங்களது பொருட்களை கொண்டு சேர்த்த அவர்களது ஈடுபாடு குறைந்திருந்தால், அல்லது ஏதோ ஒரு வகையில் தடைபட்டிருந்தால் நாணயம் என்ற ஒன்று என்றோ வழக்கொலிந்திருக்கும். ஆதலால் இவர்களே நமது மொத்த வரலாற்றின் மிக முக்கிய காரணி. இவ்வாறு பல விதங்களில் பரிணாம வளர்ச்சி பெற்ற இந்த வணிகர்களின் இன்றைய நிலையை தோலுரித்து காட்டும் படமே OKJA.


நம் ப்ராய்லர் கோழிகளை போல ஒரு சர்வதேச நிறுவனம் பன்றியிலிருந்து வெறும் கறிக்காக உருவாக்கும் ஓக்ஜா எனும் உயிரினம் உலகின் வெவ்வேறு சீதோசனை உள்ள 26 நாடுகளில் உள்ள குறுநில விவசாய்களிடம் கொடுத்து வளர்க்கப்படுகிறது. இதன் வளர்ச்சி காலம் பத்து ஆண்டுகள். இந்த காலங்களில் அதன் வளர்ச்சி குறித்த தகவல்களை அதன் காதில் பொருத்தி உள்ள ஹார்ட் டிஸ்க்கில் மூலம் பெற்று செல்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு பின் இதில் எந்த ஓக்ஜா அதிக வளர்ச்சி பெற்றுள்ளதோ அவர்களின் வளர்ப்பு முறையை பின்பற்றவும் அந்நிறுவனம் முடிவு செய்கிறது.

 
குழந்தை பருவம் முதல் தன்னுடனே வளர்ந்த ஓக்ஜா பத்து ஆண்டுகளுக்கு பின் அந்த நிறுவனத்தாரால் அழைத்து செல்லப்பட, அவர்களுடன் போராடி ஓக்ஜாவை அப்பெண் மீட்டாளா என்பதே மீதி கதையும். விக்ரமன் படம் பார்த்து அழுத நம்மள ஆக்சன் கதைகளிலே அதிகம் அழவெச்ச இந்த கொரியகாரங்க  குழந்தையும் ஓக்ஜாவையும் வைத்து சும்மா இருப்பாங்களா!!... 


ஆனால் கதையும் அதற்க்கு நேர்மையாக பிடித்த காட்சி அமைப்புகளும் நம்மை இறுதி காட்சி தவிர்த்து அதிகம் சிந்திக்கவும் வியக்கவும் வைப்பவை. இப்படி ஒரு கதையை அதிக பாடம் நடத்தியே அடித்தட்டு பார்வையாளர் வரை நிறைய சமாசாரங்களை புரியவைக்க வேண்டும்.. ஆனால் அவ்வாறு இல்லாமல் ஓக்ஜா குணநலன், உணவு பழக்கம், அதன் வளர்ப்பு முறை குறித்த அனைத்து சமாச்சாரங்களும் சுவாரசிய காட்சிகள் மூலமே மிக எளிமையாக அனைத்து ரசிகர்களும் உணரும்படி அமைத்த உருவாக்கல் அட்டகாசம். 


உதாரணமாக மலையில் இருந்து தவறி விழும் ஒரு முப்பது கிலோ எடை கூட இல்லாத அந்த பாப்பாவை கிட்டத்தட்ட நூறு கிலோ எடை கொண்ட ஓக்ஜாவால் அந்த கயிறை இழுத்து காப்பாற்ற முடியாதது. ஒரு நாளைக்கு ஒன்று இரண்டு பழங்களுக்கு மேல் அந்த பெண் கொடுக்கும் காட்சியில் உண்ணாமல் திரும்பி கொள்ளும் காட்சி (குறைந்த நீரில் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர்களை போல) அதிக செலவில்லாமல் பெரும் எடை கொண்டதாக வளரும் விதம். என்னதான் செயற்கையாக வளர வைக்கப்பட்டாலும் கறிக்காக வளர்க்கப்படும் விலங்குகளின் அவலநிலை பட்டவர்த்தனமாக இறுதி காட்சிகளில் அப்படியே காட்டிய விதம். அவர்களை சட்டப்படி நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழலையும் சொன்ன விதம் மனமுறுக்கும்.


ஓக்ஜாவை தேடி அந்த பெண் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு செல்கையில் வரவேற்ப்பரையில் வைக்கப்பட்டுள்ள மரம் மற்றும் அங்குள்ள பெண் நடந்துகொள்ளும் செயற்கைதன செயல்பாடுகள் மூலம் அந்த பகுதி எவ்வளவு போலியானது என சொல்லி செல்லும் இடம். படத்தின் டைட்டில் கார்டிலே கதையை துவக்கி விடுவது. அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் என இந்த ஓக்ஜா வளரும் ரம்மியமான மலை பிரதேசத்தில் கதையை துவக்கும் இடம், இறுதி காட்சியில் தொலைவில் கேட்க்கும் கன்ஷாட்ஸ் என படம் முழுக்க இயக்குனரின் முத்திரை மனதை நிரப்பி செல்கிறது.


இயக்குனர் அளவிற்கு மிகபெரும் பங்கு CG. கண்டிப்பாக வெறும் ஹாலிவுட் தரத்தில் என கூறி செல்லாவகையில் அவர்களுக்கு சவால் விடும் வகையான துல்லியம். ஓக்ஜாவின் சிறுசிறு அசைவிலும் பிரமிக்கவைத்துள்ளனர். அந்த மலைபிரதேசத்தை நம் கண்களும் மனமும் நிரம்பி வழியும் கொள்ளை அழகுடன் அளித்த ஒளிப்பதிவு. பிற்பாதி வறண்ட கதையின் வழியே பயணிக்கையில் அதன் வெறுமையையும் நம் மனம் உணர்வதை மறுக்க இயலவில்லை. 


மொத்தத்தில் அரசியல்வாதி ஆயிரம் மற்றும் ஐநூறு கோடிகளில் ஊழல் என செய்திகளில் பார்க்கையில் “இதுக்குமேலவாது எங்களுக்கும் ஏதாவது செய்ங்கப்பா. இன்னும் சேர்த்து என்ன பண்ண போறீங்கனு” நினைக்கும் மனது. இவர்களை விட அதிக வலிமையும், வாய்ப்பையும் நிரம்ப பெற்ற இந்த முதலாளிகளை பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அவர்களுக்கும் சில அளவீடுகளும், சில சட்டதிருத்தங்களும் அவசியம் தேவைப்படும் சூழலில் நின்று கொண்டிருக்கிறோம்.

இக்கதையின் பிரமாண்டத்தை அறிந்து கொள்ள:

https://www.youtube.com/watch?v=AjCebKn4iic

Monday, August 14, 2017






பார்த்ததில் மிகவும் ரசித்தது: 117.

ஒரு கதை அது ஒரு பாத்திரத்தின் மீது கொடுக்கும் அழுத்தத்தை, நியாயமான சம்பவங்கள் அடங்கிய திரைக்கதை மற்றும் தேர்ந்த நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்ட முழுமையான திரைப்படம். 2௦14 ல் இராக் யுத்தத்தில் அங்கு மாட்டிகொண்ட 2௦க்கு மேற்ப்பட்ட மலையாளி நர்ஸ்கள் மீட்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு. 

உண்மை சம்பவத்தை கொண்டு உருவாக்கப்படும் படைப்புகள் எந்த அளவு உண்மைக்கு நெருக்கமாக இருக்கவேண்டுமோ. அதே அளவு அந்த முக்கிய பாத்திரத்தை சுற்றி புனையப்படும் கிளைகதைகள் உண்மையாக இல்லாவிடினும் சுவாரசிய குறைவாக இருக்ககூடாது. நாம் எந்தளவு சுவாரசிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படைப்பை எடுப்பினும் அதை சுற்றி பின்னப்படும் கதைகளில் சுவாரசிய குறைவாக இருப்பின் அந்த படைப்பு நிச்சயம் பார்வையாளனுக்கு முழு திருப்தியை கொடுக்காது.

இக்கதை இராக்கில் துவங்குவதற்கு முன்னே அங்கு பணிக்கு செல்லும் பெண்ணாக வரும் பார்வதியை சுற்றி பின்னப்பட்ட கிளைக்கதையை கொண்டே உணர்வுபூர்வமான ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்க இயலும். இந்த நாயகி தான் ஏற்கும் பாத்திரங்களை தேர்வு செய்யும் முறையிலும் அதில் பார்வையாளர்களை பிரமிக்க வைப்பதிலும் கைதேர்ந்தவர் என்பதை இம்முறையும் நிருபித்துள்ளார்.

தான் விரும்பி மணமுடிக்கும் கணவனிடம் தனது குடும்ப சூழலை எடுத்து சொல்லி திருமணத்திற்கு பின்னும் பணிக்கு செல்ல சம்பந்தம் பெறுகிறார் நாயகி சமீரா. கட்டுகோப்பான முஸ்லீம் குடும்பத்தில் அது சாத்தியப்படாததால் திருமணமான சில வருடங்களில் விவாகரத்து பெறுகிறார். தனது பெற்றோர்களுக்காக தனது நான்கு வயது மகனையும் பிரிகிறார். மேலும் மகனிடம் அவர்களது விவாகரத்தை பற்றி கூறாமல் தான் வெளிநாட்டிற்கு பணிக்கு வந்துள்ளதாக தொலைபேசி வருகிறார். மேலும் தனது மகனை தன்னிடமே அனுப்பிவிடும்படி தனது முன்னாள்  கணவனையும் வற்புறுத்தி வருகிறார். இந்நிலையில் இராக்கிற்கு பணிக்கு செல்லும் வாய்ப்பு வர தனது குடும்பத்திற்காக செல்ல முடிவெடுக்கும் சூழலில் தனியாக அவரை வெளிநாடு அனுப்ப அவர் குடும்பம் தயங்க. சில வருடங்களாக அவருடன் மருத்துவமனையில் உடன் பணிபுரியும் குஞ்சக்கோ போபனின் காதலை ஏற்று மணமுடிக்கிறார்.
விசா வரும் வேளையில் கர்ப்பமுற்று தன் கணவனின் குடும்பத்தார் வற்புறுத்தலால் மீண்டும் வெளிநாடு செல்ல தடை ஏற்படுகிறது. இவ்வாறான சூழலில் மூன்று மாத கர்ப்பத்துடன் ஈராக் சென்று சேரும் சூழலில், தனது முன்னாள் கணவன் தனது வியாபாரம் நலிவுற்று இவர்களது மகனை நிரந்தரமாக இவரிடமே ஒப்படைத்து செல்கிறார். தனது கர்ப்பம் மற்றும் இந்நாள் கணவனை தனது பத்து வயது மகனிடமிருந்து மறைக்க முயன்று வரும் சூழலில் தனது கணவனை உள்நாட்டு யுத்தத்தில் தொலைக்கிறார்.

இவ்வாறான எளிதில் எந்த தேர்ந்த நடிகர்களாலும் எளிதில் சமாளிக்க இயலாத பாத்திரத்தை தனது ஆத்மார்த்தமான நடிப்பால் ஒவ்வோறு காட்சியிலும் பூர்த்தி செய்கிறார்.

1. “விவாகரத்திற்கு பின்னே நானே மறுமணம் பண்ணிக்கல, நீ அதுக்குள்ளே பண்ணிட்ட”. இந்த கேள்வியை தொலைபேசி வழியே எதிர்கொண்டாலும் நிலைகுலைந்து அமர்கையில் நாயகியின் செய்கை.

2. உணவை தட்டிவிடும் மகனை கண்டிக்கும் தாயிடம், “நீ இந்த மாமா கூட நீ இருப்பதாலதான் அப்பா உன்ன விட்டு போயிட்டாருனு” சொல்லும் பொழுது அதிர்ச்சியில் நாயகியின் பார்வை.

3.  மனைவி மற்றும் அவரது மகனை பிரிந்து மருத்துவமனையில் இருந்து அந்நாட்டின் எல்லை மருத்துவ முகாமிற்கு செல்லும் கணவனை சமாதானப்படுத்தும் நாயகியிடம் “அப்படியே இந்த குழந்தையும் பார்த்துக்கோ” என்று அவளது வயிற்றை சுட்டிக்காட்டுகையில் நெகிழும் நாயகியின் வெளிப்பாடு.

மேற்கூறிய காட்சிகள் மட்டுமின்றி படம் முழுக்க உணர்ச்சிமயமான அனைத்து காட்சிகளிலும் நாயகியிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிறு மாற்றமும் பார்வையாளனை நிச்சயம் நிலைகுலைய செய்வதுடன். அவர்பால் நம்மையும் ஈர்க்கும் வல்லமை பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி நாயகர்களுக்கு சமமானது. 

மேலும் இப்படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு உறுதுணையாக, ஈராக் எம்பஸியில் பணிபுரியும் சிறு வேடத்தை ஏற்று நடித்து கொடுத்த பகத்பாசில். இந்த வேடத்தில் இதே நிறைவுடன் நடித்து கொடுக்க பல நாயகர்கள் உண்டு அங்கே. மேலும் இதுபோன்ற சிறு வேடங்களில் நடிக்க இரண்டாம் நிலை நடிகர்கள் கூட தயாரில்லை இங்கே என்பதே நிதர்சனம்.

மொத்தத்தில் முழு நிறைவான நம் அனைவருக்குமே பிடித்த திரைப்படம் நமக்கு பக்கத்து ஊரிலிருந்து...

இப்படத்தின் ட்ரைலர்: 

https://www.youtube.com/watch?v=vzYSKjxtKNg

Friday, July 28, 2017


OZHIVUDIVASATHE  KALIi – இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் படம்.


ஒரு கதை அது தாங்கி வரும் கருவை முழுபடத்தில் ஒரு ஷாட்கூட நேரடியாக கூறாமல் ஆங்காங்கே மறைமுகமாக மட்டுமே கூறி. அது பார்வையாளர்களையும் சலிப்பேர்ப்படுத்தாமல் முழுதாக சென்று சேரும்படியான மிகச்சரியான படைப்பு.


கிட்டதட்ட நாற்பது வயதிலுள்ள ஐந்து நண்பர்கள் அவர்கள் மாநிலத்தின் தேர்தல் நடைபெறும் அன்று விடுமுறை தினமானமானதால் (வாக்காளர் கடமையை கூட நிறைவேற்றாமல்) ஒன்றாக குடிக்க தங்களுக்கு சௌகர்ய இடம் ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் உதவிக்கு சமைத்து பரிமாற ஒரு ஆண் மற்றும் பெண் இருக்கிறார்கள். படம் துவங்கி பதினைந்து நிமிடத்தில் அங்கு செல்லும் இந்த ஐந்து நண்பர்கள் மேலும் அந்த இரண்டு பணியாளர்கள் இந்த ஏழு நபர்களின் அடுத்த ஒன்றரை மணிநேர வாழ்க்கையே இப்படம்.


நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடிப்பது. அருகிலுள்ள குளத்தில் குளிப்பது. பலாபழம் பறிப்பது. அவர்கள் தங்களுக்குள் நடத்தும்   உரையாடல். அவர்களின் சந்தோசம், கோபம், வஞ்சம், காமம் இதை மட்டுமின்றி இவர்கள் நடவடிக்கையின் ஒவ்வொரு அசைவும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அரசியல் பேசவேண்டும். ஒரே லொகேஷனில் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்ப்படுத்தாமல் சொன்னதில் உள்ளது இவர்களின் சிறப்பு.


அவர்களில் இருவர் அந்த பெண்ணிடம் தவறாக அணுக முயற்சிக்கின்றனர். அதில் அதிக செல்வாக்கானவர் அப்பெண்மணியிடம் அரை வாங்குவது. மேலும் இலவசமாக கிடைத்த பலாபழத்தை தங்களில் செல்வாக்கானவருக்கு அதிக பங்கும் அதில் குறைந்தவருக்கு சிறு பங்கும் மற்றவருக்கு ஏதும் இல்லாமல் பாகம் பிரிப்பது. சமைக்க கொண்டுவரும் கோழியை என்னால் கொல்ல இயலாது என சமைக்கும் பெண்மணி கூறுவதால், அவர்களில் மிக எளிமையானர் தலையில் அந்த பாவச்செயல் கட்டப்படுவது. பின்னால் அந்த பாவமே அவரது தலையில் விடிவது.
அவர்களிடையிலான உரையாடல் வாக்குவாதமாகி அந்த வீட்டை விட்டு வெளியேறும் நண்பர் ஒருவரை அதற்க்கு காரணமானவர் தவிர மற்றவர்கள் (குறிப்பாக அந்த எளியவர்) சமாதானப்படுத்துவது. இறுதியில் அவர் மூலமே இவர் வாழ்க்கை முடிவது. இக்கதையின் ஒவ்வொரு காட்சியும் நமக்கு வேறு ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்தியே செல்லும்படியான திரைக்கதை அபாரம். மேலும் கதையின் அனைத்து காட்சிகளும் மறைமுகமாக பேசும் உள்ளார்ந்த அரசியல் நிலையை பற்றி சிந்திக்காமல் மேலோட்டமாக பார்த்தாலும் அந்த நண்பர்களிடயேயான இந்த ஒன்றரை மணிநேர கதை மிக சூவாரசியமாகவே செல்வதும் இதன் சிறப்பம்சம். ஆதலால் பொழுதுபோக்கிற்கு படம் பார்க்கும் ரசிகர்களையும் இக்கதை கவரும்.


இந்த நண்பர்கள் மற்றும் பணியாட்கள் மட்டுமின்றி மிக முக்கிய கதாபாத்திரமாக மழை மற்றும் அவர்கள் தங்கியுள்ள வீட்டின் அருகிலுள்ள குளத்தின் நீர் காற்றில் ஏற்ப்படுத்தும் சலனத்தையும் கதையின் போக்கோடு இணைத்து வைக்கப்பட்ட அனைத்து ஷாட்ஸ்ம் அட்டகாசம். உதாரணமாக நண்பர்களிடையே வாக்குவாதம் நடைபெற்று ஒருவர் வெளியேறி மற்றவர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வரும் காட்சியில்,  அவர்கள் வாதத்தின் போது துவங்கும் மழை. அவர்களின் வாதம் உச்சநிலையை அடைகையில் வலுபெருவதும். ஒருவர் வெளியேறி மற்ற நண்பர்கள் சமாதானப்படுத்துகையில் மிதமாகி, பின் அவரை அறைக்கு அழைத்து வந்து சமாதானபடுத்துகையில் தூறலாக மாறுவதும். அவரின் வெளியேற்றத்திற்கு காரணமானவரே வந்து கட்டியணைத்து பேசுகையில் தூறலும் சுத்தமாக நின்றுவிடுவது என அற்புத உருவாக்கல்.


படத்தின் இறுதி காட்சிவரை இக்கதையை அரசியல் படமாக எந்த சராசரி சினிமா ரசிகனாலும் உணர இயலாத வகையில் அமையப்பெற்ற நல்ல குதூகல படம். கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் கவரும். இதில் பணியாளர்களை பொதுமக்களாகவும், இலவசமாக கிடைத்த பலாவை லஞ்ச பணமாகவும், நண்பர்கள் ஒவ்வொருவரையும் ஒரு அரசியல் கட்சியாகவும் (யார் எந்த கட்சி என நீங்களே யூகித்துகொள்ளவும்). இறுதி காட்சிக்கு பின் தொலைகாட்சியில் ஒலிக்கும் கம்யூனிசம் குறித்த வாதத்தை தவறவிட வேண்டாம். நமக்கு கேரள அரசியல் குறித்த பார்வை எவ்வளவவு அதிகமோ அதை விட அதிகமாகவும் ஆழமாகவும் இப்படத்தை ரசிக்க இயலும்.

Saturday, July 22, 2017










பார்த்ததில் மிகவும் ரசித்தது: 115.


நோலன் மற்ற படைப்பாளிகளில் இருந்து அதிகளவில் மாறுபடுவது தனது கதை சொல்லும் பாணியில் மட்டுமே. ஒரே ஊருக்கு ஒரே பயணத்தில் மூன்று வெவ்வேறு பாதையின் வழியே கூட்டி செல்வது. அதில் ஆச்சர்யம்  அந்த அனைத்து பாதையுமே பயணிகளுக்கு பெரும் சுவாரசியமாகவே அமையும்படி பார்த்து கொள்வது. ஆதலாலே அதிக பயணிகள் மற்ற ஓட்டுனர்களை (இயக்குனர்கள்)  விட இவரிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பது.


ஷூட்டிங் ஸ்பாட்டைவிட அதிக உழைப்பையும், நேரத்தையும் தனது ஸ்கிரிப்ட்திற்கு இவர் செலவழிப்பது இவரது அனைத்து படைப்புகளின் மூலம் நமக்கே தெரியும். இந்த படமும் ஒரு ஊருக்கு பல வழி பயணமே. பல வேலைகளில் இவர் தேர்ந்தெடுக்கும் பாதை பயணிகளுக்கு புதிராகவே இருப்பதால் இம்முறை DUNKRIK செல்லும் பயணிகள் ஒரு முறை இந்த மேப்பை (பதிவை) பார்த்து சென்றால் இந்த பயணம் உங்களுக்கு எளிய புரிதலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


கதை அனைவரும் அறிந்த அதே இரண்டாம் உலகபோரில் பெல்ஜியம், பிரான்ஸ், மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் ஜெர்மன் படை வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். 26.05.1940 முதல்  04.06.1940 வரை என கிட்டத்தட்ட இந்த ஒன்பது நாட்கள் இவர்களின் வாழ்க்கையே இப்படம். 


இதே கதை உலகின் எந்த இயக்குனர் வசம் ஒப்படைக்கபட்டிருப்பினும் லட்ச கணக்கில் துப்பாக்கிகளும், டன் கணக்கில் தோட்டாக்களும், ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகளும் பயன்படுத்தி கதை முழுக்க இவை வெடிக்கும் சப்தத்தையும், இதனால் பாதிப்படைந்த வீரர்களின் மரண ஓலத்தையும் பின்னணியில் ஒலிக்கவிட்டு பார்வையார்களின் பரிதாப ஓட்டுகளை வாங்கி சென்றிருப்பர். மேலும் அந்த கடல் முழுக்க ரத்தத்தையும் பிணங்களையும் கொண்டு மறைத்திருப்பர். உடைந்த கை மற்றும் கால்கள் என அந்த பீச் முழுக்க மனித உடல் பாகங்களின் கண்காட்சி வேறு தனியே நடந்திருக்கும். 


ஆனால் இதே கதையை இவரிடம் சென்றதால் அடைந்த மேன்மை என்ன?


இந்த டீசரில் வரும் பின்னணி இசையும், போர் விமானத்தின் இஞ்சின் ஒலி. அதை மட்டுமே (பெரும்பாலும்) கொண்டு பார்வையார்கள் அனைவரையும் இருக்கையிலே கட்டிபோட்டது. மேலும் வீரர்கள் அனைவரும் கதை துவங்குவதற்கு முன்னே சுற்றி வளைக்கப்பட்டு விட்டனர். ஆதலால் தாங்கள் உயிர் பிழைத்ததாக வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே உள்ளதால் கதை முழுக்க (பெரும்பாலும்) துப்பாக்கி, தோட்டா மற்றும் வெடிகுண்டுகளுடனே திரிவதில்லை. ஒரு கப்பல் போர்விமானம் மூலம் சாய்க்கபடுவதை அந்த கப்பல் முழுக்க இன்ச் பை இன்ச்சாக வெடித்து முழுகுவதையும், வீரர்கள் உடல் சிதறி உயிரிழப்பதையும் மற்றும் அவர்களின் மரண ஓலங்கள் பின்னணியில் ஒழித்து பார்வையாளர்களை பீதியில் ஆழ்த்தவில்லை. ரத்தம் வீரர்களின் உடலில் இருந்து ஒரு துளி கூட பூமியில் சிதறும் காட்சிகள் இல்லை. மேலும் அவர்களின் உடல் பாகங்கள் அனைத்தும் அவர்களிடமே இறுதிவரை இருந்ததால் நாம் நிம்மதியாக வீடு திரும்ப ஏதுவாக இருந்தது.


இது எதுமே இல்லாம எப்படி ஒரு இரண்டாம் உலக போரின் ஒரு பகுதி படமாக்க சாத்தியம்? மேற்கூறிய அனைத்தும் இந்த கதைகளிலும் நிகழ்ந்தது. ஆனால் அவை நமக்கு உணரவைக்க பட்டதே அன்றி காட்சிப் படுத்தபடவில்லை. உதாரணமாக ஒரு கப்பல் போர் விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்படும் போது அது பார்வையாளனுக்கும் அந்த விமானியின் பார்வையில் இருந்தே காட்டப்படும். நமக்கு மரணம் என நேரடியாக காட்டப்பட்டதே இருவரின் மரணம் மட்டுமே. ஒன்று வீரர்களை காக்க தனது சொந்த படகை எடுத்துவரும் (MARK RYLANCE) பெரியவரின் பதினேழு வயது மகனின் மரணம் (குண்டடிபட்டு இறப்பது போல் இல்லாமல் சிறு கைகளப்பில் தவறிவிழுந்து இறப்பது). மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் பலர் மறைந்திருக்கும் படகில் ஒளிந்துள்ள பிரெஞ்சு வீரனை பயன்படுத்தி அவர்கள் தப்பித்துகொள்ள அவன் மட்டும் நீரில் மூழ்கி (அதிலும் அவன் தத்தளித்து மூச்சி முட்டி இறப்பது போல் இல்லாமல் அவரது துடிக்கும் கை அசைவு மட்டுமே காட்டப்படும்) இறப்பது. ஆக நாம் நேரடியாக பார்த்தது இந்த இரு மரணங்களை மட்டுமே அதுவும் இந்த போரின் மூலம் நிகழ்ந்ததல்ல. இவையேதுமில்லாமல் நம்மால் ஒரு போர் திரைபடத்தை பார்த்த மனதிருப்தியை எவ்வாறு ஒரு இயக்குனராக அவரால் தர தரமுடிந்தது.


முன்பே கூறியது போன்று அவரின் கதை சொல்லும் பாணி. படம் துவங்கி இரண்டாம் நிமிடத்தில் நகரில் இருந்து கடற்கரை நோக்கி ஓடி வரும் ஒரு வீரனுடன் பயணிக்கும் கேமரா ஒரு ஷாட் (மறக்காமல் அந்த சிலிர்ப்பை அனுபவிக்கவும்). இந்த ஒற்றை கதை அங்கே மூன்றாக பிரியும் தரைவழி, ஆகாயவழி மற்றும் கடல் வழியென.


கிளை கதை:1.ஜெர்மன் விமானவழி தாக்குதல்களை சமாளிக்க இரு பிரிட்டிஷ் போர் விமானிகளாக JACKLOWDEN மற்றும் TOM HARDY இருவரின் ஆகாய வழி கதை.

கிளை கதை:2. DUNKIRK பகுதியில் இருந்து தப்பிக்க பிரிட்டிஷ் நாட்டினரின் சில கப்பல்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவர்கள் நாட்டின் வீரர்களுக்கே முன்னுரிமை என்பதால் பிரெஞ்சு வீரர்களான FIONN WHITEHEAD மற்றும் ANEURIN BARNARD கப்பலில் திருட்டு தனமாக பயணிக்கும் கடல்வழி கதை.

கிளை கதை:3. கடற்கரையில் எஞ்சியுள்ள லட்சகணக்கான வீரர்களை கூட்டி செல்ல வரப்போகும் சுமார் 70௦ பிரிட்டிஷ் படகுகளுக்காக அவர்களுடனே காத்திருக்கும் ராணுவ உயர் அதிகாரி மற்றும் வீரர்களின் தரைவழி கதை.

இப்பதிவின் மூலம் படத்தின் கதை முழுக்க கூறியது போன்று தோன்றினாலும். இந்த மூன்று கதைகளையும் ஒரு சேர கூறாமல் தனது பாணியில் கூறிய விதத்தில் உள்ளது இயக்குனரின் சாதுர்யம். அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்களும் மிகச்சரியாக தங்களது பணியை நிறைவேற்றி இருப்பினும் இக்கதைக்கு உயிர்நாடியான  எடிட்டிங் LEE SMITH (BATMAN series, INSPECTION) மற்றும் MUSIC HANS ZIMMER இருவரின் மூலமே இப்படம் முழுமை அடைந்துள்ளது. இந்த பதிவு முழுக்க இப்படத்தை பார்க்கும் வழிமுறை மட்டுமே. இதை முழுக்க படித்திருப்பினும் தனது கதை சொல்லும் பாணியில் மிகபெரும் ஆச்சர்யத்தை ஒளித்துள்ளர். திரையில் தரிசித்து ஆசிபெற்று கொள்ளவும்.

Search This Blog