Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, March 31, 2020



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 153.

உலகம் முழுக்க சினிமாவில் அந்தந்த காலகட்டத்திற்க்கு ஏற்றவாறு அனைத்து ஜானர்களிலும் கதை சொல்லும் விதங்களில் தங்களை புதுபித்து கொண்டே செல்கிறார்கள். ஒரு ஜானரை தவிர. “ஸ்போர்ட்ஸ்” ஆம், ஒரு ஏழ்மை குடும்ப பின்னணியில் இருந்து தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி தன்னை ஓரளவு அந்த விளையாட்டில் நிருபித்து. குறிப்பாக காதலை அல்லது தனது குடும்பத்தை தனது லட்சியத்திற்காக தியாகம் செய்து. பின் ஒரு கட்டத்தில் தனது அனைத்தையும் இழந்தே வெற்றி பெறுவது. பெரும்பாலும் இவை மட்டுமே ஸ்போர்ட்ஸ் ஜானர் கதைகளுக்கான விதிமுறைகள். இவை உண்மை கதைகளை தழுவியே பெரும்பாலும் வருவது அந்த நபர் இங்கு எந்தளவு பிரபலமாக இருக்கிறார் என்பதை பொறுத்ததே.

ஆனாலும் இதில் உள்ள மிகபெரும் சவால் இந்த வழக்கமான டெம்ப்ளட்க்கு உள்ளேயே திரைக்கதை செய்து அதை வெற்றி பெற செய்வது. அவ்வாறு இந்த ஸ்போர்ட்ஸ் ஜானரில் சமீபத்தில் ரசிக்க வைத்தவை JERSEY மற்றும் DANGAL படங்கள். இவ்விரண்டு கதைகளின் வெற்றிக்கு பின்னே உள்ள பொதுவான அம்சம் அக்கதை அவர்களின் குடும்ப பின்னணியில் இருந்தே தொகுக்கபட்டிருக்கும். முன்னாள் கிரிக்கெட் வீரனின் நிகழ்காலமும், முன்னாள் பயில்வான் தன் மகள்களை அவ்விளையாட்டிற்க்கு தயார் செய்வதும் என்ற அவர்களின் குடும்ப பின்னணி சார்ந்த திரைக்கதையே அப்படங்களுக்கான அச்சாணி.

இந்திய சினிமாக்களில் உலகெங்கும் பரவலாக அதிக மக்களால் பார்க்கப்படும் ஹிந்தி சினிமாவில் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் படைப்புகள் வெளிவர துவங்கியது. அவை ரசிகர்களால் பெரும் வரவேற்ப்பையும் பெறவே. பெரும்பாலான இந்திய மொழிகளிலும் அவ்வாறான கதைகள் அங்காங்கே வெளிவந்து அவற்றில் பல பெரும் வெற்றியும் பெற துவங்கியது. அதில் இங்கு குறிப்பிடதகுந்தவர்கள் அனுஷ்கா மற்றும் நயன்தாரா.
இந்திய அளவில் வித்யாபாலன், கங்கனா, ஆலியா பட், சமீபமா டாப்ஷி. இந்த நால்வருமே தனித்துவமானவங்க. ஆனால் வித்யாபாலன் இப்ப பெரிய எந்த படங்களிலும் வருவதில்லை. கிட்டத்தட்ட தனது கேரியரின் இறுதிகட்டத்தில் இருக்கும் நாயகி. ஆனால் எப்பொழுது தனக்கான ஸ்கிரிப்ட் கிடைத்தாலும். உறுதியாக இந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்க வாய்புள்ளவர். டாப்ஷி தான் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு மட்டுமே பெரும் மெனக்கெடல் அவரிடம் உண்டு. அந்த பாத்திரத்திற்கான  மெனக்கெடலில் அவரால் இவர்களை போல சோபிக்க இயலவில்லை மீதமுள்ள ஆலியா மற்றும் கங்கனா இருவருமே தான் ஏற்கும் பாத்திரத்திற்காக எந்த அளவிற்கும் தங்களை தயார்படுத்தி கொள்ள தயங்காதவர்கள்.      

இவர்கள் எந்த ஒரு சிறுகாட்சிக்கும் தங்களது முழு பங்களிப்பை வழங்குபவர்கள். இருவருமே ஒரே அளவில் விருப்ப நாயகிகள் ஆனாலும் ஆலியாவை காட்டிலும் கங்கணா ஒரே ஒரு புள்ளி கூடுதலாக மிளிரும் சாமர்த்தியசாலி. உதாரணமாக இந்த கதையையே எடுத்து கொள்ளலாம். தான் இந்திய கபடி அணியின் காப்டனாக இருக்கும் காலத்தில் தாய்மை அடைகிறாள். குழந்தை பேறுக்கு பின் அணியில் சேரும் கனவில் இருப்பார். ஆனால் அக்குழந்தையின் Immunity Level மிக குறைவாக உள்ளதால். கண்டிப்பாக உடனிருந்து பார்க்கும் சூழல். அக்காட்சியில் கண்களில் தாய்மை மிளிர நிறைந்த புன்னகையுடன் அக்குழந்தையை பார்பார். அதில் துளியும் அக்குழந்தைக்கான தன்னுடைய தியாகம், அந்த கண்களிலும், புன்னகையிலும் இருக்காது. ஆலியாவால் நிறைவு செய்யகூடிய காட்சி சூழல்தான் எனினும் இந்த நிறைவை நிச்சயம் அவரால் வழங்க இயலாது. 
முழுக்க குடும்ப உறவுகளால் பின்னப்பட்ட கதை. அதிலிருந்து தன்னுடைய கனவை நோக்கி செல்லும் ஒரு தாயின் கதை. கபடிதான் இக்கதையின் நாயகன் எனினும் அதனினும் பார்வையாளனை எளிதில் தன்வசமாக்கும் தாய் என்ற அந்த பாத்திரத்தின் அனைத்து விதங்களிலும் தன்னை முழுமையாக நிறைவு செய்துள்ளார். இந்த நார்மல் சென்டிமென்டல் படங்களை கேலி செய்வோர் தவிர்த்து மற்ற அனைவரும் தவறவிட கூடாத படைப்பிது. நிறைய இடங்களில் மிகஎளிதாக நம்மை கனக்க செய்திடுவார்.

Sunday, March 29, 2020

 BROCHEVAREVARURA 2019 – TELUGU -

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் திரைக்கதை மற்றும் இயக்குனர் முதல் துணை பாத்திரங்கள் வரை ஏற்படும் சின்ன சின்ன தவறுகளை அந்த கதை காப்பாற்றி விடும். ஆனால் இது போன்ற மிக மெல்லிய கதைகளை திரைக்கதை மற்றும் இயக்குனர் முதல் துணை பாத்திரங்கள் வரை அனைவருமே தங்கள் பணியில் மிக கவனம் கொள்ளுதல் அவசியம். தமிழில் சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் இந்த இரு படைப்புகளும் இப்படியான கதைகள் ஒன்று நகைச்சுவையிலும் மற்றொன்று காதலிலும் எக்ஸ்ட்ரீம் தொட்ட படங்கள். தமிழில் இப்படியான படிப்புகள் வருவதில்லையேனு கேட்பவர்களுக்காக.

அப்படியான ஒரு சின்ன வரி கதையை.கொண்டு ரசிகர்களுக்கு பெரிய விருந்தே கொடுத்த படைப்பிது. உதவி இயக்குனர் தயாரிப்பாளருக்கு கதையை சொல்லி, அவரும் எல்லாம் ஒரே போல கதைகளாவே இருக்கு. ஆனா இப்படியான கதைகளைதான் எதிர்பார்த்தேன் உறுதியா பண்ணலாம்னு சொல்லிடறார். அவர் புது தயாரிப்பாளர் என்பதால் அனைத்து பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை இவரையே தொடர்பு கொண்டு புக் பண்ண சொல்லிடறார். கதை முழுக்கவே வரும் நாயகி பாத்திரத்திற்கு முன்னணி நடிகையை தொடர்புகொண்டு கதை சொல்ல தொடங்குறார்.

அவர் சொல்லும் கதையோடே அது காட்சிகளாக நமக்கும். ஒரு மூன்று நான்கு கட்டங்களாக நடிகையிடம் கதையை அவர் சொல்வதில் அந்த நடிகைக்கு இவரின் மேல் ஒரு சின்ன அபிப்பிராயம் ஏற்பட. அதன்பின் அவரின் ஓய்வு நேரங்களில் மட்டுமே நிகழ்ந்த அந்த சந்திப்பு அவரின் ஷூட்டிங் இடைவெளிகளில் கூட தொடர்கிறது. அப்படி ஒரு சந்திப்பில் இவரின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக  செய்தி வருகிறது. இவரின் பதட்டத்தை உணர்ந்து அந்த நாயகியே இவரை தனது காரில் அழைத்து செல்கிறாள். உடன் அவரின் தந்தைக்கு மருத்துவ உதவியாக ரூபாய் பத்து லட்சமும் எடுத்து செல்கிறார்கள். 

இவரை சகஜமாக்க விடுபட்ட கதையை தொடருமாறு அந்த நடிகை கேட்டுகொண்டே வருகிறார்.  (கதடைபட்ட அந்த கதையில் நாயகி கடத்தபட்டு நாயகனிடம் பத்து லட்சம் கேட்கும் இடத்தோடு நிற்கிறது) சட்டென அவர்கள் வந்த வாகனத்தின் கண்ணாடி உடைத்து கொண்டு பெரிய கல் வந்து விழ. நாயகி சுதாரிப்பதற்குள் கட்டுபாட்டை இழந்த வாகனம் அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி நிற்க. தூரத்தில் இவரின் கதையில் பார்த்த நாயகனும் அவரின் நண்பர்கள் இருவரும் முகமுடியுடன் காரை நோக்கி ஓடி வருகின்றனர்.
ஓ.. இந்த கதை ஏதேனும் காலபயணம் சார்ந்ததோ. அவரின் கதையில் வரும் பாத்திரங்கள் எவ்வாறு அவனது பொருளை அபகரிக்க முடியும்? அவர்களுக்கு எவ்வாறு இவர்கள் பணத்துடன் செல்வது தெரியும்? அதை துளியும் எங்கேயும் குழப்பி, நம்மை குழம்ப வைக்காமல் செம்ம நீட்டா ப்ரெசென்ட் பண்ணிருக்காங்க. அந்த இயக்குனர் நடிகையிடம் கதை சொல்லல் காட்சிகள் முழு படத்திலும் சில நிமிடங்கள் மட்டுமே வரும். அந்த ஹீரோயின் பாத்திரத்திற்கு தன்னிடம் கதை சொல்லவரும் இயக்குனரின் மேல் வரும் அந்த மெல்லிய அபிப்பிராயம் மட்டுமே இந்த முழு படத்திலும் உள்ள லவ் போர்ஷன்.


அவர் கூறும் கதைவழியே வரும் நாயகி. அவரை காப்பாற்ற பத்து லட்சம் தேவை அவர்கள் எவ்வாறு இந்த கதையுடன் இணைந்தார்கள் போன்ற சமாச்சாரங்கள் முழுக்க முழுக்க துளியும் செண்டிமெண்ட் கலக்காமல் ஒரு முழு நீள கலகலபான படம். அந்த கதை கேட்கும் தயாரிப்பாளர் ஆரம்பத்தில் சொல்வதுபோல வழக்கமான படங்களில் இருந்து இந்த கதை புதுவகை ட்ரீட்மென்ட் தெலுங்கு ஆடியன்ஸ்க்கு. எந்த மனநிலையில் இருந்தாலும் நம்மை முழு ஈடுபாட்டுடன் கதையுடன் ஒன்றவைக்கும் படைப்பிது.   

Friday, March 27, 2020


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 151.


விசாலமான ஒரே அறை. அறைக்கு இருவர். மொத்தம் 300+ அடுக்குகள் கொண்ட ஒரு கட்டிடம். ஆங்கில படமென்றதால் நாம் நினைக்கும் மற்ற எந்த சமாச்சாரங்களும் அங்கு இல்லை. அறைக்கு இரு படுக்கைகள். மற்றும் ரசம் போன பழைய கண்ணாடியும். ஒரே ஒரு சிங்க் மட்டுமே. நாம் அணிந்திருக்கும் ஒற்றை ஆடையை கூட அதிலே துவைத்து கொள்ள வேண்டும். மற்ற சிறைசாலையை போல பகல் பொழுதில் வெளியே சூரிய வெளிச்சத்தில் விளையாட்டு போன்ற பொழுதை கழிக்கும் சமாச்சாரங்கள் ஏதும் இருக்காது.

காவலர்கள், சக கைதிகளுடன் அரட்டை ஏதுமில்லை. நம் அறையில் நம்முடன் இருக்கும் அந்த ஒரே நபர் மட்டுமே. நாளுக்கு ஒருமுறை மட்டுமே உணவு. அதற்காக அறையின் நடுவில் ஒரு பெரிய செவ்வக இடைவெளி இருக்கும். உதாரணமாக நாம் 10மாடியில் இருப்பதாக வைத்து கொண்டால். நம் அறையில் உள்ள அந்த பெரிய செவ்வக இடைவெளியில் அனைவருக்குமான உணவு முதல் தளத்தில் இருந்து ஒவ்வொரு தளமாக அந்த இடைவெளி வழியே வரும். அந்தந்த தளங்களில் சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும். நமக்கான உணவை அந்த குறிப்பிட்ட நிமிடத்திற்குள் உண்ண வேண்டும்.
அந்த குறிப்பிட்ட நிமிடத்திற்கு பின் அந்த 600+ நபர்களுக்கான உணவு அடங்கிய பெரிய மேஜை தானாக நமக்கு கீழ் உள்ள அடுத்த தளத்திற்கு செல்லும். யாரும் உணவை எடுத்து வைத்து கொள்ள அனுமதி இல்லை. அந்த சில நிமிடங்களில் நாம் உண்ணும் உணவு மட்டுமே நமக்கான அன்றைய ஆகாரம். இதில் குறிப்பிட தகுந்த ஒரே விஷயம் அங்குள்ள அனைத்து நபர்களுக்கும் வேண்டிய உணவு இருக்கும். அதாவது ஒரு நபர் இன்று புதிதாக வருகிறார் எனில் அவரது விருப்ப உணவு குறித்து கொள்ளப்பட்டு. அவை எந்த நாட்டின் உணவு வகையோ அதற்கான தேர்ந்த நபர்களின் மூலம் மிக கவனமாக தயாரிக்கப்பட்டு அந்த பிரமாண்ட உணவு மேஜையில் அன்றிலிருந்து இணைக்கபடும்.

பெரும் சூவாரசியம் நாம் இருக்கும் தளத்தில் ஒரு மாதம் மட்டுமே இருக்க முடியும். அடுத்த நாள் நாம் கண்விழிக்கையில் அடுத்த ஒரு மாதம் நாம் இருக்க போகும் தளத்தில், நம்முடன் பழைய தளத்தில் இருந்த அதே நபரோடு கண்விழிப்போம். அந்த சூவாரிசியம் கடந்த மாதம் நாம் 10வது தளத்தில் இருந்திருந்தால் இம்முறை உதாரணத்திற்கு 200வது தளத்தில் இருப்போம். அடுத்த மாதம் 35வது, 54வது அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் 6வது தளம் கூட கிடைக்கலாம். அதென்ன குறைவான எண்ணிக்கை உள்ள தளங்களில் உள்ள அதிர்ஷ்டம் என்றால்.
     
துவக்கத்தில் அந்த தினம் ஒரு முறை மட்டுமே வரும் உணவு மேஜை பற்றி குறிப்பிட்டேன் அல்லவா. அது 0,1,2,3 என மேலிருந்து துவங்கி இறுதியாகவே அந்த 300+ தளத்தை வந்தடையும். நாம் 200வது தளத்தில் இருக்கிறோமெனில் நமக்கு முன்பாக அந்த உணவு மேஜையில் கிட்டத்தட்ட 400 நபர்கள் உணவருந்தி இருப்பார்கள். அதனால் என்ன நமக்கான உணவும். அதும் விருப்ப உணவையே அவர்கள் அனுப்பி இருப்பார்களே. ஆம் கண்டிப்பாக நமக்கான உணவும் அதில் இருக்கும். ஆனால் உணவை எடுத்துவைத்து கொள்ளகூடாது, உணவருந்தவும் சில நிமிடங்கள் மட்டுமே அந்த மேஜை ஒவ்வொரு தளத்திலும் இருக்கும். மற்றும் அனைவரின் மொத்த உணவும் அந்த ஒரே மேஜையில் இருப்பதால்.

முதல் தளத்தில் இருந்தே அவரவர் தன்பக்கம் இருந்தது. தன் பார்வையில் ருசிக்க விரும்பியது என வரைமுறை இல்லாமல் உண்ண துவங்கினால் கிட்டத்தட்ட 10-15 தளங்களுக்கு முன்னமே அந்த முழு மேஜையும் அலங்கோலமாகும். அதற்கடுத்த தளங்களில் மேலும் சிதையுண்டு ஒரு 50-55வது தளங்களை எட்டும்போது எவ்வளவு தேடினாலும் மருந்துக்கும் அதில் உணவிருக்க வாய்பிருக்காது. எனில் அதன் கீழ் உள்ள தளங்களில் உள்ளோர் அந்த ஒரு மாத உணவிற்கு என்ன செய்வார்கள்? இதுதான் இந்த படத்தின் கதையா என்றால் அதுமட்டுமல்ல. அந்த சிறைச்சாலையை நாம் வசிக்கும் இந்த உலகமாக கணக்கிட்டு கொண்டால் இந்த படம் இன்னும் ஆழமாக பல விசயங்களை பேசுவதை நம்மால் உணரமுடியும்.

ஒரு திரைப்படத்திற்கு களம் எந்தளவு முக்கியம் என்பதற்கு இந்த படம் மிகச் சிறந்த எடுத்துகாட்டு. அவ்வாறு யூகித்து இப்படம் பேசும் அரசியல் தேவையில்லை என்போரும் மேம்போக்காக பார்க்கவும் சலிப்பில்லாத சமாச்சாரங்கள் உள்ள படமிது.

Wednesday, March 25, 2020



WEB SERIES -004

Undercover agent

 காவல்துறையின் உடல் மற்றும் மனதளவில் நன்கு தேறியவர்களில் கூடுதல் பயிற்சி மற்றும் அவர்களின் பூரண சம்மதத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் பணி காரணம் அவர்கள் எதிரணியில் அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கான இழப்பிடோ, விருதுகளோ அரசு சார்பில் அவர்களுக்கு கிடைக்காது. காரணம் அவர்கள் அரசாங்கத்தில் பணிபுரிவதற்கான எந்த தஸ்தாவேஜுகள் ஏதும் இங்கு இருக்காது.  சம்பளம் கூட அரசாங்கத்தின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இவர்களை அனுப்பிய மேலதிகார்கள் மூலம் இவர்களின் குடும்பத்திற்கு பணம் அனுப்பப்படும்.  

இந்த கதையின் தலைப்பை வைத்து அப்படி அனுப்பப்படும் ஒரு பெண்ணை பற்றிய கதையிது என நினைத்தால் கிட்டத்தட்ட பாதி சரி. ஏனெனில் வயதான அம்மா மற்றும் திருமண வயதில் ஒரு தங்கையுடன் மாத செலவுக்கே பெரும் கஷ்டத்தில் காவல்துறையில் காண்ஸ்டபிள் பணியில் உள்ளவள். வீட்டின் அனைத்து வேலைகளையும் முடித்து தினமும் பணிக்கு தாமதமாக வந்து சக ஆண் காண்ஸ்டபிள்களின் கேலி கிண்டலை தினமும் கடந்து செல்பவள்.
சரி இப்படியான ஒரு பெண் தன்னை முழுமையாக தயார்படுத்தி கொண்டு வெறிகொண்ட வேங்கயாகி எதிரிகளை துவம்சம் செய்பவளாக நீங்கள் அவளை யுகித்தாலும் உங்கள் கணிப்பு தவறே. ஏனெனில் அவள் இந்த நிலையிலேயே undercoverராக முதல் எபிசோடின் துவக்க காட்சியிலேயே எதிரிகளை பற்றி அறிய அனுப்பபடிகிறாள். அதும் ஆசியாவின் பெரிய போதை வஸ்து கடத்தல் குழுவிற்குள். அங்கு வெளியாட்கள் எந்த வகையிலும் உள்ளே நுழைய வழியில்லா காரணத்தால் prostituடாக அனுப்பபடுகிறாள்.

அதெப்படி அவளுடைய சம்மதம் இல்லாமல் நடக்கும்? அவளின் குடும்பத்திற்கு உள்ள ஒரே பிடிமானமான இவளின் பணியை மறைமுகமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மனதளவில் இந்த பணியை ஒப்புகொள்ள தயார்படுத்தபடுகிறாள். அதும் முதல் எபிசோடின் முதல் காட்சியே ஒரு விடுதியில் துவங்குகிறது. அந்த drug குழுவின் முக்கிய புள்ளி வந்துசெல்லும் இடம். அவனை தனித்து வளைத்து பிடிக்க மட்டுமே எந்த அனுபவமும் இல்லாத இப்பெண்ணை தேர்ந்தெடுக்கபடுகிறாள். அந்த விடுதியில் இருந்து non linear ல அவங்க குடும்பம் வேலைன்னு போற முதல் எபிசொட் செம்ம த்ரில்லிங். அதும் அவன தனியா மடக்கி பிடிக்க எல்லா வகையிலும் காவல்துறை தயாராக இருக்க. அவன் ரொம்ப சாதாரணமா இந்த பெண்ணோட வெளியே போய்டுவான். அவன ஏதோ தற்செயலா பிடிபட. வேறு வழி இல்லாததால் இந்த பெண்ணை கொண்டே அவனின் தலைவன் உட்பட முழு குழுவையும்  பிடிக்க உயரதிகாரிகள் முடிவெடுக்கும் சூழல்.
இந்த தற்செயல் சம்பவத்தை வெச்சே அதே பாணியில் இதைவிட மிக விறுவிறுப்பாக இந்த முழு சீரீஸ் ரொம்ப சுலபமாக கொண்டு சென்றிருக்கலாம். அனால் அவள் prostitute டாக அவர்களிடம் நடிக்க மனதளவில் தயாராகும் விதங்களை. அவளின் திருமணம் விவாகரத்தில் நிற்கும் காரணங்களை அலசும் விதங்களை. தான் இந்த பணிக்கு முழுக்க தேர்ந்தவளா என அவள் சுயபரிசோதனை செய்துகொள்ளும் காட்சிகள் என இந்த பெண்ணின் முழுஉணர்வுகளையும் உள்ளதை அவ்வாறே நமக்கு கொடுத்திருக்கும் சீரீஸ்.  மொத்தம் மூணு சீசனில் முதல் சீசன் மட்டும் NETFLIX ல் வெளிவந்துள்ளது. பெரிதாக யாராலும் பேசபடாத இந்த சீரீஸ் கதை மற்றும் திரைக்கதை IMTIYAZ ALI.  முதல் சீசன் உங்களை எந்த வகையில் ஈர்த்தாலும். அது கண்டிப்பா அடுத்தடுத்த சீசனுக்கு உங்களை  இன்னும் அதிகமாக  எதிர்பார்க்க வைக்கும்.

Tuesday, March 17, 2020


WEB SERIES -002- II



ஜோம்பி வைரஸால ஒரு பெரிய நிலபரப்பை ஆளும் ராஜா பாதிப்படையறாரு. அவங்க இரண்டாம் மனைவி அவங்களோட அப்பா. இவங்க தவிர்த்து அவங்க குடும்பத்துல யாருக்கும் தெரியாம அவருக்கு மருத்துவம் பாக்கறாங்க. அப்பாவுக்கு பின்னால இருக்கும் மர்மத்தை கண்டுபிடிச்சி அவரோட மகன் தங்கள் ஆஸ்தான மருத்துவரை தேடி போறாரு. அங்கேயே அவரோட கதையை முடிச்சி தனக்கு பிறக்க போகும் குழந்தையை அரசனாக்க ராஜாவோட இரண்டாம் மனைவியும். அவரோட அப்பாவும் திட்டமிட்றாங்க.

இதுல மருத்துவரை தேடி போகும் இளவரசன். ராஜாவோட இரண்டாம் மனைவி கற்பத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம். மருத்துவரின் கிராமமே ஜோம்பி வைரஸால பாதிப்பில் இருக்க. இளவரசன் உடன் செல்லும் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவரின் மர்ம பின்னனினு முதல் சீசன் ரொம்ப பிரமாதமா கொண்டு போயிருந்தாங்க. அதும் இரவுல மட்டுமே ஜோம்பி வைரஸால் பாதிப்படஞ்சவங்க அட்டகாசம் பண்ணிட்டு இருந்து. அதுங்க பகல்லயே அந்த மலைகிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கி வரும் பரபரப்பான கட்டதோட போன சீசன முடிச்சிருந்தாங்க.

ஒரு எதிர்பார்ப்போட துவங்கி பெரிய அதிர்ச்சிகளும். நிறைய ஆச்சர்யங்கள். கொஞ்சம் அதிகமான பரபரப்பு. சுவாரசிய கிளைகதைகள் என முடிஞ்ச முதல் சீசனோட அடுத்த பாகம். கண்டிப்பா இதவிட பெருசா இல்லனாகூட இதுக்கு இணையா இருந்தாவே பெரிய ஹிட்ங்கற மணகணக்கோட பாக்க ஆரமிச்சா.முதல் சீசன்ல எதெல்லாம் திருப்பங்களா கொண்டுவந்து முடிச்சி இருந்தாங்களோ. அத்தனையையும் சரியான திரைக்கதை+காட்சிகள் மூலமா மிரட்டி இருக்காங்க.

போன சீசன்ல சொன்னது மாறியே இந்த சீரிசோட முழு ஸ்கிரிப்ட் படிச்சிட்டு பாத்தாலும் முக்கிய திருப்பங்கள் தவிர்த்து பெரும்பாலான இடங்கள்ல நம்மை கண்டிப்பா மிரள வெச்சிடும். ஜோம்பிகளோட ஒப்பனை, CG வொர்க். அதுங்க நூத்து கணக்குல வரும் காட்சிகளில் கூட இங்க அங்கனு அதுங்க சிதறி ஓடும் சிறு சிறு குழுக்கள். காட்சிகள்ல ரொம்ப பின்னால இருக்கும் ஜோம்பிங்களுக்குகூட அவ்ளோ உழைச்சிருக்காங்க. அதுங்க யாரை தாக்குது. அவங்க கதையில் எந்தளவு முக்கிய பாத்திரம்னு நம்மள அதிகமா பதட்டம் அடையவெச்சதிலே வெற்றி அடஞ்சிடறாங்க.

அந்த மருத்துவர் குழுவில் இருக்கும் ஒரு உதவிமருத்துவர். இளவரசனோட தளபதி பாத்திரங்கள் அதிக இடங்கள்ல நம்மள நெகிழ வெச்சிடறாங்க. அதும் இளவரசன் நாட்டுக்கு திரும்பி வரும்போது எல்லா அதிகாரமும் மன்னனோட இரண்டாம் மனைவியோட தந்தையிடம் போய்டுது. ஒருபக்கம் உள்ளவே போகமுடியாத சூழல். மறுபக்கம் தங்கள் நகரத்தை நோக்கி வரும் ஜோம்பிங்கனு இளவரசனுக்கு முதல் எபிசொட்ல வரும் இக்கட்டான சூழல் இந்த ஆறு சீசன்லயும் கடைசி காட்சிவரைகுமே இருக்கும். அத எப்படி சமாளிச்சி அடுத்தடுத்த கட்டத்துக்கு போறார். இதுக்கான திரைக்கதையும். துணை பாத்திரங்களோட கிளைகதைகளும் அவ்ளோ அருமையா இளவரசன் கூடவே பயணிச்சி இருக்கு.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உண்டான மருந்து. அதை எப்படி பயன்படுத்தி இவங்கள குனபடுத்த முடியும் இப்படியான விசயங்களை மூணாவது சீசன்ல சொல்லிட்டு கூட இந்த சீசன பெரிய ஆக்ஷன் சீசனா கொடுத்து இருக்கலாம். ஆனா நம்ம முதல் சீசன் பாத்து என்னென்ன கேள்விகள் இருந்ததோ அது எல்லாத்துக்கும் இதுல பதில் சொல்லிருக்காங்க. முதல் சீசன் பாத்தா எல்லோருக்கும் இருக்கும் ஒரே கேள்வி இந்த சீரிஸ் இந்த சீசனோட முடியுதானுதான் இருக்கும். அது இந்த ஆறு எபிசோடும் பாத்து தெரிஞ்சிகோங்க.

Sunday, March 1, 2020


ஒரு படம் அது வெளியாகும் முன்னமே இந்த படம் இப்படிதான் இருக்கும்னு நமக்குள்ள ஒரு கணக்கு இருக்கும்ல. அது அந்த படத்தோட மோஷன் போஸ்டர். டீசர்னு இப்படி ஏதாவது ஒன்ன பாத்து அப்படி நெனச்சி இருப்போம். ஆனா இந்த படத்தபத்தி நம்ம யாருக்குமே எந்த அபிப்பிராயமும் இருந்திருக்காது. காரணம் இப்படி ஒரு படம் வரபோறதே நம்மில் பல பேருக்கு தெரிஞ்சி இருக்க வாய்ப்பில்லை. ஆனா இந்த படம் கண்டிப்பா நான் தியேட்டர்ல பாக்க நெனச்ச ஒரே காரணம். இது துல்கரோட 25வது படம் அப்படிங்கற ஒரே காரணம்தான். புதுசா வர எந்த நடிகனுக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமா, கவனமா எல்லாமும் பாத்து பாத்து பண்ண வேண்டியது இந்த முதல் 25வது படத்துலதான். அதும் ஒவ்வொரு படத்தையும் ரொம்ப கவனமா பண்ற துல்கர் இந்த ஸ்கிரிப்ட்ட சாதாரணமா தேர்ந்தெடுத்து இருக்கமாட்டார் அப்படிங்கற நம்பிக்கைதான். அதும் புது டைரக்டர் வேற. ஆனா 100% ஜெயிச்சும் இருக்கார்.

உதாரணமா காக்க காக்க வரும்போது நமக்கு அந்த படத்தபத்தி என்ன அபிப்பிராயம் இருந்திருக்கும். மின்னலே பண்ணவர் அடுத்து ஒரு போலீஸ் ஸ்டோரி பண்றார். சூர்யா வேற செம்மையா இருக்கான். கண்டிப்பா பக்கா ஆக்ஷன் பேஸ் கதையாதான் இருக்கும்னு நெனச்சி இருப்போம்ல. ஆனா அதுல லவ் நமக்கு எவ்ளோ சர்ப்ரைசா இருந்தது. அப்படி டீசர் முதற்கொண்டு எதுமே பாக்காத இந்த படத்தோட போஸ்டர்ஸ் பாத்தா வெறும் லவ் சப்ஜெக்ட் அப்படிங்கற நெனப்போட போனிங்கனா அங்க உங்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் இருக்கு.
நம்ம சினிமா பாணில சொல்லனும்னா ரெண்டு IT Youngsters எப்படி இருப்பாங்க. அப்படி ஜாலியா செலவு பண்ணிட்டு சுத்திட்டு இருக்குற பசங்க. அதுல நாயகனுக்கு ரொம்ப எளிமையா நேர்மையா இருக்கும் நாயகிய ரொம்ப பிடிச்சி போய்டுது. அவங்களும் ஒருமாறி இவர ஏத்துகறாங்க. அப்பறம்தான் இந்த ரெண்டு பசங்களுமே ப்ராட்னு நமக்கே தெரியவருது. அப்பறம் என்ன இந்த விஷயம் அவளுக்கு தெரிஞ்சி. இவனவிட்டு போய். அப்பறம் அவன் திருந்தி நேர்மையா உழைச்சி முன்னுக்கு வந்து. கடைசியா ரெண்டு பெரும் ஒன்னு சேருவாங்கனு நம்ம நெனச்ச எதுமே இல்லாம போனது மட்டும்தான் இந்த படத்தோட வெற்றிக்கு பெரிய காரணமே.

அதும் நாயகியோட தோழியும் நாயகனோட தோஸ்த் லவ் போர்ஷன்லாம் கௌண்டர் ஹீரோக்கு தோஸ்தா நடிச்சிட்டு இருந்த காலத்துல இருந்திருக்கும் அதும் ஜோதி மீனா மாறி ஒன்னுதான் அவருக்கு ஜோடியா வரும். இந்த GENERATION நடிகர்கள்ல இப்படி ரெண்டு ஸ்மார்ட் பசங்களும் ரெண்டு க்குயூட் பொண்ணுங்களும் படம்பூரா இந்த நாளு பேரையும் பாக்கவே அவ்ளோ நல்லா இருந்தது. அதும் துல்கருக்கு தோஸ்த்தா நம்ம விஜய் டிவி ரக்ஷன் படம்பூரா வரமாறி பாத்திரம் வேற. படம்பூரா எங்கயுமே அவன் நமக்கு போர் அடிக்கவே இல்லை. ஆரம்ப கொஞ்ச நிமிஷங்கள் தாண்டிட்டா. படம் முடியும் வரைக்கும் எங்கயுமே திரைக்கதை எந்த பிடிப்பும் இல்லாம நொண்டி அடிக்கவே இல்லை.
கதைல நெறைய இடங்கள்ல ட்விஸ்ட் அது நமக்கு இன்னும் கூடுதல் சூவாரசியத்த கொடுக்க தவறவே இல்லை. அதும் எப்பவோ திரைல வந்திருக்க வேண்டிய கெளதம் மேனனுக்கு இப்பதான் ஒரு முழுநீள பாத்திரம். நல்ல வேலை அவர் படங்கள் போல மொக்க வாங்காம நல்லதா அமைஞ்சிடுச்சி. என்ன அதே கைல காப்போடவே இதே போலீஸ் வேடமே எல்லா படமும் பண்ணாம இருந்தா சரி.


இதே சென்னைலதான் பாதிபடம் போனாகூட எங்கயுமே LOCATION நம்ம ஏற்கனவே பாத்தமாறி இல்லாத இடங்களா பண்ணது. ஆன்லைன் ஷோப்பிங்ல இருக்கும் மொள்ளமாரிதனம் முதற்கொண்டு. ஹீரோ பண்ற எல்லா தில்லு முள்ளும் நமக்கு கோவமோ, சிரிப்போ வர வெக்காம கடைசிவரைக்கும் சூவாரசியத்ததான் கொடுத்திருக்கு. கண்டிப்பா ரொம்ப நாளைக்கு அப்பறம் வெறும் ஜாலியா மட்டுமில்லாம நெறைய SURPRISES இருக்கும்படியா ஒரு படம்.

Search This Blog