Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, December 1, 2020

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது – 174.

IL MARE 2000-ல் வந்த கொரியன் சினிமா. ஒரு பெண் கடற்கரையோர வில்லா ஒன்றில் குடியேறுவாள்.  அந்த வீட்டின் மெயில் பாக்ஸ்ல் ஒரு பழைய கடிதம் ஒன்றை கண்டெடுப்பாள். அதில் சில முக்கிய ஆவணங்கள் இருப்பதை பார்த்து, உரியவரின்  முகவரிக்கு அனுப்புவாள். நாம் எதிர்பார்த்தது போலவே நன்றி கடிதம் ஒன்று வரும். கிட்டத்தட்ட முழுபடத்தின் கதையும் கூட இதுவே. ஆனால் அதில் விசேஷம் அந்த பெண் இன்றைய காலத்திலும், அவருக்கு கடிதம் எழுதும் நபர் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலும் இருப்பதும்.

கதைக்கு பரபரப்பு ஏற்படுத்த இந்த இரண்டு காலங்களுக்கு இடையே பயணம், அதற்கான முயற்சி இப்படியான எந்த ஆரவாரமும் இல்லாமல், வெறும் இருவருக்குமான கடித தொடர்பிலே நம்மையும் அடுத்த கடிதம் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்புடன் பயணபடவைக்கும். டைரி எழுதும் வழக்கம் உள்ள அந்த பெண், இரண்டு வருடங்களுக்கு முன் இதே தேதியில், குறிப்பிட்ட ரயில் நிறுத்தத்தில் தனது வாக்மேனை தவறவிட்டதாக ஒரு கடிதத்தில் குறிப்பிடுவாள்.

அதற்கு பதில் கடிதம் வருகையில், அதனுடன் அந்த வாக்மேனையும் சேர்த்து அனுப்பிவைப்பான். அப்படியெனில் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வசிக்கும் இவன், அந்த குறிப்பிட்ட தேதியில் ரயில் நிலையத்திற்கு சென்றிருக்க வேண்டும். இவன் அவளை சந்தித்து பேசினானா. அவ்வாறு பேசியிருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னான காலத்தில் உள்ள இவளுக்கு அவனின் ஞாபகங்கள் நிச்சயம் இருந்திருக்குமே. இப்படியான கேள்விகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு தானாகவே தோன்ற ஆரமிக்கும்.

இப்படியான ஒரு காட்சிக்கே இத்தனை கேள்விகளும், ஆர்வமும் நமக்கு வருகிறதென்றால், ஒரு படம் முழுக்க இப்படியான கேள்விகளுடன், பரபரப்பும் நம்மை தொற்றிக்கொள்ள செய்தால், அவ்வாறான படமே இந்த THE CALL.

இதிலும் இயற்கை சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டில் குடியேறும் ஒரு பெண். அங்குவரும் தொலைபேசி அழைப்பில் பேசும் மற்றுமொரு பெண். அவள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பிந்தைய காலகட்டத்தில் அதே வீட்டில் வசித்து வருபவள். இந்த இரண்டு பெண்களின் தந்தைகளும் தொழில் முறையில் பழக்கம் உள்ளவர்கள். இதே 20 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் ஒரு முறை இவள் சிறுமியாக தன் பெற்றோருடன் இந்த வீட்டிற்கு வருகிறாள். அதே சமயம் தொலைபேசியில் இவர்கள் இருவரும் பேசிகொண்டிருக்க. தொலைபேசியில் தனது தந்தையின் குரலை கேட்டு அழுகிறாள்.

இவள் காரணம் கேட்க, உங்கள் வீட்டிற்கு வந்த சில தினங்களில்தான், வீட்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் தனது தந்தையை இழந்ததாக இவள் கூறுகிறாள். அவர் இறந்த அந்த குறிப்பிட்ட தினத்தில் தான் அவரை காப்பாற்றுவதாக இவள் சமாதானம் கூற. நமக்கும் சேர்த்து பரபரப்பு தொற்றிகொள்கிறது. இவள் தந்தையை அவள் காப்பாற்றினால் இந்த 20 வருடங்களில் இவளிடம் என்னென்ன மாற்றங்கள் நிகழும். முன்பே பல சிக்கல்களில் உள்ள அந்த பெண்ணால் அந்த வீட்டை விட்டு வெளியேறி இந்த பெண்ணின் தந்தையை காப்பாற்ற  முடியுமா?

அவ்வாறு இவள் காப்பாற்றினாலும், பதிலுக்கு இவளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை இவளிடம் தானே எதிர்பார்ப்பாள். இந்த காட்சியில் இருந்து இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகள் நமக்கு படத்தின் இறுதிவரை எழுந்தபடியே இருக்கும். அந்தந்த காட்சிகளிலே அதற்கு விடையும், அடுத்த காட்சிக்கான கேள்விகளுடனே படத்தின் இறுதி ஷாட்வரை செல்லும். NETFLIX ல் காணகிடைக்கிறது.            


Sunday, November 22, 2020

 


WEB SERIES – 009.

HIGH (2020) – TAMIL DUB - SEASON 01 – EPISODES 09 – விறுவிறுப்பு

ராஜேஷ்குமார் நாவல்களில் முதல் அத்தியாயம் ஒரு கதையும், அதற்கு துளியும் சம்பந்தம் இல்லாத மற்றுமொரு கதை என அடுத்தடுத்த அத்தியாயங்கள் வரும். இறுதி அல்லது அதற்கு முந்தைய அத்தியாயங்களில் இந்த இருவேறு கதைகளும் சேரும். இந்த வகை திரைக்கதைகள் கொண்ட படங்களோ, நெடுந்தொடரோ கூடுதல் சூவாரசியங்கள் கொண்டவை. காரணம், இந்த இருவேறு கதைகளும் எந்த வகையில் சேரும் என்பதை அந்தந்த பாத்திரங்களை கொண்டு கதையின் துவக்கத்தில் இருந்தே கணிக்க துவங்கிவிடுவோம். அதுவே அந்த கதையின் மீது நமக்கு கூடுதல் ஈடுபாடு ஏற்பட முக்கிய காரணமாகிறது.


இந்த கதையும் அந்த வகையான திரைக்கதையை கொண்டதே. ஒவ்வொரு அத்தியாத்தின் துவக்கத்திலும் 1970களில் காடுகளில் எதையோ தேடி அலையும் மருத்துவ நண்பர்களின் கதையும்,  அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத இன்றைய மும்பையின் போதை மாஃபியா பற்றிய கதையும் வருகிறது. முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் அந்த பழைய கதையும், அதற்கு பின்னே டைட்டில் கார்ட் மற்றும் இன்றைய கதையும். முதல் இரண்டு அத்தியாயங்களிலே இந்த இருவேறு கதைகளும் சம்பந்தபடும் முடிச்சு புலனாகிவிடுகிறது.


ஆனால், அந்த மைய முடிச்சின் மர்மத்தின் பின்னே உள்ள கிளைகதைகள் அனைத்தும் வெகு சுவாரசியம் நிறைந்ததால். அந்த பாத்திரங்களுடனே எந்த தொய்வும் இல்லாமல் நம்மால் பயணப்படமுடிகிறது.   அதிலும் ஷிவ்மதூராக வரும் அந்த முதன்மை பாத்திரம், முழுக்க போதைக்கு  அடிமை + அதிலிருந்து மீண்டுவந்த பின்னான அவரின் தோற்றம், மீண்டுவந்ததற்கான காரணம், அவை 1970களில் வந்த முன்கதையுடனான தொடர்பு என இந்த ஒரு பாத்திரத்தை சுற்றி மட்டுமே அடுக்கடுக்கான பல ஆச்சர்யங்கள் பின்னப்பட்டுள்ளது.

அதிலும் இந்த முதல் சீசனில் இவரின் முன்கதையும், காதல் அத்தியாயங்களும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக சொல்லப்பட்டதால், அடுத்த சீசனின் மீது இப்பொழுதே ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுவது மட்டுமின்றி. அதில் அறிமுகமாகும் மற்ற பாத்திரங்களை பற்றிய அறிமுகம் எப்படி என்பதும். காரணம் இந்த முதல் சீசனில் அறிமுகபடுத்திய அனைத்து கதாபாத்திரங்களின் அறிமுகமும் அமர்க்களம்.

எந்தவித அலட்டலும் இல்லாமல் மூலகதையை BREAKING BAD ல் இருந்து எடுத்தாலும்,  அதற்கு பெரும் சிரத்தையுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளார்கள். MX PLAYER ல் காணகிடைக்கிறது.


Tuesday, October 27, 2020

 


WEB SERIES -001

MIRZAPUR (2020) – SEASON – 02- 10 EPISODES.

  எப்ப  அடுத்த சீசன் வரும்னு முதல் சீசன் பார்த்த மொத்த பேரையும் எதிர்பார்க்க வெச்ச சீரீஸ். அதுக்கு மிக முக்கிய காரணம் Kaleen Bhaiya மற்றும் அவர் மகனாக வரும் Munna இந்த ரெண்டு வில்லன் பாத்திரங்கள். முதல் சீசனோட ஒன்பது எபிசோட்ஷும் பெரும்பான்மை காட்சிகள்ல இவங்க ராஜ்ஜியம்தான்.  பாத்திரங்களோட குணாதிசயங்களை ஒவ்வொரு சின்ன சின்ன காட்சிகளிலும் இவங்க ரெண்டு பாத்திரங்கள்லதான் அதிகமா சொல்லிட்டே வந்திருப்பாங்க.

நாயகன் பாத்திரம் பண்ண Guddu, Bubbluவும் இவங்ககிட்ட வேலை பாக்கறவங்களாதான் வருவாங்க.  இந்த தொழிலிலுள்ள நெளிவு சுளிவுகளை ரொம்ப சீக்கரம் இவங்க கைக்குள்ள கொண்டுவந்துடுவாங்க. அவங்க வியாபாரம் எங்கெல்லாம் தடைபடுது, அதை எப்படி சரி பண்ணனும் எல்லாமே சரிபண்ணி. அவங்க வியாபாரத்தை ரொம்ப பெருசா பண்ணிடுவாங்க.

மொத்த DON படங்களோட கதைகளை போலவே. அப்பா, அவங்க (Guddu, Bubblu)ளுக்கு கொடுக்கும் முக்கியதுவம் நமக்கு கொடுக்கலைனு நினைக்க ஆரமிக்கும் இடம், இந்த கதை உச்சபட்ச வேகம் எடுக்க ஆரமிக்கும். தன்னோட அப்பாவையே கொல்ல முடிவெடுத்து, அதுக்கான வேலைகளையும் ஆரமிக்க. இங்க அப்பாவோ இந்த நாயக பாத்திரங்களை கொண்டு ரொம்ப அழகா தன்னோட வியாபார எல்லையை விரிவுபடுத்திட்டு இருப்பாரு.

இந்த சூழல்ல ஆளும்கட்சி அமைச்சரோட ஒரு பொண்ணு விஷயத்துல தன்மகனால பகை ஒருபுறமும். தன்னை மீறி தன்னிடம் வேலைபார்க்கும் Guddu, Bubbluவின் வளர்ச்சியும். தன்மேல் நடத்தப்பட்ட கொலைமுயற்சிக்கு காரணகர்த்தா யார் என்ற குழப்பமும். தன் மகனே சமீபமாக தன்னை விட்டு விலகி நிற்பதால் ஏற்பட்ட மனசோர்வு என இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், அந்த மாவட்டத்தின் (Mirzapur) ராஜா என்ற கம்பீரத்தையும், நிதானத்தையும் எந்த காட்சியிலும் விட்டுகொடுக்காமல் வளம்வருவார். இவரை மீறி இந்த இடத்துல ஒருத்தனும் ஒன்னும் பண்ணமுடியாதுனு நம்ம எல்லோரையுமே நினைக்கவெச்சிடுவார் Kaleen Bhaiya.

எந்த சின்ன விஷயமாக இருந்தாலும் ரொம்ப யோசிச்சு சரியான வழிமுறைகளோட அதை செயல்படுத்த ஒருவனும், தங்கள் தொழிலுக்கு இடையூரா இருப்பவர் எத்தனை பெரிய நபரா இருந்தாலும், அந்த நபரை சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் கொஞ்சமும் தயங்காமல் தாக்குதலில் இறங்க ஒருத்தனும் என Guddu, Bubblu ரெண்டு பேரோட பாத்திர வடிவமைப்பு அத்தனை சுவாரசியமா  இருக்கும். இந்த நான்கு முக்கிய பாத்திரம் இல்லாமல் துணை பாத்திரங்களா வரும் அத்தனை நபர்களுமே அவங்க பங்குக்கு இந்த கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய்கிட்டே இருப்பாங்க.

ஒருகட்டத்தில் தன் அப்பாவுடைய அனுமதியோடே Munna ஒரு திருமணநிகழ்வில் Bablu மற்றும் Gudduவுடைய காதலினு இவங்க நெருங்கிய வட்டத்தை சேர்ந்த மொத்த நபர்களையும் ரொம்ப கொடூரமா கொலை பண்றதோட முதல் சீசன் நிறைவடையும்.  இப்ப எதைபத்தியும் யோசிக்காமல் உடனே களத்தில் இறங்க துடிக்கும் Guddu மட்டும் ஒருபுறமும்.  Opiyum, Gun தொழிலில் அந்த மாநிலத்தின் பெரும் சாம்ராஜ்யமாக பரந்து விரிந்து நிற்கும் Kaleen Bhaiya மற்றும் அவரது மகன் Munna மறுபுறமும் என அடுத்த சீசன் தொடங்குகிறது.

இரண்டாவது சீசன் துவக்கத்திலே Guddu, அவங்களை கொல்றது முக்கியமே இல்லை. அவங்களோட சாம்ராஜ்யத்தை கைப்பற்றி இந்த மிர்சாபூருக்கே நான் ராஜா ஆகணும்னு சொல்லுவாரு. அதனால் இந்த சீசன் கொஞ்சம் மெதுவாக நகர்வதை போல தோனலாம். ஆனால் அடுத்தடுத்த சீசனை இதே விறுவிறுப்போடு கொண்டு போவதற்கான அனைத்து சூவாரசிய சங்கதிகளும் இந்த சீசனில் இருக்கு. போன சீசனில் அங்கங்கே வந்து போன குட்டி பாத்திரங்கள் எல்லாமே இதில் பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கறாங்க.

முழுக்க இது வெறும் பழிவாங்கல் கதையை போல இருந்தாலும், இந்த கதையுடைய களம் மற்றும் திரைக்கதை பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கும். முதல் சீசன் தமிழிலேயே இருக்கு. இந்த சீசன் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது amazon Primeல்.    


Thursday, October 22, 2020



பார்த்ததில் மிகவும் ரசித்தது – 173.

புத்தம் புது காலை (2020) – தமிழ் –  ANTHOLOGY

 1. இளமை இதோ இதோ – சுதா கொங்கரா – இளமை

மனைவியை இழந்து, மகளும் (காதல்) திருமணமாகி சென்றுவிட தனிமையில் வசிக்கிறார் ஜெயராம். அவரது கல்லூரி கால தோழி ஊர்வசியும் கணவனை இழந்தவர்.  இவர் ஜெயராம் வீட்டிற்கு வரும் காட்சியில் இருந்து இந்த கதை  துவங்குகிறது. பின் இந்த கதைக்கு இளமை இதோ இதோனு தலைப்பு எப்படி பொருந்தும். இவங்க இருவரையும் வெச்சி நல்ல ஹுமர் கதையைதானே பண்ணமுடியும்? இந்த கேள்விக்கு சுதா கொங்கரா தனது மேஜிக் இயக்கத்தில் பதிலளித்திருக்கிறார். ஒரே வீடு முழு கதையிலும் இந்த இரண்டே பாத்திரங்கள் மட்டும்.  

 

2.அவனும் நானும் அவளும் நானும் – கெளதம் மேனன் – முதிர்ச்சி

அவனை முதன் முறையா அந்த காலேஜ் கல்ச்சுரல்லதான் பாத்தேன். இப்படி ஆரமிக்கும் மீண்டும் ஒரு காதல் கதையை கெளதமிடம் எதிர்பார்த்து  பார்க்க ஆரமித்தால் நமக்கு ரொம்ப பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கார். ஆம், இது ஒரு தாத்தா, பேத்திக்கு இடையேயான அருமையான கதை. தனது மகள் காதல் திருமணம் புரிந்ததால், அவருடனான தொடர்பை முற்றிலும் தவிர்த்து தனிமையில் வசிக்கும் தாத்தாவாக MS பாஸ்கரும், lockdownல வெளியே எங்கும் தங்கவழி இல்லாமல், பெற்றோர் வற்புறுத்தலால் பல வருடங்களுக்கு பின் தனது தாத்தா வீட்டிற்கு செல்லும் பேத்தியாக ரித்துவர்மாவும். இந்த கதையும் இங்கிருந்தே துவங்க, இத்தனை வருடம் தனது தாயை அவர் ஒதுக்கியதற்கான காரணமும், தன் மனதில் தாத்தா பற்றி இருந்த பிம்பமும் இறுதியில் ஒரு தெளிவிற்கு வருவதுடன் கதை நிறைவடைகிறது. MS பாஸ்கர்க்கு ஒரே ஷாட்ல் அவர் பக்கத்து நியாயத்தை சொல்லும் காட்சி வழக்கம்போல. அட்டகாசபடுத்தி இருக்கார் வழக்கம்போலவே. நிறைய பார்வையாளர்களோட விருப்பபடம் இந்த முதல் ரெண்டு படங்களுக்குள்ளேதான் இருக்கும்.

 



3.COFFEE ANYONE? – SUHASHINI MANIRATNAM – அரைச்சமாவு

கெளதம்மேனன்கிட்ட இருந்து இப்படி ஒரு ஆச்சர்யம்னா. சுஹாசினி மணிரத்னம் இன்னும் என்னலாம் பண்ணிருப்பாங்கனு உடனே வழக்கம்போல நம்ம தமிழ் ரசிகமனசோடு பாத்தா. நிறைய படங்கள்ல டம்மியா ஒரு பேசமுடியாத பாத்திரம் கதைமுழுக்கவே வரும். அந்த கதையோட திருப்புமுனை காட்சில அந்த பாத்திரம் பேசி எல்லோரையும் ஆச்சர்யபடுத்தும். நம்மளும் அப்படியே உச்சி குளிர்ந்து அந்த காட்சிதான் இந்த படத்துக்கே திருப்புமுனைனு நம்பஆரமிப்போம்ல அப்படி ஒரு படம். கோமால இருக்கும் அம்மா. அவங்களுக்கு மூணு பொண்ணுங்க. வெளிநாடுகள்ல இருந்து அம்மாகூட இருக்க ரெண்டு பொண்ணுங்க வராங்க. மத்ததெல்லாம் நம்ம யூகிச்சபடிதான் நடக்குது. என்ன இருந்தாலும் செண்டிமெண்ட்தான் சினிமாக்கு முக்கியம்னு நினைப்பவங்க நெறையவே இந்த படத்தை ரசிக்க முடியும். இதில் பெரிய ஆறுதல் இல்லல ஆச்சர்யம் காத்தாடி ராமமூர்த்தியை பயன்படுத்திய விதம்.

 

4. ரீயூனியன்ராஜீவ்மேனன் ?

எடுத்ததும் மின்சாரகனவு நியாபகம் வரல, காரணம் இதுக்கு முன்னாள் பார்த்த படங்கள் எல்லாமே ராஜீவ்மேனன் படங்கள் போலவே அந்த ரிச் கலர்புல் லுக்ல இருந்ததுதான். என்ன அதெல்லாம் கொஞ்சம் ரசிக்கும்படியான கதைகளோடவே இருந்தது. இந்த படம் பார்த்து முடித்ததும் மின்சாரகனவு நியாபகம் வந்தது. அதே போலவே கதை தவிர்த்து மற்ற அனைத்தும் ரசிக்கும்படி அமைந்ததால்.

 

5. மிராகிள் – கார்த்திக் சுப்புராஜ் – NORMAL

வானமே எல்லை படத்தில் கதைமுழுக்க ஒரு டிரங் பெட்டி வருமே. முழுக்க பணகட்டுகளோடு. அந்த படத்தோட கிளைகதைல முக்கியமா நகைச்சுவைக்கு அந்த பெட்டியை KB  சார் பயன்படுத்தி இருப்பார். அனால் நமக்கு படம் போக போக முக்கிய கதையை விட இந்த டிரங் பெட்டிக்கு ஏதும் ஆகிடகூடாதே. யாரோ ஒருவருக்கு அது பயன்படனுமே. யாரவது அதை திறந்துபாருங்களேனு படபடப்பு நேரம் ஆக ஆக அதிகமாகிட்டே போகும். அப்படி ஒரு கான்செப்ட்தான் இந்த படம். கார்த்திக் சுப்புராஜ் இந்த கதையை அவரோட வழக்கமான பாணில எடுத்திருக்கார். அந்த டிரங் பெட்டிமாறி தேவையில்லாத நெறைய விஷயங்கள் பின்னால போய்தான் வாழ்க்கையை தொலச்சிட்றோம்னு சார்லி, கவிதாலயா கிருஷ்ணன் பாத்திரங்களை வெச்சி மெசேஜ் சொல்லிருப்பார் KB சார். இங்க அவ்ளோலாம் இல்லை. ஆனா ஓரளவு ரசிக்கும்படியே எடுத்து வெச்சிருக்கார்.

சிறுகதை, கவிதை  போட்டிக்கு தலைப்பு சொல்றபோல இந்த படங்களுக்கு LOCKDOWN னு தலைப்பு சொல்லிடாங்க போல. அதால எல்லா கதைலயும் lockdown வருது.  அதால ஒரே வீடு மட்டும்தான் எல்லா கதைகளிலும்  அதும் கெளதம்மேனன் படத்துக்கு PC ஸ்ரீராம் சார் வொர்க் பண்ணிருக்கார். சுதா கதைல GV பிரகாஷ் மியூசிக் பண்ணிருக்கார்.  வேறொவர் கதை பண்ணினதால் முதலில் பிழைத்தது கெளதம்மேனன் தான். எல்லா கதைகளிலும் technical டீம் strong ஆக இருக்கவும் சுமாரான படங்கள்கூட forward பண்ண தோணலை. AMAZON PRIME ல இருக்கு கண்டிப்பா பாக்கலாம்.


Thursday, October 8, 2020

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது – 172


என் அப்பா பள்ளிக்கூடமே போனதில்ல. நான் பள்ளிக்கூடமும் போனேன் நல்லாவும் படிச்சேன். அப்ப நான் தெரிஞ்சிகிட்டது ஒன்னேஒண்ணுதான். இந்த உலகத்துல ரொம்ப முக்கியமானது படிப்பு மட்டும்தான். என்னோட பையனுக்கு முதல்ல நான் இததான் புரியவெப்பேன். அவனை எப்படியும் ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்த்தி படிக்கவைப்பேன். அவன் பையனுக்கு 20 வயசாகும் போது  எதுமே பண்ணனும்னு அவனுக்கு அவசியம் இருக்காது. இப்படி  சந்தோசமா இருக்கலாம். ஒருத்தன் சும்மா இருக்கணும்னா இங்க அதுக்காக 3 தலைமுறை உழைக்கவேண்டி இருக்கு.

இது மாசமா இருக்கும் தன்மனைவியோடு ஒரு நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை காட்டி நவாசுதின் சொல்லும் வசனம். இதுதான் இந்த படத்தோட சாரமும்கூட.  எதும் குழந்தைங்களோட கல்வி, எதிர்கால போட்டி உலகம்னு பாடம் நடத்தாம நவாசுதின் படங்கள்ல இருக்கவேண்டிய எல்லாமும் இருக்கும் படம். கண்டிப்பா இது குழந்தைகளுக்கான படம் இல்லை. இது முழுக்க பெற்றோர்களுக்கான படம்.

நம்ம என்ன ஆகணும்னு ஆசைபட்டோமோ, அதெல்லாம் நம்ம குழந்தைக்கு கிடைக்கனும்,   மெஹாஹிட் அடிச்ச Dangal படத்துக்கும் இதே சாரம்தான். இதுவேறமாறினு சொல்ல ஒரே காரணம். நம்ம பையனுக்கு  அதெல்லாம் கிடைக்க சுலபமா தெரியும் குறுக்குவழிகள் எதுலயும் செல்லும் தந்தையின் கதையிது. ரொம்ப சரியா தனக்கு வரும் எந்தமாறி கதைகளுக்கு உள்ளேயும் தன்னை ரொம்ப சரியா பொருத்திக்கறார். எப்பவும் தன்னை முன்னிலை படுத்திக்காம அந்த பாத்திரம் அந்த சூழ்நிலைல என்ன பண்ணுமோ அதை மட்டுமே பண்றதாலயும், அந்த கதையோட முக்கிய திருப்பம் பெரும்பாலும் இவரோட பாத்திரத்தை கொண்டே நகரும்படியான கதை தேர்வும்தான். இவர்மேல நமக்கு இருக்கும் ஈர்ப்புக்கு பெரிய காரணம்.

ஆனா ரொம்ப அதிசயமா அவர் படங்கள்ல அவரைதாண்டி வேற பாத்திரத்தின் மேல ஈர்ப்பு வந்தது இந்த படத்துலதான் நடந்தது அவரோட பையன் பாத்திரம். ரொம்ப சரியா உணர்ந்து பண்ணிருக்கான். அதும் அவன் அப்பாவும் இவனும் உரையாடும் காட்சிகள் எல்லாமே ரொம்ப யதார்த்தமா அமைய இந்த பையன் ரொம்ப பெரிய காரணம். நவாசுதினை பெருசா ரசிச்ச ஒரு இடம்.

தான் இருக்கும் சூழல், தன்னால் தன் பாஸ் (நாசர் சார்) நிலைக்கு போகமுடியாதுனு அவருக்கு நல்லாவே தெரியும். ஆனா அவர் தன்னோட பாஸ் ஒரு பிரஸ் காண்ப்ரண்ஸ் முடிச்சி எல்லோரும் கலைஞ்சி போனதும்.  அங்க அவரோட சீட்ல இவர் அமர்ந்து தனக்கு முன்னால இருக்கும் காலி இருக்கைகளை பார்க்கும் அந்த காட்சில லைட்டிங் வொர்க்கும் அட்டகாசபடுத்திருப்பாங்க.    

 suthir Mizra இயக்குனர். இவரோட Hazaaron Khwaishein Aaisi படத்துல KK மேனன் பாத்திரம் செம்மையா இருக்கும். அதே போல இந்த படத்தில் நவாசுதினும், அந்த பையனும். NETFLIXல் இருக்கு.    


Sunday, September 27, 2020

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது – 171.

CARGO (2019) – HINDI – SIMPLY WORTH

நம்ம இறந்த பின்னால நம்ம உயிர்  அதாவது, நம்ம ஆன்மா என்ன ஆகும்? எங்கே போகும்? உண்மையா அது மாறி ஏதாவது இருக்கா? இப்படியான ஆராய்ச்சிகள் உலகம் பூரா நடந்துகிட்டே இருக்கு. இதையே களமா வெச்சி நிறைய நிறைய படங்களும் வந்துகிட்டேதான் இருக்கு. அப்படி இறந்து போறவங்க ஆன்மாவையும், உடலையும்  அவங்களோட அடுத்த பிறவிக்கு தயார் செஞ்சி அனுப்பும் வேலையைதான் நாயகன் பண்றாரு. அதுக்காக பெரிய பூஜை, பரிகாரம், பெரிய சாமியாரா ஒருத்தர் இப்படி எதுமே இல்லாம, குறிப்பா பேய், பூதம்னு எந்த சமாச்சாரமும் இல்லாம ரொம்ப நீட் & க்ளீனா ஒரு படம்.

 

அதாவது ஒரு பெரிய ஸ்பேஸ் ஷிப். அதுல நாயகன் மட்டும் இருக்கார். இறந்துபோறவங்க நேரா அங்க அனுப்பி வைக்கறாங்க. அவங்க உடல், மனம் ரெண்டையும் தயார் செஞ்சி, அவங்களோட  நினைவுகளை முழுக்க அழிச்சி அவங்களோட அடுத்த பிறவிக்கு அனுப்பறார்.வருஷம் முழுக்க அந்த வேலையை அதிகாலையில் இருந்து இரவு வரைக்கும் அவர் மட்டுமே பார்த்துவரார்.

 

அந்த ஸ்பேஸ் ஷிப்தான் கதைகளம், அதனால அங்கிருக்கும் சமாச்சாரம் எல்லாமே அவங்க கதைக்கு அந்த பொருள் எங்காவது பயன்படற மாறி பாத்து பாத்து பண்ணியிருக்காங்க. அவர் அதிகமா பயன்படுத்தும் சில முக்கிய உபகரணங்கள் அடிக்கடி மக்கர் பண்ண, இவர் மேல்இடத்துக்கு தகவல் சொல்லிட்டே இருக்கார். ரொம்ப வருஷமா இவர் மட்டுமே வேலை பாத்துவரார். நாளுக்குநாள் வேலையும் இவருக்கு அதிகம் ஆகிட்டே இருக்கு, அதனால இவருக்கு ஒரு ஆஸிஸ்டன்ட் அனுப்ப முடிவெடுக்கறாங்க.

இவர் இந்த உபகரணங்கள் மட்டும் சரிபண்ணி கொடுங்க தனக்கு ஆஸிஸ்டன்ட் தேவையில்லைனு சொல்லி பாக்கறார். ஆனா அவங்க இந்த வேலைக்கு நல்ல பயிற்சி பெற்ற ஒரு பொண்ணை அனுப்பறாங்க. இதுக்கு பின்னால நம்ம யூகிக்கும்படி எதுவும் இல்லாம ஆனா, சுவாரசியமா வேற என்ன நடந்தது, அதுதான் மீதி கதை.

 

எமதர்மன், எருமைமாடுனு எந்த வழக்கமான சமாச்சாரங்களும் இல்லாம. இறந்துபோறவங்களோட அந்த கடைசி நிமிச துடிப்பை எதும் நமக்குகாட்டி கஷ்டபடுத்தாம. அடுத்த கார்கோ எப்ப வரும்னு நம்மளையும் ஆவலா எதிர்பார்க்க வெச்சது. ஒரு கல்யாண கோஷ்டி பஸ் ஆக்ஸிடண்ட் ஆகி  இவரோட ஸ்பேஸ் ஷிப்க்கு வர காட்சினு, நிறைய புது அனுபவங்கள் இந்த படத்துல இருக்கு. புராண கதைகளை இப்படி சயிண்ஸ் பிக்ஷனுக்குள் கொண்டு வர முயற்சி பண்ணதுகாகவே பாராட்டலாம். இனி இதை அடிப்படையா வெச்சே இன்னும் நிறைய கதைகள் எதிர்பார்க்கலாம்.  NETFLIXல் காண கிடைக்கிறது.

Sunday, September 20, 2020

 



பார்த்ததில் மிகவும் ரசித்தது – 170


இது நம்ம ஆளு படத்துல ஷோபனா கூட கல்யாணம் ஆகி ஒண்ணா இருக்கமுடியாத சூழ்நிலைல. அவங்ககூட தனிவீட்ல இருக்கமுடியாதுனு பாக்யராஜ் மறுப்பாரு. அதுக்கு அவரோட அப்பா குமரிமுத்து பாத்திரம் சொல்ற வசனம்.


“டேய்.. சபரிமலைக்கு மாலை போட்டுட்டு தண்ணிஅடிக்காம இருக்கறது பெரிய விஷயம் இல்லடா. ஒயின் ஷாப்ல வேலை பாத்துட்டே தண்ணி போடாம இருக்கறதுதான் பெரிய விஷயம்னு. கிட்டத்தட்ட இதே நிலையில இந்த படத்துல ஒரு பாத்திரம் வரும்.


கிட்டி, அவங்களுக்கு முழு சுதந்திரமும், எல்லா வாய்ப்பும் இருந்தும் எந்த தப்புதண்டாவும் பண்ணாம இருக்கணும்னு இருப்பாங்க. இவங்க ஒரு சின்ன ஊர்ல இருந்து அவங்க அக்கா குடும்பம் இருக்கும் டெல்லிக்கு வேலை தேடி வருவாங்க. அக்கா வீட்ல தங்கி வேலைக்கு முயற்சிபண்ணுவாங்க. கூடவே வெளிய தங்கிக்கவும் முயற்சி பண்ணிட்டு இருப்பாங்க. இந்த “டோலி”ங்கற அக்காவும், அவங்க தங்கச்சி முறை பொண்ணு கிட்டியும்தான் இந்த படம்.


இந்த கிட்டிக்கு நேர்மாறான பாத்திரம் டோலிக்கு. அவங்க கணவருக்கு தெரியாம நிறைய சின்ன சின்ன பொய். வேலை செய்யும் இடத்துல பணம் கையாடல் பண்றது. வீட்லயே  யாருக்கும் தெரியாம தண்ணி அடிக்கறது, க்ளாமரா துணிங்கவாங்கி ஆபீஸ்க்கே துணிஞ்சி போட்டுட்டு போய் கூட வேலை பாக்கறவங்கள அதிர்ச்சியாக்கறதுனு கலக்கல் பாத்திரம் அவங்களுக்கு.    

 கிட்டிக்கு எந்த வேலையும் சரியா அமையல. இருக்கும் வேலைல கூட அவங்களால பெருசா ஈடுபாடு காட்டமுடியல. இந்த நிலையில அவங்களுக்கு நல்ல சம்பளத்துல ஒரு வேலை அமையுது. அதுகூடவே அவங்களுக்கு அமையும் நட்பும். ஆழமா ஒரு காதலும் கிடைக்குது. இது மூலமா அவங்க ஆரம்பத்துல இருந்த நிலைல இருந்து எப்படிலாம் மாறுறாங்கனும். அதே சமயத்துல அவங்க அக்கா டோலி அவங்க பண்ண சின்ன சின்ன தப்புகள்ல இருந்து எப்படிலாம் அவங்கள திருத்திகறாங்கனு கதை வரும்னு நம்ம யூகிப்போம்.


ஆனா அப்படி அவங்க தவறுகள்ல சுட்டிகாட்டும் படி படத்தோட இறுதிவரை எந்த நெருக்கடியும் வரமா திரைகதை பண்ணிருக்காங்க. கூடுதலா அவங்களுக்கும் இந்த கதைல ஒரு காதல் வருது. அக்கா, தங்கை ரெண்டு பேருக்கும் இந்த கதைல பொதுவா அமைஞ்ச விஷயம் இந்த காதல். அதை வெவ்வேறு குணாதிசயங்களோட இருக்கும் இந்த ரெண்டு பெரும் எப்படி கையாண்டாங்க. அதோட விளைவுகளை எப்படி எதிர்கொண்டாங்க இதுதான் இந்த படத்தோட முழுகதை.


அக்கா டோலியா Konkona Sen. முழுபடமும் நம்ம பாக்க இவங்க பாத்திரம் ரொம்ப முக்கிய காரணம். தங்கையா Bhumi Pednekar. Dum Laga Ke Haishaல கூட கதைக்காக உடம்பை ரொம்ப அதிகமா ஏத்தி aayushmaan Kurraanaக்கு மனைவியா வருவாங்களே அதே பொண்ணு. படத்தோட டைரக்டர் நம்ம Lipsstick Under my Burkha படத்தோட ரைட்டர். அதுல எவ்ளோ புதுப்புது சீன்ஸ்,  அத எவ்ளோ அழகா எமோஷனலா கொண்டுவந்து முடிச்சிருப்பாங்க.


இவங்க ரைட்டரா அந்த படத்துல பண்ண எல்லாமும் இதுலயும் இருக்கு, நல்லாவும் பண்ணிருக்காங்க. ஆனா அதுல இருந்த அந்த  எமோஷனல் டச் இதுல ரொம்ப கம்மி. டைரக்டரா அதை இந்த படத்துல தவறவிட்டுடாங்க. இல்ல இந்த கதை, இதுக்கு இந்த அளவுல மட்டும் இருந்தாவே போதும்னு விட்டாங்களா தெரியல. NETFLIXல் காணகிடைக்கிறது. 


Saturday, September 12, 2020

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது : 090.

உலகின் ZOMBIE வகை படங்களில் ஹிட்டடித்த அனைத்து படங்களையும் ஓரம்கட்டி உலகின் தி பெஸ்ட் ZOMBIE மூவி என்ற இடத்தை பிடிக்கப்போகும் திரைப்படம்.

கொரியன் சினிமா வரலாற்றில் அதிக மக்கள் திரைஅரங்கில் பார்த்த படம். கொரியன் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம். கொரியன் சினிமா வரலாற்றில் அதிக நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம். ஆசியாவின் முன்னணி சினிமா சந்தையான இந்தியாவின் உள்ளும் அவர்கள் படங்கள் முதன்முறை எட்டியுள்ளது.

நமக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பின்பே சினிமா துறையில் நுழைந்வர்கள். இன்றும் நம்மை விட சரிபாதி எண்ணிக்கை படங்களை மட்டுமே ஆண்டொன்றுக்கு வெளியீடு செய்பவர்கள். நாம் இந்த வகையறா படங்களில் ஆரம்பகட்டத்தை கூட எட்ட முடியாத சூழலில், இவர்களால் எவ்வாறு இந்த உயரத்தை தொட முடிந்தது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச்சரியாக பின்பற்றும் நாம் நம்மையும் அறியாமல் நமது நேட்டிவிட்டியை மறந்து முழுக்க அதன் பின்னே சென்றதன் விளைவு இங்கேயே தேங்க வேண்டிய சூழல். இந்த உலகமயமாக்கள் எனும் குறுக்கு வழியின் பின்னே சென்றால் உலகளாவிய இடத்தை எளிதில் பிடித்து விடலாம் என்ற நமது எண்ணமும் பொய்த்துபோய் உள்ளது.

ஏன் அவர்கள் தொழில் நுட்பத்தையும் உலகமயமாக்கலையும் பின்பற்றவில்லையா?..

அவர்களும் மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டார்களே அன்றி அதை பின்பற்றவில்லை. எந்த தொழில்நுட்பத்திற்காகவும் அவர்கள் படம் இயக்கவில்லை. தங்கள் கதையின் சூழலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே அதை பயன்படுத்திகொண்டனர். அங்கு எந்த தொழில் நுட்ப வல்லுனர்களையும் கதாசிரியர்களுக்கு இணையாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை.

வரும்காலங்களில் நிச்சயம் மிகப்பெரும் வணிகத்தை இந்திய சந்தையில் கொரியன் சினிமாக்கள் நிகழ்த்தப்போவது சர்வநிச்சயம். நாம் நினைத்த, நினைக்கும், நினைக்காத கொரியன் படங்களை நமது மொழியில் கண்டுமகிழ்வோம்.

ஐயாயிரம் கிலோமீட்டர் தாண்டி நம் திரைஅரங்கை அடையும் அளவு இந்த படத்தில் என்ன உள்ளது?..

உலகமயமாக்கலை பயன்படுத்திகொள்ளும் வித்தையை  தெரிந்துகொள்ள மட்டுமன்றி, ஆங்கில படங்களுக்கு நிகரான மேக்கப் மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பதை பயன்படுத்திய விதம். இவை இரண்டும் தங்களது கதை மற்றும் திரைக்கதை துளியும் சேதப்படுத்தாமல் தங்களது கலாச்சாரத்தை ஒட்டிய உலகளாவிய சினிமாவை வரவேற்ப்போம்.

இதுவரை இந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இல்லாதோர் நிச்சயம் திரைஅரங்கில் குடும்பத்துடன் காண முழுத்தகுதியும் உள்ள சினிமா.


Friday, August 14, 2020

 






பார்த்ததில் மிகவும் ரசித்தது – 169

OMERTA (2017) – HINDI – HANSAL MEHTA MOVIE.

ஒரு படைப்பாளனுக்கு அவன் நினைத்ததை திரையில் கிட்டத்தட்ட கொண்டுவரும் ஒரு கலைஞன் அமைவது அபூர்வம். கற்பனையில், காகிதத்தில் நாம் என்ன வேண்டுமானாலும் யூகித்தோ, எழுதியோ வைத்துகொள்ளலாம். அதை திரையில் அதே வடிவத்துடன் பார்வையாளனுக்கு கடத்துவது எளிதானது அல்லவே. ஹன்சல் மெஹ்தா இந்த படத்தின் இயக்குனர். இவருக்கு அப்படியான ஒரு தேர்ந்த கலைஞன் கிடைத்தான், அல்லது அவனை கலைஞனாக உருவாக்கினார் எப்படியும் பொருத்தி கொள்ளலாம்.

 

ஆம், இந்த தலைமுறையில் ஹிந்தி சினிமாவில் நிச்சயம் முன்னணியில் நிச்சயம் சோபிக்கபோகும்  முதல் மூன்று நபர்களில் ஒருவர். 2010-11 களில் சின்ன சின்ன வேடங்களில் பாலிவுட்டில் பணியாற்றி கொண்டிருந்த வேளையில் 2012ல் முதல் தனி நாயகன் திரைப்படத்தை இவருக்கு கொடுத்ததும் ஹன்சல் மெஹ்தாதான். ரொம்ப ஆழமான சமுதாய பிரச்சனை பற்றி அலசும் கதை. அதில் வழக்கமான வக்கீல் வேடத்திற்கான எந்த மிடுக்கும் இல்லாத சராசரியில் ஒருவராய் அந்த பாத்திரத்தை மிக கவனமாக கையாண்டு இருப்பார்.

 

அந்த கவனத்தின் பரிசாககூட சொல்லலாம்  kai po che,  queen என அடுத்த வருடத்திலே படங்கள் அமைய இந்திய அளவில் பரிச்சயமான நடிகராக துவங்கினார். விதவித வேடங்கள் கிடைத்தாலும், மீண்டும் அவருக்கு தனி கதாநாயக அந்தஸ்தை அதே ஹன்சல் மெஹ்தாதான் கொடுத்தார். இம்முறை ராஜஸ்தானில் இருந்து மனைவி மற்றும் மகளுடன் பஞ்சம் பிழைக்க மும்பை வரும் குடும்பஸ்தனின் கதை. முழுபடமும் இவரின் தோள்களில் அட்டகாசபடுத்தி இருப்பார்.

 

இந்த இயக்குனர் மற்றும் நடிகரின் காம்போவில் எனது விருப்பமான படம் இது. நம் கடைவீதிகளில் வடநாட்டவரின் கடைகளில் பணிபுரியும், பெரும் கேசத்தை படியவாறி காதுகளில் செம்பு உலோகத்தாலான அந்த நட்சத்திர வடிவ ஸ்டட் அணிந்துள்ளோரை பார்த்திருப்போமே. அப்படியே அதன் அச்சுபிரதி பாத்திரம் அவருக்கு. அப்படத்தை பற்றி வேறொரு முறை விரிவாக எழுத வேண்டும். அதற்க்குபிறகும் சொல்லிகொள்ளும்படியான பெரிய பாத்திரங்கள் அமையவில்லை.


 மீண்டும் 2015 ல் இதே இயக்குனரின் Aligarh படம். ஓரினசேர்க்கையாளர் பற்றிய படம். இந்த முறை நாயகனுக்கு மிகபெரும் சவால். இந்த படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்த Manoj Bajpayee யுடன் இவருக்கு நிறைய காட்சிகள். அவர் பாத்திரத்தின் தன்மை அறிந்து அவருக்கு இணையாக பிரமாதபடுத்தி இருப்பார். அடுத்தடுத்த வருடங்களில் Trapped, Newton என தனித்துவ கதைகள் அமைந்து இந்தியா சார்பில் Oscar க்கு (Newton)தேர்ந்தெடுக்கபட்டது. இப்படி இந்தியாதாண்டி அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயபானவராக துவங்கிய காலகட்டத்தில் மீண்டும் இதே இயக்குனருடன் இவர் மீண்டும் இணைந்த படம் இது.


90களில் காட்மாண்டு டூ புதுடெல்லி வந்த விமானம் கடத்தப்பட்டது. அந்த பயணிகளை விடுவிக்க இந்தியாவசம் இருந்த மூன்று தீவிரவாதிகளை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. இதில் மூளையாக செயல்பட்ட லண்டனில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞனின் கதை. இதே முறையை பின்பற்றிதான் பின்னாளில் அமெரிக்காவில் விமானம்மூலம் நடத்தபட்ட தாக்குதலும் நடந்தேறியது. 

அச்சு அசல் அந்த இளைஞனனின் பிரதிபலிப்பாக இதில் தெரிவார். இதற்கான அவரின் ஒத்திகையின் தீவிரம் திரையில் அந்த இளைஞனாக எவ்வளவு எளிதாக பிரதிபலித்துள்ளார் என்பதில் தெரியும். ZEE5 தளத்தில் காணகிடைக்கிறது. 

Saturday, August 8, 2020

 

WEB SERIES – 008


ASUR: WELCOME TO YOUR DARK SIDE (2020) – SEASON 01 – EPISODES 08 – மீண்டும் ஒரு கொலை

 

சமீபமாக நிகழ்ந்த இந்த லாக்டவுன் முதல் அதிகம் பரிந்துரைக்கப்படும் படங்கள் முதல் ஹிட் அடித்த தொடர்கள் வரை.  பெரும்பாலும் அவை ஒரு கொலை, அதை ஒட்டிய கதை இவ்வாறே அமைகின்றன. அந்த வரிசையில் மீண்டும் ஒரு சீரீஸ். தொடர் கொலைகள், அதை ஒட்டிய விசாரணை, அந்த கொலையாளியை தேடல் என்ற அதே பாணியில் அமைந்த ஒரு தொடர்.

அதே வழக்கமான கதையில் முதல் எபிசோடின் முதல் பத்து நிமிடங்களுக்கு உள்ளேயே ஒரு கொலை நிகழ்கிறது அது போதுமானதாக இருந்தது நம்மை இந்த தொடருடன் இணைத்துகொள்ள. கொலை செய்யப்படும் நபரிடம் எந்த வீண் வாதங்கள் மற்றும் அவர்களின் அழுகுரல். அவை நமக்கு ஏற்படுத்தும் மனஉளைச்சல். இப்படி ஏதும் இல்லாமல் அந்த நபர் சுதாரிப்பதற்குள் சட்டென ஒரு கொலை.

ஆனால் அதன் வீரியத்தை நமக்குள் ஆழமாக பதிக்கும்வண்ணம் அடுத்து அவனின் செயல்கள். முடித்து அந்த சடலத்தை அவன் காவல்துறைக்கு display செய்தவிதம். இந்த தொடரை அத்துடன் நிறுத்தாமல்  தொடர்ந்து பார்க்க மூலகாரணி. இந்த முழு தொடரின் எட்டு அத்தியாயங்களை ஒரே இரவில் முடிக்க மிகபெரும் காரணம் முதல் அத்தியாயம் முடித்த விதம்.

ராஜேஷ்குமார் நாவல்களில் பெரும்பாலும் ப்ரெசென்ட் கதை ஒரு அத்தியாயமும், பாஸ்ட் அல்லது முதல் அத்தியாய கதை சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களுடன் சம்பந்தம் அல்லாத வேறொரு கதை ஒரு அத்தியாயமாக வரும். அவ்விரண்டு கதைகளும் சேரும் அந்த லீடுடன் அல்லது ஒரு அத்தியாயத்துடன் அக்கதை நிறைவுறும். அப்படியாக இதிலும் டைட்டிலுக்கு முன் ஒரு நிமிட டீசர் போன்ற ஒரு பாஸ்ட் கதை சொல்லபடுகிறது.


தற்போது நிகழும் இந்த தொடர் கொலைக்கும், அந்த பாஸ்ட் கதைக்குமான தொடர்பை நாமே இணைத்திட  துவங்கிவிடுவோம். அதிலும் அந்த கதை மிக எளிதாக ஒரே லீட்டுடன் மட்டுமே பயன்படும். ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் இந்த ஒரு நிமிட கதையும், அதற்க்கு பின்னான டைட்டில் கார்டும் நிச்சயம் அந்த அத்தியாயத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

துவக்கத்தில் நமக்கு காண்பிக்கப்படும் அந்த கொலை, கதையில் நிகழும் மூன்றாவது கொலை ஆதலால் இந்த வழக்கு முன்பே சிபிஐ விசாரணையில் இருக்கும். இவ்வழக்கை விசாரிக்கும் குழுவில் திறமையில் கிட்டத்தட்ட சரிசமமான இருவர். உடன் அந்த இருவருக்குமான ஈகோ மோதல் போன்ற எந்த வளவளா சமாச்சாரங்களும் இல்லாமல். ஒரே நூல் பிடித்தது போன்ற நேர்கோட்டில் செல்லும் கதை.

இப்படியான திரைக்கதையில் எந்த பெரிய ஓட்டையும் இல்லாத கதைகள். நாம் எந்த மொழியில் பார்த்தாலும். அவை தமிழிலேயே பார்ப்பது போன்ற ஒரு நெருக்கமான உணர்வை தரும். சமீபமாக PAATAL LOK. கிட்டத்தட்ட அதற்க்கு இணையான ஒரு சீரீஸ் இது. ஆனால் அந்த நெருக்கம் இல்லாமல் வேற்றுமொழி படம் பார்க்கும் உணர்வை தர முக்கிய காரணம். ஹிந்து mythology அடிப்படையாக கொண்டு இயங்குவது.

திரைக்கதைபடி இந்த முறை சரியென்றாலும். அவை புரியாத பெரும்பாலோருக்கு இந்த கதையுடனான நெருக்கம் சற்று குறைவாகவே இருக்கும். முதல் சீசன் முடிவில்  அடுத்த சீசனுக்கான லீட் அட்டகாசமான எதிர்பார்ப்புடன் நிறைவு செய்திருக்கிறார்கள். VOOT ஆப்பில் காண கிடைக்கிறது.                     

 

 


Saturday, July 11, 2020


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 168.

  

குழந்தைகளை இதுவரை திரைப்படங்களில் சற்று நாம் நம்பமறுக்கும் அல்லது நாம் ஏற்க தயங்கும் காட்சிகளில்,  நம்மை எளிதாக அந்த காட்சிகளோடு ஒன்ற செய்யவும், அந்த பாத்திரங்களின் மீது ஒரு எதிர்பார்போ, பரிதாபமோ ஏற்படவே அவர்களை பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்கான சினிமா என குறிப்பிடப்பட்ட திரைப்படங்களில் கூட அவர்களுடைய தேவைகளை, அவர்களின் அகஉலகை பெரும்பாலும் பேசியதில்லை.


ஒரு படத்தை பார்க்க தேர்ந்தெடுக்கும் காரணிகளில் மிக முக்கியமானது. சினிமாதுறையில் தயாரிப்பாளர்கள் தவிர்த்து மற்ற துறைகளில் இருந்து எவரேனும் பிரபல நாயகனோ இயக்குனரோ இல்லாத ஒரு படத்தை தயாரிக்கமுன்வருவது. அதற்கு மிகமுக்கிய காரணமாக இருக்கபோவது அப்படத்தின் கதையை தவிர்த்து வேறெதுவும் இருக்காது.  அப்படியாகவே இந்த படமும் நாம் பார்க்கும் படபட்டியலில் வந்து சேர்ந்தது. பிரியங்காசோப்ரா இவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். உடன் சிக்கிம் அரசும், மத்திய அரசின் Children Film Soceity of India வும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள்.


ஒரு படம் அதன் மிக முக்கிய அம்சம் அதாவது கோல்டன் மினிட்ஸ் அதிகபட்சம் முதல் 30 நிமிடங்களுக்குள் இதுதான் கதை என பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுவது. அந்த வகையில் இந்த படம் அதன் முதல்ஷாட்டே  இந்த இப்படத்திற்கான கதையின் துவக்கபுள்ளியில் இருந்தே ஆரமித்து. படத்தின் டைட்டில் கார்டுக்கு முன்பே இதுதான் இந்த படத்திற்கான கதை எனவும் நமக்கு உணர்த்திவிடுகிறது.


மேகங்களில் இருந்து விலகி இயற்கையின் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு மலைகிராமத்தின் அருகில் கேமரா செல்ல செல்ல தூரத்தில் ஒரு துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்கிறது. அங்கிருந்து துவங்கும் கதை கேமரா அருகில் செல்ல செல்ல அந்த மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்துகொண்டு அங்கிருந்து கிளம்பஆயத்தமாகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் கேமரா செல்ல அங்கு இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரும் உணவு பொருட்களை பரபரப்பாக சேகரித்து கொண்டிருக்கின்றனர். ராணுவமோ, ஏதேனும் தீவிரவாத குழுவோ அல்லது மாவோயிஸ்டுகளோ அந்த கிராமத்தினுள் நுழைந்து கொண்டிருகின்றனர். அவர்கள் யார் என்பதும், எதற்காக இங்கு நுழைந்து சேதபடுத்துகின்றனர் என்பது இந்த கதைக்கு தேவையல்லாதது என்பதால் அந்த துப்பாக்கி ஓசையோடே அவர்களை பற்றிய எந்த தகவலும் கதைக்குள் வரவேயில்லை.


அந்த பரபரப்பில் இருந்த குடும்பம் தாங்கள் சேகரித்த பொருட்களுடன் தங்கள் ஆண் மற்றும் பெண் குழந்தை மற்றும் உறங்கிகொண்டிருக்கும் ஒரு கைக்குழந்தை என இந்த ஐவருடன் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி கிராம மக்களுடன் அந்த கிராமத்தை ஒட்டிய காட்டினுள் நுழைகின்றனர். அங்கேயே தயங்கி நிற்கும் அந்த குடும்பத்தின் தலைவன். அவன் மனைவியிடம் தான் அவர்கள் எந்த வழியாக திரும்பி செல்கின்றனர் என்பதை பார்த்து வருவதாக கூறி இவர்களை மட்டும் அந்த கிராம மக்களுடன் அனுப்பிவிட்டு வந்த வழியே செல்கிறான்.


அவன் சென்ற சில வினாடிகளிலேயே இரண்டாம் முறை துப்பாக்கி ஒலிக்கும் ஓசை கேட்கிறது. அங்கு சென்றுகொண்டிருந்த குழுவில் அவனது மனைவியும், மகளும் மட்டும் அதிர்ச்சியுடன் நிற்கின்றனர். அடுத்த சில வினாடிகளில் அம்மனைவி தன் மகன் மற்றும் மகளிடம் கைகுழந்தையை ஒப்படைத்து தான் அப்பாவை அழைத்து வருவதாகவும் அதுவரை இந்த குழுவை விட்டு எங்கும் சென்றிடவேண்டாம் என கூறி செல்கிறாள்.


இந்த இடம் இருபக்கமும் அடர்ந்து ஓங்கி உயர்ந்த பனிமலையும் அதில் அடர் மரங்கள் சூழ்ந்த வனமும். இதன் இடையே ஓடும் ஆற்றின் பாலத்தின் நடுவில் அந்த பெண்மணி தனது இருகுழந்தைகள் மற்றும் ஒரு கைக்குழந்தைகளை விட்டு செல்கிறார். இங்கிருந்து காமெரா ஜூம் அவுட் ஆக ஆக டைட்டில் கார்ட் துவங்குகிறது. இது படம் துவங்கி இரண்டாம் நிமிடம் வரும் காட்சி. இங்கேயே இந்த படத்தின் கதை இதுதான் என நமக்கு உணர்த்திவிடுகின்றனர்.


அந்த குழுவுடன் பயணிக்கும் அந்த குழந்தைகள் இருவரும் அந்த கைகுழந்தையுடன் அடுத்த சில நிமிட காட்சிகளிலே அவர்களை விட்டு பிரிந்து காட்டினுள் செல்ல முடிவேடுகின்றனர். எதனால்? பின் நடந்தது என்ன?.. NETFLIX ல் காணகிடைக்கிறது.                 


Search This Blog